பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், இன்றும் மக்களிடத்தில் மிக பாதுகாப்பான திட்டங்களாக இருப்பது அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் தான். ஏனெனில் முதலீட்டுக்கு பங்கமில்லாத, பாதுகாப்பான நிரந்தர வருமானம் தரக்கூடிய முதலீட்டு திட்டங்களாக பார்க்கப்படுகிறது.
பலரும் இன்று கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. வயதான காலத்திலாவது நன்றாக இருக்க வேண்டும் . குறிப்பாக மாத மாதம் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் ஓய்வுத் தொகைபோல பென்ஷன் கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைப்பார்கள்.
அப்படி வாய்ப்பினை வழங்கும் அஞ்சலகத்தின் மாதாந்திர வருமானம் தரும் சேமிப்பு திட்டத்தினை பற்றித் தான் நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
வயதானவர்களுக்கு ஏற்ற திட்டம்
அஞ்சலகத்தின் மாதாந்திர வருவாய் (MIS) திட்டத்தில் ஒரு முறை முதலீடு செய்வதன் மூலம் மாத மாதம் வருமானம் பெற முடியும். இதனால் இது வயதானவர்களுக்கு ஏற்ற ஒரு பாதுகாப்பான ஒரு முதலீடாக பார்க்கப்படுகிறது. இது வயதான காலகட்டத்தில் நிதி ரீதியிலாக ஒரு பாதிப்பினை கொடுக்கிறது. இது வயதாக காலத்தில் நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்க வழிவகுக்கும்.
எவ்வளவு முதலீடு செய்யலாம்?
ஒரு தனிநபர் இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 1,500 ரூபாய் முதல் 4.5 லட்சம் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம். இதனை கூட்டு கணக்காகவும் தொடங்கிக் கொள்ளலாம்.கூட்டு சேமிப்பு திட்டத்தில் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். இந்த மாதாந்திர வருமான திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும். இதனை முதிர்வுகாலம் முடிந்த பின்னரும் நீட்டித்துக் கொள்ளலாம்.
சிம்பிள் வட்டி தான்
அஞ்சலகத்தின் இந்த மாத வருவாய் திட்டத்திற்கு தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.6% என்ற விகிதத்தில் உள்ளது. இதில் கூட்டு வட்டி கிடையாது. சிம்பிள் (Simple interest ) வட்டி தான். நீங்கள் அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டத்தினை தொடங்கிய தேதியிலிருந்து, ஒரு மாதம் நிறைவு பெற்ற பிறகு வட்டி வழங்க ஆரம்பிக்கப்படும். மற்ற திட்டங்களை போல முதலீடு செய்த நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
இது தான் சிறப்பு
இந்த திட்டத்தினை பொறுத்தவரையில் முதிர்வு காலம் வரை இந்த வட்டி தொகை வழங்கப்படும். வட்டி தொகையை நீங்கள் மாதந்தோறும் எடுக்காவிட்டாலும், வட்டித் தொகைக்கு கூடுதல் வட்டி வழங்கப்படாது. எனினும் வட்டி ஆரம்பம் ஆரம்பத்தில் எப்படியோ- திட்டம் முழுவதும் அப்படி தான் கிடைக்கும். அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப வட்டி விகிதத்தினை மாற்றிலும், உங்கள் பலனில் மாற்றம் இருக்காது. இதனால் வட்டி குறையுமோ என்ற அச்சம் இருக்காது.அதேசமயம் வட்டி அதிகரித்தாலும் அதிகரிக்காது என்பது நினைவுகூறத்தக்கது.
இடையில் முடித்துக் கொள்ளலாமா?
இந்த மாதாந்திர வரவாய் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும். எனினும் இடையில், 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை மூடப்பட்டால் 2% வரை தொகை கழிக்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு எனில் 1% கழிக்கப்படும். இந்த திட்டத்தில் நாமினி வசதி உண்டு. ஆக உங்களுக்கு பிறகு உங்கள் குடும்பத்தினர் இந்த சலுகையினை பெறுமாறு செய்து கொள்ளலாம். அதேபோல உங்களது முதலீட்டுக்கு கிடைக்கும் வட்டி வருமானமாக கருதப்பட்டு, அதற்கு நீங்கள் வரி செலுத்த வேண்டியிருக்கும்.
மாத வருமானம்?
ரூ.1 லட்சம் முதலீடு - மாதம் 550 ரூபாய் வட்டி கிடைக்கும்.
ரூ.2 லட்சம் முதலீடு - மாதம் 1,100 ரூபாய் வட்டி கிடைக்கும்.
ரூ.3 லட்சம் முதலீடு - மாதம் 1,650 ரூபாய் வட்டி கிடைக்கும்.
ரூ.4 லட்சம் முதலீடு - மாதம் 2,200 ரூபாய் வட்டி கிடைக்கும்.
ரூ.4.5 லட்சம் முதலீடு - மாதம் 2,475 ரூபாய் வட்டி கிடைக்கும்.
ரூ.9 லட்சம் முதலீடு - மாதம் 4,950 ரூபாய் வட்டி கிடைக்கும்.
மாதம் ரூ.2500 எப்படி?
நீங்கள் தனிநபர் கணக்கு வைத்திருப்பவர் என்றால் 4.5 லட்சம் முதலீடு செய்வதன் மூலம், ஆண்டிற்கு 29,700 ரூபாய் வட்டியாக உங்களால் பெற முடியும். இதனை மாத மாதம் கணக்கிட்டால் மாதம் 2,475 ரூபாயாக இருக்கும். இதே ஜாய்ண்ட் அக்கவுண்ட் எனில் 9 லட்சம் முதலீடு செய்வதன் மூலம், 59,400 ரூபாய் வட்டியாக பெற முடியும். இதை நீங்கள் மாதாந்திர வருவாயாக கணக்கிடும் போது, மாதம்தோறும் 4,950 ரூபாய் வருமானம் கிடைக்கும்.