நீங்கள் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்பவராக இருந்தால் நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கு தான். அஞ்சலகத்தில் சில சேமிப்பு திட்டங்களுக்கான விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக வட்டி விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அஞ்சலகத்தின் மாதாந்திர சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், டைம் டெபாசிட் உள்ளிட்ட திட்டங்களில் தான் மாற்றங்கள் வந்துள்ளன.
இந்த புதிய மாற்றங்கள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ளன.
ஏப்ரல் 1 முதல் மாற்றம்
ஏப்ரல் 1 முதல் முதலீட்டாளர்களின் சேமிப்பு கணக்குகளுக்கு கிடைக்கும் வட்டி விகிதமானது நேரடியாக வங்கிக் கணக்கு அல்லது அஞ்சலக சேமிப்பு கணக்குகளுக்கு அனுப்பப்படும். நீங்கள் பணத்தினை மாத மாதம் அல்லது காலாண்டுக்கு ஒரு முறையோ அல்லது ஆண்டுக்கு ஒரு முறையோ வட்டி விகிதத்தினை எடுத்தாலும் அனைவருக்குமே இந்த புதிய மாற்றமானது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இணைத்துக் கொள்ளுங்கள்
ஆக மேற்கண்ட சேமிப்பு திட்டங்களுடன் உங்களது வங்கி கணக்குகளையோ அல்லது அஞ்சலக கணக்கினையோ இணைக்காவிடில் அது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். ஆக மார்ச் 31க்குள் கட்டாயம் உங்களது சேமிப்பு கணக்குடன், வங்கி கணக்குகளை லிங்க் செய்து விடுங்கள்.
இணைக்காவிட்டால்?
அப்படி இணைக்காவிடில் வட்டியானது அஞ்சலகத்தின் பல்வேறு அலுவலக கணக்குகளில் இணைக்கப்படும். ஒரு முறை இதர அலுவலக கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டவுடன், அதனை அஞ்சலகத்தின் சேமிப்பு கணக்கு அல்லது டிடியாக மட்டுமே பெற முடியும்.
கூடுதல் வட்டி கிடைக்கும்.
உங்களது சேமிப்பு கணக்குடன் மேற்கண்ட சேமிப்பு திட்டங்களை இணைப்பதால், வட்டி விகிதம் நேரடியாக சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும். சேமிப்பு கணக்குகளில் தொகை அதிகளவில் சேமிக்கப்படும்போது அதற்கு கூடுதல் வட்டியும் கிடைக்கும்.
இவ்வளவு நன்மைகள் இருக்கா?
டெபாசிட்தாரர்கள் இதற்காக அஞ்சலகத்திற்கு சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. அஞ்சலகத்திற்கு செல்லாமலேயே வட்டியை பெற்றுக் கொள்ளலாம். இதனை ஆன்லைனிலேயே பல்வேறு வழிகளில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதேபோல ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒவ்வொரு திரும்ப பெறும் படிவங்கள் நிரப்புவதை தவிர்க்கலாம்.
மேலும் மேற்கண்ட சேமிப்பு கணக்குகள் மூலம் கிடைக்கும் வட்டியினை அப்படியே ஆர்டிகணக்குகளுக்கும் திரும்ப செலுத்திக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications