கடந்த மார்ச் 27, 2020 அன்று தான் மத்திய ரிசர்வ் வங்கி கொரோன வைரஸால் இந்திய பொருளாதாரம் அதிகம் பாதிக்கப் படக் கூடாது என சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது.
அதில் மிக முக்கியமான ஒன்று தான் 0.75 % ரெப்போ ரேட் வட்டி விகிதத்தைக் குறைத்தது. அதோடு 3 மாத இஎம்ஐ (EMI) தவணைகளை ஒத்தி வைக்க அனுமதி கொடுத்ததும் மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.
அதற்கு அடுத்த நாளில் இருந்தே, எஸ்பிஐ தொடங்கி ஒவ்வொரு வங்கியாக, இந்த 3 மாத இஎம்ஐ (EMI) தவணைகள் தொடர்பாக பேச ஆரம்பித்தார்கள்.
ஒரு ட்விஸ்ட்
இப்போது அந்த 3 மாத இஎம்ஐ (EMI) தவணையில் தான் மத்திய ரிசர்வ் வங்கி ஒரு ட்விஸ்டைக் கொண்டு வந்து இருக்கிறது. அப்படி என்ன ட்விஸ்ட் வைத்து இருக்கிறது? இதனால் யாருக்கு என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும் என்பதைத் தான் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.
ஆர்பிஐ
கடந்த திங்கட் கிழமை, மத்திய ரிசர்வ் வங்கி, பல்வேறு வங்கிகள் மற்றும் (NBFC - Non Banking Financial Companies) வங்கி அல்லாத நிதி நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு, இந்த 3 மாத இஎம்ஐ (EMI) தவணைகளைப் பற்றிச் சொல்லி ஷாக் கொடுத்து இருக்கிறது.
வங்கிகள்
நிறைய வங்கிகள், கடன் வாங்கி இருக்கும் வாடிக்கையாளர்களே 3 மாத இஎம்ஐ (EMI) தவணைகளை (அசல் மற்றும் வட்டி) செலுத்த விரும்பாதவர்களுக்கு மட்டுமே, (Opt in) செய்ய வாய்ப்பு கொடுக்கிறார்கள். இல்லை என்றால் வழக்கம் போல, இஎம்ஐ (EMI) வசூலித்து விடுகிறார்களாம். இந்த இடத்தில் தான் ஆர்பிஐ ட்விஸ்டைச் சொல்கிறது.
ஆர்பிஐ தரப்பு
மத்திய ரிசர்வ் வங்கியோ, கடன் வாங்கி இருக்கும் எல்லோருக்கும், தன்னிச்சையாக (By Default) 3 மாத இஎம்ஐ (EMI) தவணைகளை ஒத்தி வைக்க அனுமதிக்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறது. அதாவது, வாடிக்கையாளர்கள் 3 மாத தவணைகளைச் செலுத்தாமல் இருக்க, Opt in செய்யவில்லை என்றால் கூட 3 மாத இஎம்ஐ (EMI)-களை ஒத்திவைக்க அனுமதிக்க வேண்டும் எனச் சொல்கிறது ஆர்பிஐ.
வேண்டாம் என்பவர்கள்
கடன் வாங்கி இருக்கும் ஒருவர், தானே முன் வந்து, இந்த 3 மாத இஎம்ஐ (EMI) தவணைகளை, ஒத்திப் போட விரும்பவில்லை எனச் சொல்ல வேண்டும். அப்போது தான், ஒரு வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனம், அந்த வாடிக்கையாளருக்கு, opt out வசதியைக் கொடுக்க வேண்டும் என ஆர்பிஐ சொல்வதாக ஒரு வங்கியாளர், எகனாமிக் டைம்ஸிடம் சொல்லி இருக்கிறார்.
என்ன பிரச்சனை
ஆர்பிஐ சொல்வது போல 3 மாத தவணைகளை ஒத்திவைத்தால், பணத்தை வசூலிக்க முடியாததால், வங்கிகள் நிதி நெருக்கடியில் (Liquidity Crunch) மாட்டிக் கொள்ள நிறைய வாய்ப்பு இருக்கிறதாம். இந்த 3 மாத கடன் இஎம்ஐ (EMI) தவணைகளில் இருந்து வரும் பணம், ஆர்பிஐ குறைத்து இருக்கும் கேஷ் ரிசர்வ் ரேஷியோ மூலமாக வங்கிகளுக்கு கிடைக்கும் பணம் மற்றும் ஆர்பிஐயில் இருந்து வங்கிகளுக்கு கிடைக்கும் பணத்தை விட அதிகமாக இருக்குமாம்.
விளக்கம்
உதாரணமாக: ஒரு வங்கிக்கு இந்த 3 மாத இஎம்ஐ (EMI) தவணைகள் மூலம் 100 ரூபாய் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆர்பிஐ தளர்த்தி இருக்கும் கேஷ் ரிசர்வ் ரேஷியொ மூலம் 5 ரூபாய் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆர்பிஐயில் இருந்து வங்கிக்கு 20 ரூபாய் பணம் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம்.
100 Vs 25
இந்த உதாரணத்தின் படி 3 மாத இஎம்ஐ (EMI) தவணையில் இருந்து வங்கிக்கு கிடைக்கும் 100 ரூபாயை விட கேஷ் ரிசர்வ் ரேஷியோ மற்றும் ஆர்பிஐயில் இருந்து வங்கிக்கு கிடைக்கும் 25 ரூபாய் பணம் குறைவு. இது தான் இப்போது எதார்த்தத்திலும் நடக்க இருக்கிறது என்கிறார்கள். இது ஒரு வித பிரச்சனை என்றால், மறு பக்கம், என் பி எஃப் சி நிறுவனங்கள் பிரச்சனையில் சிக்கி இருக்கிறதாம். அப்படி என்ன பெரிய பிரச்சனை?
என் பி எஃப் சி
பொதுவாக என் பி எஃப் சி கம்பெனிகள், வங்கிகளிடம் இருந்து குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி, அதிக வட்டிக்கு மற்றவர்களுக்கு கடன் கொடுப்பார்கள். இப்போது, என் பி எஃப் சி ஒழுங்காக வங்கிகளிடம் வாங்கிய கடன்களுக்கு தவணைகளை கட்ட வேண்டும் என்றால், என் பி எஃப் சி கொடுத்த கடன்களுக்கு ஒழுங்காக இஎம்ஐ (EMI) தவணைகள் வசூலாக வேண்டும்.
வசூலிக்கக் கூடாது
ஆனால் ஆர்பிஐ வழிகாட்டுதல் படி, என் பி எஃப் சி வாடிக்கையாளர்களுக்கும், ஆர்பிஐ சொல்லி இருக்கும் 3 மாத இஎம்ஐ (EMI) தவணை ஒத்தி வைப்பு வசதியைக் கொடுக்க வேண்டும். ஆனால் என் பி எஃப் சி நிறுவனங்கள் வங்கிகளிடம் வாங்கி இருக்கும் கடன்களுக்கு, ஆர்பிஐயின் இந்த 3 மாத கடன் தவணை ஒத்தி வைப்பு பொருந்தாது என பல வங்கிகளும் சொல்கிறார்களாம்.
சுருக்கம்
எனவே, என் பி எஃப் சி கம்பெனிகள் தன் வாடிக்கையாளர்களிடம் கொடுத்த கடனை வசூலிக்காமலேயே, என் பி எஃப் சி கம்பெனிகள் வங்கிகளிடம் வாங்கிய கடனை இந்த 3 மாதங்களுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும் என, ஒரு மிகப் பெரிய சவாலை எதிர் கொள்கிறார்கள். மீண்டும் இந்திய வங்கிகள் ஒரு சிக்கலை நோக்கிச் செல்வதைத் தான் இது சுட்டிக் காட்டுகிறது.