ஒவ்வொரு மாதமும் சிறுக சிறுக சேமித்து பிற்காலத்தில் அதிக வருமானம் பார்க்க விரும்புபவர்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ரிஸ்க் எடுத்து முதலீடு செய்ய விரும்பாதவர்களும் இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம். அரசு திட்டம் என்பதால் உங்களுடைய பணம் பத்திரமாக இருப்பதோடு வருமானத்தையும் தொடர்ந்து பெற முடியும். இந்தப் பதிவில் பாதுகாப்பான முறையில் ரூ.67 முதலீடு செய்து ரூ. 1.42 லட்சம் வருமானம் பெறுவது எப்படி? என்பதை தான் பார்க்கப் போகிறோம்.
முதலீடு என்றவுடன் சிலர் அதிகளவில் பணம் இருக்க வேண்டும் என்று தவறாக நினைக்கின்றனர். மாதச் சம்பளக்காரர்களுக்கு இது இயலாத ஒன்று. ஏனெனில் தற்போதைய பணவீக்க சூழலில் ஒவ்வொரு குடும்பத்திலும் வருமானம் ஈட்டுபவர்களுக்கு செலவு அதிகமாக இருக்கிறதே தவிர சேமிப்பதற்கு பணம் இருப்பதில்லை. ஆனால் அப்படிப்பட்டவர்களும் 500 ரூபாய் முதல் முதலீடு செய்து வருமானம் பெறலாம்.

போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட்: தொடர் வைப்பு நிதி என்று சொல்லப்படுகிற RD திட்டத்தை அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்களில் தொடங்கலாம். RD திட்டத்திற்கு தற்போது 6.7 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை இந்த வட்டி விகிதம் மாற்றியமைக்கப்படும். போஸ்ட் ஆபீஸ் திட்டத்தின் முக்கிய நன்மை என்ன தெரியுமா? அதற்கு வழங்கப்படும் கூட்டு வட்டி.
ரூ.67 சேமித்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?: ஒருவர் தினமும் ரூ.67 என்ற வீதத்தில் சேமித்தால் மாதம் ரூ.2000 வரும். இதை அப்படியே RD திட்டத்தில் மாதா மாதம் முதலீடு செய்ய வேண்டும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு 1,20,000 ரூபாய் சேர்ந்திருக்கும். தற்போதுள்ள 6.7 சதவீத வட்டி விகிதம் அப்படியே மாற்றமின்றி இருந்தால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 1,42,732 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம். 5 ஆண்டுகளில் மட்டும் வட்டியாக உங்களுக்கு 22,732 ரூபாய் கிடைக்கும்.
தினக்கூலி வேலை செய்பவர்கள், மாத சம்பளக்காரர்களுக்கு இந்த திட்டம் ஏற்றது. தினசரி அடிப்படையில் சம்பளம் பெறுபவர்கள் தொடர்ந்து சேமித்து மாதத்தின் முதல் நாள் RD கணக்கில் வரவு வைக்கலாம்.
RD திட்டத்தின் லாக்கின் காலம் 5 ஆண்டுகள். 5 ஆண்டுகள் வரை தொடர்ந்து நீங்கள் மாத மாதம் நிலையான தொகையை முதலீடு செய்ய வேண்டும். உதாரணமாக RD கணக்கை தொடங்கிய போது நீங்கள் 1,000 ரூபாய் முதலீடு செய்தால் அதே 1,000 ரூபாயைத்தான் 5 ஆண்டுகளுக்கும் முதலீடு செய்ய வேண்டும்.
யார் யார் RD திட்டத்தில் இணையலாம்?: இந்திய குடிமகன் யார் வேண்டுமானாலும் RD கணக்கு தொடங்கலாம். தனிநபர் ஒன்றுக்கும் மேற்பட்ட RD கணக்கு வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் பெயரில் தொடங்கினால்.. அவர்களின் சார்பில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் கணக்கை நிர்வகிக்கலாம். சில குழுக்களில் சேமிப்பு என்று தனியாக பணம் வசூலிக்கப்படுகிறது. பிறகு அந்த பணத்திற்கு வட்டி வழங்கப்பட்டு உரியவரிடமே திருப்பித் தரப்படுகிறது. அதே போல குழுக்களில் இருப்பவர்களும் RD கணக்கு தொடங்கி அதிலும் சேமித்து வரலாம்.


Click it and Unblock the Notifications
