பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் (PM-SYM) திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2019 இல் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
திருமணமான தம்பதிகள் மாதத்திற்கு 200 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் வருடம் 72,000 ரூபாய் அளவிலான ஓய்வூதியத்தை பெற முடியும் என்பதால் மிகப்பெரிய பலன் அளிக்க உள்ளது. சரி இத்திட்டத்தில் யாரெல்லாம் முதலீடு செய்ய முடியும்..?
யாருக்கெல்லாம் இந்தத் திட்டம்..?
அமைப்புசாரா தொழிலாளர்கள் பெரும்பாலும் வீட்டில் பணிபுரிபவர்கள், தெருவோர வியாபாரிகள், மதிய உணவுத் தொழிலாளர்கள், சுமை தூக்குபவர்கள், செங்கல் சூளைத் தொழிலாளர்கள், செருப்புத் தொழிலாளிகள், குப்பை பொருட்களை எடுப்பவர்கள், வீட்டுப் பணியாளர்கள், துவைப்பவர்கள், ரிக்ஷாக்காரர்கள், நிலமற்ற தொழிலாளர்கள், சொந்தக் கணக்குத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், கைத்தறித் தொழிலாளர்கள், தோல் தொழிலாளர்கள், ஆடியோ வீடியோ தொழிலாளர்களுக்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டது.
மாத வருமானம் 15,000 ரூபாய் கீழ்
இத்திட்டத்தில் மேலே கூறப்பட்ட தொழிலாளர்கள் மட்டும் அல்லாமல் மாத வருமானம் 15,000 ரூபாய் அல்லது அதற்கும் குறைவாக உள்ளவர்களும் இத்திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். மேலும் இத்திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமாயின் 18-40 வயதுடையவர்கள் இத்திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள்.
கண்டிஷன்
மேலும் இத்திட்டத்தைப் பெறுபவர்கள் புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS), ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) திட்டம் அல்லது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆகியவற்றின் கீழ் இருக்கக்கூடாது. மேலும் வருமான வரி செலுத்துபவராக இருக்கக்கூடாது, இவை அனைத்தையும் பூர்த்தி செய்தால் மட்டுமே இத்திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் (PM-SYM) திட்டத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு சந்தாதாரரும், 60 வயதை எட்டிய பிறகு, குறைந்தபட்சம் மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். இதன் மூலம் ஒருவர் வருடத்திற்கு 36,000 ரூபாயை ஓய்வூதியமாகப் பெறுவார்கள்.
ஓய்வூதியம்
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் (PM-SYM) திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் போது, சந்தாதாரர் இறந்தால், பயனாளியின் மனைவி, பயனாளி பெறும் ஓய்வூதியத்தில் 50% குடும்ப ஓய்வூதியமாகப் பெற உரிமை உண்டு. குடும்ப ஓய்வூதியம் மனைவிக்கு மட்டுமே பொருந்தும்.
சேர்வது எப்படி
சந்தாதாரர் மொபைல் போன், சேமிப்பு வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். தகுதியான சந்தாதாரர், அருகிலுள்ள CSC களுக்குச் சென்று, சுய சான்றிதழின் அடிப்படையில் ஆதார் எண் மற்றும் சேமிப்பு வங்கிக் கணக்கு/ ஜன்-தன் கணக்கு எண்ணைப் பயன்படுத்தி PM-SYM க்குப் பதிவுபெறலாம்.
72,000 ரூபாய் ஓய்வூதியம்
கணவன் - மனைவி ஆண்டுக்கு 72,000 ரூபாய் ஓய்வூதியம் பெறுவது எப்படி என்பதைப் புரிந்துகொள்ள எளிய கணக்கீட்டை இப்போது பார்ப்போம். உதாரணமாக, ஒரு நபருக்கு 30 வயது இருந்தால், திட்டங்களில் மாதாந்திர பங்களிப்பு மாதத்திற்குச் சுமார் ரூ. 100 ஆக இருக்கும் - ஒரு தம்பதியினர் மாதத்திற்கு ரூ.200 செலவிடுகிறார்கள்.
72,000 ரூபாய் ஓய்வூதியம்
எனவே, தனிநபர் பங்களிப்பு ஒரு வருடத்தில் ரூ. 1200 ஆக இருக்கும், 60 வயதை அடைந்த பிறகு, தனிநபர் ஓய்வூதியமாக ஆண்டுக்கு ரூ. 36,000 (தம்பதிகளுக்கு ரூ. 72,000 ஆண்டு ஓய்வூதியம்) பெறுவார்.