தற்போது உள்ள நடுத்தர வர்க்கத்தினர் சேமிப்பு குறித்து பயப்படுவதற்கு முதல் காரணம் என்னவோ தங்களுடைய முதலீட்டுக்கே நஷ்டம் வந்துவிடுமோ? என்ற பயம்தான். கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை யார் தான் இழக்க விரும்புவார்கள். அதனால் தான் போஸ்ட் ஆபீஸ்களில் பல்வேறு நல்ல திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. பங்குச்சந்தை முதலீடுகளில் ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் கேரண்டியான வருமானத்தைப் பெறலாம்.

போஸ்ட் ஆபீஸ்களில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்படுகிறது. அதில் முக்கியமாக திட்டம் என்றால் அது பொது வருங்கால வைப்பு நிதி என்று சொல்லப்படும் பிபிஎஃப் (PPF) திட்டம். பல தலைமுறைகளாக நம்பிக்கைக்குரிய திட்டமாக PPF திட்டம் இருந்து வருகிறது. இதில் காசை போட்டால் திரும்ப வராது என்கிற பயமே இல்லை. ஏனெனில் நேரடியாக இந்திய அரசால் நிர்வகிக்கப்படும் திட்டம் என்பதால் உங்களுடைய முதல் பாதுகாப்பாக இருப்பதோடு, நீங்கள் போடும் முதலீட்டுக்கு கூட்டு வட்டியும் சேர்ந்து கிடைக்கும்.
பிபிஎஃப் திட்டத்தின் நன்மைகள்: அரசால் நிர்வகிக்கப்படும் திட்டம் என்பதால் பாதுகாப்பான வருமானத்தை பெறலாம். இதில் உங்கள் முதலீட்டிற்கு உத்திரவாதமான வருமானம் கிடைக்கும். அதோடு தற்போது ஆண்டுக்கு 7.1% வரை வட்டி வழங்கப்படுகிறது. ஆக உங்களுடைய முதலீட்டுத் தொகை மற்றும் உங்கள் முதலீட்டுக்கு கிடைத்த வட்டி ஆகிய இரண்டையும் வரி இல்லாமல் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.
அப்படி என்ன இருக்கிறது PPF திட்டத்தில் என்று தானே நினைக்கிறீர்கள்? பிற திட்டங்களில் மொத்தமாக முதலீடு செய்ய வேண்டி வரலாம். ஆனால் இந்தத் திட்டத்தில் நீங்கள் சிறுக சிறுக பணத்தை சேமிக்கலாம். அதாவது ஒரு ஆண்டுக்கு வெறும் 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக 1 ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரையில் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம்.
பிபிஎஃப் திட்டத்தில் யாரெல்லாம் இணையலாம்?: பிபிஎஃப் திட்டம் குறிப்பாக இந்திய குடிமக்களுக்காகவே உருவாக்கப்பட்டது. இதில் இந்தியர்கள் அனைவரும் சேர்ந்து பயனடையலாம். அதுவே உங்கள் குழந்தைக்காக கணக்கு தொடங்க வேண்டும் என்று நினைத்தால் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் சார்பாக கணக்கைத் தொடங்க முடியும். அதேபோல இந்த திட்டத்தில் ஜாயிண்ட் அக்கவுண்ட் திறக்க முடியாது. ஒவ்வொரு தனிநபரும் தங்களுக்கென தனி கணக்கை மட்டுமே திறக்க முடியும். இந்த திட்டத்தில் நிலையாக முதலீடு செய்தால் ரூ. 40 லட்சம் வரை லாபம் கிடைக்கும். இதை ஒரு உதாரணத்தோடு பார்ப்போம்.
40 லட்சம் லாபம்: PPF திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். முதலீட்டை பொருத்தவரையில் இரண்டு விஷயங்களை மிக முக்கியமாக கூறுவார்கள். ஒன்று நிலையான முதலீடு மற்றொன்று பொறுமை. அதாவது நீண்ட காலத்திற்கு நீங்கள் முதலீடு செய்யும்போது உங்களுடைய லாபம் பன்மடங்காக உயரும்.
முதிர்வு காலம்: PPF திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். நீங்கள் 15 ஆண்டுகள் நிலையாக முதலீடு செய்து வரும் பட்சத்தில் ரூ.40 லட்சம் லாபம் சாத்தியமே. நீங்கள் PPF திட்டத்தில் இணைந்து அதிகபட்ச முதலீடான ரூ.1.5 லட்சத்தை முதலீடு செய்து வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ரூ.1.5 லட்சம் என்றால் மாதத்திற்கு ரூ.12,500 சேமிக்க வேண்டி வரும்.
இப்படி நீங்கள் சேமிக்கும் தொகையை வருடா வருடம் முதலீடு செய்தால் நீங்கள் மொத்தமாக முதலீடு செய்திருக்கும் தொகை 22,50,000 ரூபாயாக இருக்கும். இதற்கு தற்போது அரசு அறிவித்துள்ள வட்டியின் படி 7.1 சதவீதம் வட்டி கிடைத்தால் 18,18,209 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதனால் 15 வருட முடிவில் உங்கள் கையில் மொத்தமாக 40,68,209 ரூபாய் இருக்கும்.
மேலே கூறப்பட்டுள்ள கணக்கீட்டின்படி நீங்களும் இதே தொகையை தான் முதலீடு செய்ய வேண்டும் என்றெல்லாம் இல்லை. உங்களால் இயன்றதை முதலீடு செய்யலாம். அதற்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள ஆன்லைனில் நிறைய PPF கால்குலேட்டர்கள் இருக்கிறது. அதில் உங்களுடைய வருடாந்திர பங்களிப்பை வழங்கினால் சிஸ்டம் உங்களுக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என்பதை தெள்ளத் தெளிவாக கணக்கிட்டு காண்பித்து விடும்.
நீங்கள் இன்று போடும் சிறு முதலீடு 15 ஆண்டுகள் கழித்து உங்கள் குடும்பத்தின் தேவைகளை சிறப்பாக நிறைவேற்றும் என்பதில் ஐயமில்லை. அதோடு அரசு திட்டம் என்பதால் பாதுகாப்பான திட்டமாகவும், வரி இல்லாத திட்டமாகவும், அதேசமயம் அதிக லாபம் தரும் திட்டமாகவும் PPF இருக்கிறது.


Click it and Unblock the Notifications