அஞ்சலக திட்டங்கள் அனைத்துமே சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகச் சிறந்த திட்டங்களாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக பொது வருங்கால வைப்பு நிதி திட்டமானது பெரும் வரவேற்பை பெற்றுள்ள திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
அதிலும் தினசரி 415 ரூபாய் செலுத்துவதன் மூலம் ஒருவர் மில்லியனர் ஆக முடியுமா? எப்படி? இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?
வரி சலுகை மற்ற முக்கிய அம்சங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
யாருக்கு பொருந்தும்?
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தினை இந்தியரான யார் வேண்டுமானாலும் இணையலாம். குறிப்பாக தனியார் ஊழியர்களுக்கும், பெண்கள், புதியதாக முதலீடு செய்ய நினைப்போர். ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள், பென்சன் வாங்குவோர் என அனைவருக்கும் பொருந்தும் ஒரு திட்டமாகும். எனினும் இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகளாகும். ஆக நீண்டகால நோக்கில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இது சிறந்த ஆப்சனாக பார்க்கப்படுகின்றது.
முதிர்வு காலம்?
இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் தானா? என்ற நினைப்போர், இதனை ஐந்து ஆண்டு தொகுப்புகளாக நீட்டித்துக் கொள்ளலாம். தற்போதைய நிலவரப்படி இந்த திட்டத்திற்கு 7.1% வட்டி விகிதம் வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தினை பொறுத்தவரையில் அரசு கூட்டு வட்டியினை வழங்கி வருகின்றது. ஆக முதலீட்டாளர்களுக்கு இது மற்றொரு சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு ரூ.417 முதலீடு
1 வருடத்திற்கு அதிகபட்சமாக இந்த திட்டத்தில் 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம் அல்லது மாதத்திற்கு அதிகபட்சமாக 12,500 ரூபாய், ஒரு நாளைக்கு 417 ரூபாய் செய்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் 15 வருடத்திற்கு அதிகபட்ச முதலீட்டு தொகையான 1.5 லட்சம் ரூபாயினை முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். இதனை செய்யும்போது 15 வருடத்தில் நீங்கள் 22.50 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள்.
எவ்வளவு கிடைக்கும்?
7.1% வட்டியினை கணக்கிட்டால் உங்களுக்கு வட்டியாக மட்டும் 18.18 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆக மொத்தம் முதிர்வின்போது 40.68 லட்சம் ரூபாய் உங்களுக்கு முதிர்வு தொகையாக கிடைக்கும். இந்த தொகையினை இன்னும் அதிகரிக்க நினைத்தால் இதனை ஐந்து ஆண்டு தொகுப்புகளாக அதிகரிக்கலாம், இதனை 5 - 5 ஆண்டுகளாக நீட்டிக்கும்பட்சத்தில் உங்கள் முதிர்வு தொகை 65.58 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதே 25 வருடங்கள் கழித்து உங்களுக்கு 1.03 கோடி ரூபாய் முதிர்வு தொகையாக கிடைக்கும்.
வரிச்சலுகை உண்டு?
ஒரு தனி நபர் ஒரு கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம் குழந்தைகள் பெற்றோர் அல்லது நாமினிகள் மூலம் இணையலாம். இந்தியராக இருந்து தொடங்கிய பிபிஎஃப் கணக்கினை, ஒரு என் ஆர் ஐ, அந்த கணக்கு முதிர்வடையும் வரை தொடரலாம்.
இதற்கு ஆதார் கார்டு, பான் கார்டு, பார்ம் இ பூர்த்தி செய்து அஞ்சலகத்தில் கொடுக்க வேண்டியிருக்கும்.
இதில் குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்து முதலீடு செய்து கொள்ளலாம். இதில் வரிச்சலுகையும் உண்டு.