பணக்காரர்கள் மற்றும் ஓரளவுக்கு அதிகம் பணம் சம்பாதிப்பவர்கள் எல்லாம் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடுகளை நோக்கிச் செல்கிறார்கள். ஆனால் சாதாரண குடும்ப பின்னணி கொண்டவர்கள் எல்லாம் இன்னமும் பிஎஃப், மூத்த குடிமக்களுக்கான டெபாசிட் திட்டம் போன்றவைகளைத் தான் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு எளிய திட்டம் தான் இந்த PPF. இந்தியாவில் யார் வேண்டுமானாலும் PPF - Public Provident Fund கணக்கைத் தொடங்கலாம். ஒரு மைனரின் பெயரில் கூட PPF கணக்கைத் தொடங்கி பெற்றோர்கள் அல்லது அந்தக் குழந்தையின் பாதுகாவலர்கள் பணத்தை சேமிக்கலாம்.
மிக முக்கியமாக இந்த PPF கணக்கில் முதலீடு செய்யும் பணத்துக்கு 80சி வரி விலக்கு வேறு உண்டு. ஒரு நிதி ஆண்டுக்கு 500 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
நீட்டிப்பு
ஒரு முறை PPF கணக்கைத் தொடங்கினால் 15 ஆண்டுகளில் முதிர்வு அடையும். அதன் பின் ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கும் PPF கணக்கை நீட்டித்துக் கொள்ளலாம். ஒரு போட்டோ, ஏதாவது அரசு ஐடி, முகவரி ஆதாரம், ஒரு நாமினேஷன் பார்ம் போதும் PPF கணக்கைச் சட்டென தொடங்கிவிடலாம்.
பாதுகாப்பு
மத்திய அரசின் அமைப்பு தான், நாம் முதலீடு செய்யும் பணத்தை பார்த்துக் கொள்ளும் என்பதால், சொன்ன படி அசல் + வட்டிப் பணம் பாதுகாப்பாக இருக்கும். ஒவ்வொரு காலாண்டுக்கும், நம் பணத்துக்கு வட்டியை அறிவிப்பார்கள். கடந்த ஏப்ரல் - ஜூன் 2020 கலாண்டுக்கு 7.1 % வட்டி கொடுத்தார்கள்.
7 சதவிகிதமாக சரியலாம்
மத்திய அரசின் பாண்டுகள் ஈட்டும் வருமானம் அத்தனை நன்றாக இல்லை என்பதால், கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, முதல் முறையாக PPF முதலீடுகளுக்கான வட்டி 7 சதவிகிதத்துக்கு கீழ் போல வாய்ப்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஏன் இப்படி திடீரென வட்டி விகிதங்கள் சரிகிறது?
அடிப்படை
PPF கணக்குக்கான வட்டி விகிதங்கள், மத்திய அரசின் 10 ஆண்டு பாண்ட் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுகிறார்கள். கடந்த ஏப்ரல் முதல் இன்று வரை மத்திய அரசின் 10 ஆண்டு பாண்டின் சராசரி வருமானம் 6.07 சதவிகிதமாக இருக்கிறதாம். தற்போது 5.85 சதவிகிதமாக சரிந்து இருக்கிறதாம். எனவே அடுத்த காலாண்டுக்கான வட்டி குறையலாம் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.