இந்தியாவினை பொறுத்தவரையில் இன்றைய காலத்தில் பல ஆயிரம் முதலீட்டு திட்டங்களை கொண்டு இருந்தாலும், இன்றும் மக்களிடத்தில் முக்கிய அம்சம் பெறுவது அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் தான். இது முதலீட்டுக்கு பங்கமில்லாத, பாதுகாப்பான கணிசமான வருவாய் தரக்கூடிய முதலீட்டு திட்டமாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் நாம் இன்று பார்க்ககூடிய திட்டம் "அஞ்சலக மாதாந்திர வருமானம் தரும் சேமிப்பு திட்டம்" தான்.
இந்த திட்டத்தின் மூலம் மாத மாதம் வருவாய் பெற முடியும் என்பதால், ஒரு பாதுகாப்பான, வயதானவர்களுக்கு ஏற்ற ஒரு முதலீடாக பார்க்கப்படுகிறது.
எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
ஒரு தனிநபர் இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 1,500 ரூபாய் முதல் 4.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தினை தனிநபர் அல்லது கூட்டு சேமிப்பு திட்டமாகவும் தொடங்கிக் கொள்ள முடியும். கூட்டு சேமிப்பு திட்டத்தில் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். கூட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் செய்யும் முதலீடு அவர்களுக்கு சமமான பங்கு இருப்பதாக கருதப்படும்.
வட்டி எவ்வளவு?
அதெல்லாம் சரி, மாதம் தோறும் 4,950 ரூபாய் வருவாய் எப்படி? வாருங்கள் பார்க்கலாம்? கடந்த ஆண்டு முதற்கொண்டே அஞ்சலக திட்டங்களுக்கு வட்டி விகிதம் மாற்றப்படவில்லை. குறிப்பாக அஞ்சலக மாத வருவாய் திட்டத்தின் வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.6% என்ற விகிதத்திலேயே உள்ளது.
எப்படி சாத்தியம்?
நீங்கள் தனிநபர் கணக்கு வைத்திருப்பவர் என்றால் 4.5 லட்சம் முதலீடு செய்வதன் மூலம், ஆண்டிற்கு 29,700 ரூபாய் வட்டியாக உங்களால் பெற முடியும். இதே ஜாய்ண்ட் அக்கவுண்ட் எனில் 9 லட்சம் முதலீடு செய்வதன் மூலம், 59,400 ரூபாய் வட்டியாக பெற முடியும். இதை நீங்கள் மாதம் மாதம் வருவாயாக கணக்கிடும் போது, மாதம்தோறும் 4,950 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
மாத மாதம் வட்டி கிடைக்கும்
நீங்கள் அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டத்தினை தொடங்கிய தேதியிலிருந்து, ஒரு மாதம் நிறைவு பெற்ற பிறகு வட்டி வழங்கப்படும். அதேபோல அந்த முதலீட்டு தொகை முதிர்ச்சி அடையும் வரை இந்த வட்டி தொகை வழங்கப்படும். மாதந்தோறும் வட்டி தொகையை எடுக்காவிட்டாலும் வட்டித் தொகைக்கு கூடுதல் வட்டி வழங்கபடாது.
கூடுதல் முதலீடு?
இந்த திட்டத்தின் கீழ் கூடுதலாக செலுத்தப்படும் வைப்பு தொகைக்கு, சாதாரண அஞ்சல் சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தின் அடிப்படையிலேயே வட்டி வழங்கப்படும். இந்த கணக்கினை இந்தியாவின் எந்த மூலைக்கும் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். அதோடு ஜாயிண்ட் அக்கவுண்டாக தொடங்குகிறீர்கள் எனில், மூன்று பேர் வரையில் இணைந்து தொடங்கிக் கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு முதலீடு
இந்த மாதாந்திர சேமிப்பு திட்டத்தினை குழந்தைகளுக்கு தொடங்குகிறீர்கள் எனில், அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம். 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாவலரின் துணையுடன் தொடங்கிக் கொள்ளலாம். இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும். இருப்பினும் 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகாள் வர மூடப்பட்டால் 2% வரை தொகை கழிக்கபப்டும். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு எனில் 1% கழிக்கப்படும்.