நீண்ட கால சேமிப்பு திட்டங்களில் மிகவும் பிரபலமானது பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இதை ஆங்கிலத்தில் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் அல்லது PPF என்று கூறுவார்கள். 1986-ஆம் ஆண்டு மத்திய அரசால் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. நீண்ட கால அடிப்படையில் சேமிக்க விரும்புபவர்கள் இன்றளவும் இந்தத் திட்டத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். குழந்தைகளின் திருமணம், கல்வி செலவுகள், ஓய்வுக்கான சேமிப்பு இப்படி பல எதிர்கால விஷயங்களுக்காக இந்த திட்டத்தில் சேமிக்கலாம்.
PPF திட்டத்தின் சிறப்பம்சமே அதற்கு வழங்கப்படும் கூட்டு வட்டி. ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வீர்கள். அந்த தொகைக்கு வட்டி கிடைக்கும். பிறகு அடுத்தடுத்த முறை வட்டிக்கும் சேர்த்து வட்டி வழங்கப்படும். இதையே கூட்டு வட்டி என்கிறோம். PPF திட்டத்தில் இணைய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, உங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் இதர கேஒய்சி ஆவணங்களை வழங்கி இந்தியா முழுவதிலும் உள்ள எந்த ஒரு போஸ்ட் ஆபீஸ் கிளையில் வேண்டுமானாலும் கணக்கு தொடங்கலாம்.

குழந்தைகளுக்காக அவர்களுடைய பெற்றோர்கள் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் கணக்கு தொடங்கி நிர்வகிக்கலாம். தற்போது இந்த திட்டத்திற்கு 7.1% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதமானது காலாண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும்.
பெற்றோர் தங்களுடைய குழந்தைக்காக பிபிஎஃப் திட்டத்தில் கணக்கு தொடங்குகின்றனர் என்று வைத்துக் கொள்வோம். மாதா மாதம் ரூ.5000 என்ற வீதத்தில் சேமித்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
தினசரி அடிப்படையில் தோராயமாக 166 ரூபாய் சேமித்தாலே மாதத்திற்கு ரூ.5000 சேமித்து விடலாம், இப்படியே ஒரு வருடத்திற்கு சேமித்து வைத்தால் ரூ.60,000 வரும். இந்தத் தொகையை வருடா வருடம் முதலீடு செய்ய வேண்டும். அடுத்த 15 ஆண்டுகளுக்குள் மொத்தமாக ரூ.9 லட்சத்தை முதலீடு செய்துவிடலாம்.
இதற்கு ரூ.7.27 லட்சம் வரை வட்டி கிடைக்கும். முதிர்வு காலத்தில் வட்டி மற்றும் அசல் ஆகிய இரண்டையும் சேர்த்து ரூ.16.27 லட்சத்தைப் பெற்றுக் கொள்ளலாம். பிபிஎஃப் திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். 15 ஆண்டுகளுக்குப் பிறகு வேண்டுமானால் 5 ஆண்டுகள் வரை கணக்கை நீட்டிக்கலாம். இது முழுக்க முழுக்க உங்களுடைய தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது.
வேண்டுமானால் நீட்டித்துக் கொள்ளலாம். இல்லையெனில் கணக்கை முடித்து பணத்தை திரும்பப் பெறலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் அடுத்தடுத்த ஐந்தாண்டுகளுக்கு கணக்கை நீட்டிக்கலாம். நீங்கள் நீட்டிக்கும் ஆண்டுகளுக்கு எல்லாம் வழக்கம் போல வருடா வருடம் நிலையான தொகையை முதலீடு செய்ய வேண்டும். கணக்கு தொடங்கும்போது நீங்கள் எவ்வளவு தொகையை வரவு வைத்தீர்களோ அதே தொகையை தான் கணக்கு முடியும் வரை வரவு வைக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சமாக 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரையில் முதலீடு செய்ய முடியும்.
15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் போது கிடைக்கும் வருமானத்தை பார்த்தோம். ஒருவர் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் மொத்தம் ரூ.12 லட்சத்தை முதலீடு செய்திருப்பார். அதற்கு வட்டி வருமானமாக ரூ.14.63 லட்சம் கிடைக்கும். 20 ஆண்டுகளுக்கு பின்னர் வட்டியும் அசலையும் சேர்த்து ரூ.26.63 லட்சத்தை பெற்றுக் கொள்ளலாம்.
அதுவே 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் மொத்தமாக ரூ.18 லட்சத்தை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இதற்கு வட்டியாக ரூ.43.80 லட்சம் கிடைக்கும். முதிர்வில் ரூ.61.80 லட்சத்தை பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்களோ அதை பொறுத்து வருமானமும் அதிகமாக கிடைக்கும்.


Click it and Unblock the Notifications
