இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கி வரும் இன்சூரன்ஸ் திட்டங்களை போலவே, அஞ்சலகமும் ஆயுள் காப்பீடுகளை வழங்கி வருகின்றது.
இது அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் என்ற இரு வகைகளில் வழங்கப்பட்டு வருகின்றது.
சரி இந்த அஞ்சல காப்பீடுகளில் என்னென்ன திட்டங்கள் உள்ளன? அதன் நன்மைகள் என்னென்ன? எப்படி இணைவது? வயது தகுதி என்ன? மற்ற விவரங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.
முழு ஆயுள் காப்பீடு (Suraksha)
இந்த முழு ஆயுள் காப்பீட்டினை 19 - 55 வரையிலானவர்கள் இணைந்து கொள்ளலாம். இதில் குறைந்தபட்ச கவரேஜ் தொகை 20,000 ரூபாய் வரையிலும், அதிகபட்சம் 50 லட்சம் ரூபாய் வரையிலும் க்ளைம் செய்ய முடியும். இந்த பாலிசி போட்ட நான்கு வருடத்திற்கு பிறகு லோன் வாங்கிக் கொள்ள முடியும். 3 வருடத்திற்கு பின்னர் சரண்டர் செய்தும் கொள்ளலாம். இந்த பாலிசியில் பாலிசிதாரரின் மரணத்திற்கு பிறகு, நாமினிக்கு, முதிர்வு தொகை கிடைக்கும்.
எண்டோவ்மென்ட் பாலிசி (Santosh)
எண்டோவ்மென்ட் பாலிசியினை (Santosh) பொறுத்தவரையில் பாலசிதாரர் முன்னரே தீர்மானிக்கப்பட்ட வயதை முதிர்ச்சியை அடையும் வரை, அதாவது 35,40,45,50,55,58 மற்றும் 60 வயதை எட்டும் வரை, உத்திரவாத தொகை மற்றும் போனஸ் ஆகியவற்றிற்கு உத்தரவாதம் கிடைக்கிறது. ஒரு வேளை பாலிசிதாரர் இறந்துவிட்டால், நாமினிக்கோ அல்லது சட்டபூர்வ வாரிசுகளுக்கே போனஸூடன் முழு தொகையும் உறுதி செய்யப்படும்.
இந்த பாலிசியில் 19 - 55 வரையிலானவர்கள் இணைந்து கொள்ளலாம். இதில் குறைந்தபட்ச கவரேஜ் தொகை 20,000 ரூபாய் வரையிலும், அதிகபட்சம் 50 லட்சம் ரூபாய் வரையிலும் க்ளைம் செய்ய முடியும். இந்த பாலிசி போட்ட மூன்று வருடத்திற்கு பிறகு லோன் வாங்கிக் கொள்ள முடியும். 3 வருடத்திற்க்கு பின்னர் சரண்டர் செய்தும் கொள்ளலாம். இந்த பாலிசியிலும் போனஸ் உண்டு.
மாற்றதக்க ஆயுள் காப்பீடு (Suvidha)
இந்த பாலிசியின் அம்சங்கள் எண்டோவ்மென்ட் போன்றது. இந்த பாலிசியினை ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு எண்டோவ்மென்ட் பாலிசியாக மாற்றிக் கொள்ளலாம். இந்த பாலிசியில் 19 - 55 வரையிலானவர்கள் இணைந்து கொள்ளலாம். இதில் குறைந்தபட்ச கவரேஜ் தொகை 20,000 ரூபாய் வரையிலும், அதிகபட்சம் 50 லட்சம் ரூபாய் வரையிலும் க்ளைம் செய்ய முடியும். இந்த பாலிசி போட்ட நான்கு வருடத்திற்கு பிறகு லோன் வாங்கிக் கொள்ள முடியும். 3 வருடத்திற்கு பின்னர் சரண்டர் செய்தும் கொள்ளலாம். இந்த பாலிசியிலும் போனஸ் உண்டு.
முன்கூட்டியே முடிவுற்ற ஆயுள் காப்பீடு (Sumangal)
இது ஒரு மணி பேக் திட்டம். இதில் 50 லட்சம் ரூபாய் வரை உறுதி தொகை செய்யப்படுகிறது. இந்த பாலிசி அவ்வப்போது வருமானம் தேவைப்படுபவர்களுக்கு ஏற்ற ஒரு பாலிசி. சர்வைவல் சலுகைகள் காப்பீட்டாளருக்கு அவ்வப்போது வழங்கப்படுகின்றன. பாலிசி காலம் 15 வருடங்கள் மற்றும் 20 ஆண்டுகளாகும்.
இதில் 15 ஆண்டுக் காலப் பாலிசிக்கு, 6 ஆண்டுகள் (20%), 9 ஆண்டுகள் (20%), 12 ஆண்டுகள் (20%) மற்றும் 15 ஆண்டுகள் (40% மற்றும் பெறப்பட்ட போனஸ்) ஆகியவற்றிற்குப் பிறகு நன்மைகள் வழங்கப்படுகின்றன.
இதே 20 ஆண்டுக் காலப் பாலிசிக்கு, 8 ஆண்டுகள் (20%), 12 ஆண்டுகள் (20%), 16 ஆண்டுகள் (20%) மற்றும் 20 ஆண்டுகள் (40% மற்றும் பெறப்பட்ட போனஸ்) ஆகியவற்றின் பின்னர் நன்மைகள் வழங்கப்படுகின்றன.
கூட்டு ஆயுள் காப்பீடு (Yugal Suraksha)
இது ஓரு கூட்டு ஆயுள் காப்பீட்டு திட்டமாகும். இதில் மனைவி பிஎல்ஐ பாலிசிகளுக்கு தகுதியுடையவராக இருக்க வேண்டும். இதில் இருவருக்கும் போனஸ் மற்றும் உறுதிபடுத்தப்பட்ட தொகை இந்த பாலிசி மூலம் கிடைக்கும். இந்த திட்டத்திலும் குறைந்தபட்சம் 20,000 ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரையில் உறுதிபடுத்தப்பட்ட தொகை இருக்கும். இந்த பாலிசியில் 21 -45 வயது வரையில்; உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம். இந்த பாலிசிக்கும் மூன்று வருடம் கழித்து லோன் பெற்றுக் கொள்ள முடியும்.
குழந்தை பாலிசி (Bal Jeevan Bima)
பாலிசிதாரரின் குழந்தைகளுக்கு காப்புறுதி காப்பீடு வழங்குவதற்காக இந்த திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு இரு குழந்தைகள் மட்டுமே பாலிசி எடுக்க தகுதியுடையவர்கள். குழந்தைகளின் வயது 5 - 20 வயது இருக்க வேண்டும். இதில் அதிகபட்ச தொகை மொத்தமாக 3 லட்சம் அல்லது குறைவாக உள்ள பிரதான பாலிசிதாரரின் உத்தரவாதத்திற்கு சமமானதாகும். முக்கியமாக பாலிசிதாரர் (குழந்தைகளின் பெற்றோர் ) 45 வயதை அடைந்திருக்கக் கூடாது. இந்த திட்டத்தில் பாலிசிதாரர் இறந்துவிட்டால், பிரீமியம் செலுத்தவேண்டியதில்லை. பெற்றோருக்கான பாலிசி காலவரை முடிந்த பின் குழந்தைக்குச் பெறப்பட்ட போனஸ் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தொகை வழங்கப்பட வேண்டும்.