ஓய்வூதிய திட்டமிடல் என்பது ஒவ்வொரு தனிநபருக்கும் முக்கியமான ஒன்று. வயதான காலத்தில் யாரிடமும் கையேந்தாமால் வாழ வேண்டுமானால் அதற்கு இளமையிலேயே திட்டமிட வேண்டும். நாளுக்கு நாள் விலைவாசி உயர்வு அதிகரித்து வருவதை பார்த்து வருகிறோம். அப்படி இருக்கையில் ஓய்வு காலத்தில் நமக்கு ஏற்படும் செலவுகளை நாமே பார்த்துக் கொள்ள, முன்னரே சேமிக்க தொடங்க வேண்டும். அதற்கு ஏற்ப வங்கிகள் பல திட்டங்களை வழங்குகின்றன. ஆனால் இன்னமும் நடுத்தர வர்க்க குடும்பங்களின் ஆகச்சிறந்த தேர்வாக இருப்பது பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்.
பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் என்று சொல்லப்படுகிற பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் வெறும் ரூ. 2,000 சேமித்து ரூ.50 லட்சம் ஓய்வூதிய நிதி பெற முடியும் என்ற சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த பதிவில் அதற்கு எப்படி சேமிக்க வேண்டும்? எவ்வளவு நாட்கள் சேமிக்க வேண்டும்? என்பன போன்ற விவரங்களைத் தான் பார்க்க போகிறோம்.
வட்டி விகிதம்: தற்போது பிபிஎஃப் திட்டத்திற்கு 7.1% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இது பிற திட்டங்களை விட நல்ல வட்டி விகிதம் என்றே சொல்லலாம். இந்த திட்டத்தின் முக்கியமான நன்மை என்ன தெரியுமா? உங்களுடைய முதலீடு மற்றும் வட்டி ஆகிய இரண்டிற்குமே வரி இல்லை. எனவே முதிர்வு காலம் முடிந்த பிறகு நீங்கள் முதலீடு செய்த தொகை மற்றும் அதற்கு கிடைத்த வட்டி இரண்டையும் ஒரு பைசா கூட வரி பிடித்தம் செய்யப்படாமல் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.

எப்படி பிபிஎஃப் கணக்கு தொடங்குவது?: பிபிஎஃப் கணக்கு தொடங்க நீங்கள் அருகில் உள்ள பொது துறை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களை அணுகலாம். முன்னணி பொதுத்துறை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் பேங்க் போன்றவை PPF திட்டத்தை வழங்குகிறது. சில முன்னணி தனியார் வங்கிகளிலும் PPF கணக்கை தொடங்க முடியும்.
முதலீடு: PPF திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500 முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையில் முதலீடு செய்ய முடியும்.
ரூ.2000 சேமித்தால் எவ்வளவு லாபம்?: ஒரு நபர் தன்னுடைய ஓய்வூதிய நிதிக்காக மாதம் ரூ.2000 சேமிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ரூ.2000 சேமித்தால் வருடத்திற்கு ரூ.24,000 கிடைக்கும். பிபிஎஃப் திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். வருடா வருடம் 24,000 ரூபாயை ppf அக்கவுண்டில் வரவு வைத்துக்கொண்டே வந்தால், 15 ஆண்டுகள் கழித்து மொத்தமாக ரூ. 3.60 லட்சத்தை டெபாசிட் செய்திருப்பார். இதற்கு 7.1% வட்டி விகிதத்தில் வட்டி வழங்கப்படும் போது மொத்தமாக ரூ.2.90 லட்சம் வட்டி வருமானமாக கிடைக்கும். இதனால் முதிர்வு காலத்தில் ரூ.6.50 லட்சத்தை பெற்றுக் கொள்ளலாம். அதாவது ஒருவர் 45 வயதில் சேமிக்க தொடங்கி இருந்தால் தங்களுடைய 60-வது வயதில் ரூ.6.50 லட்சம் கிடைக்கும்.
40 வயதில் முதலீடு: ஒருவர் ரூ.2000 என்ற வீதத்தில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறார் என்றால் மொத்தமாக ரூ.4.80 லட்சத்தை முதலீடு செய்திருப்பார். இதற்கு வட்டி வருமானமாக ரூ.5.85 லட்சம் கிடைக்கும். முதிர்வில் ரூ.10.65 லட்சத்தை பெற்றுக் கொள்ளலாம்.
35 வயதில் முதலீடு: அதுவே ஒருவர் ரூ.2000 என்ற விதத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறார் என்றால், அவர் ரூ.6 லட்சத்தை முதலீடு செய்திருப்பார். இதற்கு வட்டி வருமானமாக ரூ.10.45 லட்சம் கிடைக்கும். முதிர்வில் ரூ.16.49 லட்சத்தை பெற்றுக் கொள்ளலாம்.
25 வயதில் முதலீடு: அதுவே ஒருவர் ரூ.2000 என்ற விதத்தில் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறார் என்றால், அவர் ரூ.8.40 லட்சத்தை முதலீடு செய்திருப்பார். இதற்கு வட்டி வருமானமாக ரூ.27.91 லட்சம் கிடைக்கும். முதிர்வில் ரூ.36.31 லட்சத்தை பெற்றுக் கொள்ளலாம்.
20 வயதில் முதலீடு: அதுவே ஒருவர் ரூ.2000 என்ற விதத்தில் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறார் என்றால் ரூ.9.60 லட்சத்தை முதலீடு செய்திருப்பார். இதற்கு வட்டி வருமானமாக ரூ.43.05 லட்சம் கிடைக்கும், இதன் மூலம் தன்னுடைய அறுபதாவது வயதில் ரூ.52.65 லட்சத்தை பெற்றுக் கொள்ளலாம். உதாரணத்தில் 60 வயதை ஓய்வூதிய வயதாக எடுத்துக் கொண்டோம். எனவே சேமிக்க தொடங்குபவர் 60 வயது வரையில் சேமித்தால் எவ்வளவு லாபம் என்பதை தான் காட்டியுள்ளோம்.
பிபிஎஃப் திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் என முன்பே பார்த்தோம். அப்படியானால் எப்படி 40 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்ய முடியும் என்று தானே யோசிக்கிறீர்கள்? 15 ஆண்டுகளுக்குப் பிறகும் ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கலாம். இதை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம். வரம்பு இல்லை. எனவே முதிர்வு தேதி நெருங்கும்போது நீங்கள் முதலீடு செய்த வங்கிக்குச் சென்று மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications