அசத்தலான அஞ்சல் துறையின் தொடர்வைப்புக் கணக்குக்கு 100% பாதுகாப்பு உண்டு. ஏனென்றால் அஞ்சலக துறை நேரடியாக மத்திய அரசின் கீழ் வருகின்றது. இதன் செயல்பாடுகளும், முதலீடுகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. இதனால் மிக பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது.
மேலும் அஞ்சலகத் துறை நாடு முழுவதும் பரந்து விரிந்து காணப்படுகின்றது. வங்கிக்கிளை இல்லாத ஊர்களில் கூட அஞ்சலக கிளை இருக்கும். இப்படி மக்களோடு பின்னி பிணைந்து நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நிறைந்திருக்கிற அஞ்சலகத் துறையை நாம் பயன்படுத்திக் கொள்வது நல்ல விஷயம். அதோடு எளிதான ஒன்று.
தங்கள் வீட்டுச் செலவுக்கென கணவர் கொடுக்கும் பணத்தில், ஒரு ரூபாயையாவது மிச்சப்படுத்தி வைப்பது நம்மூர் இல்லத்தரசிகளின் குணம். ஆனால் இப்படி சிறுக சிறுக சேமிக்கிற பணத்தை சமையலறையில் சேமித்து வைப்பார்கள்.
சிறு சேமிப்பு
ஆனால் இன்று அப்படி இல்லை. ஆண்கள் பெண்கள் என இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். முந்தைய காலத்தினை போல் இன்றும் பெண்கள் சேமிக்கிறார்கள். ஆனால் அப்படி சேமிக்கும் பணம் நம் வீட்டு சமயலறையில் சேமித்து வைக்கப்படுவதில்லை. ஏனெனில் இன்று ஏராளமான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அதில் முதலீடு செய்யும் போது, அசலுடன் வட்டியும் சேர்ந்து கிடைக்கிறது. பெரும்பாலான பெண்கள் அப்படி சேமிக்கும் பணத்தை பெரும்பாலும் அஞ்சல் அலுவலகங்களில் சேமிக்கின்றனர்.
பாதுகாப்பான சேமிப்பு
ஏனெனில் இன்று எத்தனையோ சேமிப்பு முறைகள் வந்தாலும், எல்லா வகையிலும் பாதுகாப்பானது அஞ்சலக சேமிப்பு தான். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக தன் சேவையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சேமிப்பில் குறைவான வட்டி விகிதம் என்பதுடன், இது கிராமப்புற மக்களுக்கான சேமிப்பு எனப் பலர் தவறான நினைக்கிறார்கள்.
இல்லத்தரசிகளுக்கு ஏற்ற அஞ்சலக சேமிப்பு
ஆனால் உண்மையை சொல்லவேண்டுமானால் இல்லத்தரசிகளுக்கு ஏற்றது அஞ்சலக சேமிப்பு தான். இன்றைய காலகட்டங்களில் பெண்கள் தைரியமாக நம்பிக்கையுடன் போகக் கூடிய இடங்களில் அஞ்சல் அலுவலகமும் ஒன்று. இங்கு யார் ஏழை? பணக்காரர் என்ற வித்தியாசம் கிடையாது? ஏனெனில் இங்கு நீங்கள் இங்கு 10 ரூபாயைக் கூட சேமிக்க முடியும்.
100% பாதுகாப்பு
இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில் மற்ற முதலீட்டு திட்டங்களான, ரியல் எஸ்டேட், மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, தங்கம் உள்ளிட்டவற்றில் உள்ளது போன்ற ஏற்ற தாழ்வுகள் இதில் இல்லை. அதோடு 100% பாதுகாப்பு உண்டு. அந்த வகையில் நாம் இன்று பார்க்க விருப்பது அஞ்சல் அலுவகங்களில் உள்ள தொடர்வைப்புக் கணக்கு திட்டம் தான்.
வட்டி எவ்வளவு?
இது அஞ்சலத்தில் உள்ள பிரபலமான திட்டம். இன்று வங்கிகளில் காணப்படுகின்ற தொடர்வைப்புக் கணக்கு திட்டங்களுக்கு இதுவே முன்னோடி. இந்தத் திட்டத்தில் மாதம் 100 ரூபாய் கூட சேமிக்க முடியும். தற்போது இந்த சேமிப்பு கணக்குகளுக்கு 5.8% வட்டி வழங்கப்படுகிறது.
பணம் எப்படி டெபாசிட் செய்யலாம்?
அதெல்லாம் சரி இந்த கணக்கிற்கு எப்படி பணம் செலுத்துவது? இந்த IPPB அஞ்சலக கணக்கிற்கு, உங்களது வங்கி கணக்கு மூலமும் பணம் அனுப்பலாம்.
அல்லது DOP மூலமும் நீங்கள் டெபாசிட் செய்யலாம். அங்கு உங்களது DOP கஷ்டமர் ஐடி கொடுத்து லாகின் செய்து கொள்ளலாம். அங்கு உங்களது தொடர்வைப்புக் கணக்கு நம்பரை கொடுத்து, எவ்வளவு தொகை என்பதையும் கொடுத்து, தவணை முறையில் பணத்தினை செலுத்திக் கொள்ளலாம்.
புதிய வாடிக்கையாளாரா நீங்கள்?
நீங்கள் புதிய வாடிக்கையாளர் எனில், உங்களுக்கு அருகில் இருக்கும் அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று ஒரு அடிப்படை பதிவுகளை செய்து கொள்ளலாம். அப்படி கொடுத்து ஒரு முறை உங்களது டிஜிட்டல் அக்கவுண்டினை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். ஆக அப்படி ஆக்டிவேட் செய்யும் பட்சத்தில், மிக எளிதாக ஆன்லைனில் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
நீங்கள் பழைய வாடிக்கையாளரா?
இதே நீங்கள் பழைய வாடிக்கையாளர் எனில், உங்களது அக்கவுண்ட் நம்பர், கஷ்டமர் ஐடி, உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை கொடுக்கலாம்.கொடுத்த பிறகு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். பிறகு ஓடிபியைக் கொடுத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.