இன்றைய சேமிப்பு நாளைய வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும். அதுவும் இன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை இல்லை. ஓய்வுக்காலத்திற்கு பிறகு உங்களது வாழ்க்கையை நீங்கள் தான் கவனித்துக் கொள்ள வேண்டும்.
அப்படி ஓய்வூகாலத்தில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் எனில், அப்போதும் கணிசமான வருமானம் வேண்டும். அதோடு பாதுகாப்பும் வேண்டும்.
இப்படி வருமானம், பாதுகாப்பு என இரு அம்சத்தினையும் சேர்த்து வழங்கும் ஒரு திட்டம், தேசிய ஓய்வூதிய திட்டம். அதுவும் அரசின் திட்டம் என்றால், வேண்டாம் என்றா சொல்ல முடியும்.
என்பிஎஸ் தொடக்கம்
கடந்த 2004ம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்காக தேசிய ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் இது பின்னர் 2009க்கு பிறகு தனியார் ஊழியர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள், இல்லதரசிகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. இந்த திட்டமானது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பாதுகாப்பான திட்டம்
இந்த திட்டம் வயதானவர்கள் பொருளாதார பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனி நபர்கள், ஏழை மக்கள் என அனைவருமே, அரசின் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும். அதற்கான வழிமுறைகளும் இதில் உள்ளது.
இந்த திட்டத்தில் யாரெல்லாம் இணையலாம்?
18 வயது முதல் 60 வரையிலானவர்கள் யார் வேண்டுமானலும், இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இதில் உள்ள ஒரே ஒரு நிபந்தனை என்னவெனில், வாடிக்கையாளர் கேஒய்சி விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். பொதுவாக எந்தவொரு சேமிப்பு திட்டங்களிலும் இணைய தேவைப்படும் ஆவணங்கள் தான் இந்த திட்டத்திலும் தேவை.
எப்படி இணைவது?
பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வருகின்றன. தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணையும் ஒவ்வொரு சந்தாதாரருக்கும் 12 இலக்க எண் வழங்கப்படும். அது பிரான் எண் (PRAN) என்று அழைக்கப்படும். அல்லது ஓய்வூதிய கணக்கு எண் என்று அழைக்கப்படும். இந்த ஓய்வூதிய கணக்கு எண் ஒருவருக்கு ஒரு எண் மட்டுமே பதிவு செய்ய முடியும்.
TIER-1 - எவ்வளவு செலுத்தலாம்?
இந்த ஓய்வூதிய திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர், கணக்கு முடிவு பெறும் வரையில் அல்லது ஒய்வு பெறும் வரையில் நிதியினை திரும்ப பெற முடியாது. எனினும் இந்த தேசிய ஓய்வூதிய திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளியேற்றும் போது மட்டுமே, இக்கணக்கினை முடித்து பணத்தை திரும்ப பெற முடியும். இந்த கணக்கில் சேர்ந்துள்ள வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 6000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அவ்வாறு செலுத்தாவிடில் இந்த கணக்கு முடக்கப்படும்.
TIER-2 திட்டத்தில் எவ்வளவு செலுத்தலாம்?
இந்த இரண்டாவது ஒய்வூதிய திட்டத்தில் சேருபவர்கள், இந்த திட்டத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் செலுத்திய பணத்தினை எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கணக்கினை முதல் வகையான கணக்கிற்கான கூடுதல் இணைப்புக் கணக்காகவும் எடுத்து கொள்ளலாம். சந்தாதாரர் டயர் 1ல் கணக்கு தொடங்கியிருந்தால் மட்டுமே, டயர் 2ல் கணக்கு திறக்க முடியும். இந்த கணக்கில் நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் 2000 ரூபாய் பங்களிப்பாக செலுத்த வேண்டும்.
புதிய விதிகளுக்கு வரவேற்பு
அரசின் இந்த என்பிஎஸ் திட்டத்தில் சமீபத்தில் பல புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் முக்கியமானது என்பிஎஸ் சந்தாதாரர் நிபந்தனைகளுக்கு உட்பட்டு முழு கார்பஸினையும் பெற முடியும். முன்னதாக பென்ஷன் தொகையை முழுவதும் ஒரே நேரத்தில் பெற முடியாது. இதில் 60% மட்டுமே திரும்ப பெற முடியும். 40% நீங்கள் வருடாந்திர திட்டத்தில் வைக்க வேண்டும். இதன் மூலம் மாத மாதம் உங்களுக்கு ஒரு வருமானமாக கிடைக்கும்.
நிபந்தனை உண்டு
எனினும் அவசர நிலை தவிர்த்து மற்ற காரணங்களுக்காக ஓய்வூதிய நிதியை எடுப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் நுழைய அதிகபட்ச வயது 65 வயதாக இருந்த நிலையில், 70 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் முதிர்வு வயதும் 75 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு அரசின் இந்த திட்டத்தில் பல வரி சலுகைகளும் உள்ளதால், முதிர்வு காலத்திற்கு ஏற்ற ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
இதனையும் கொஞ்சம் பாருங்க
ஓய்வூதிய திட்ட முதலீட்டிலிருந்து ஒரு பகுதியை அவசரகால நிதியாக பெறுவது சாத்தியம் என்றாலும், ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து, மூன்றாண்டுகள் கழித்தே அவசரகால நிதியை பெறமுடியும். ஓய்வூதிய திட்டத்தில் முதிர்வு காலம் வரும் முன்னர், 3 முறை மட்டுமே அவசர கால நிதியை பெற முடியும். ஒவ்வொரு அவசரகால பெறுதல்களுக்கும் இடையில், குறைந்தது ஐந்தாண்டுகள் இடைவெளி அவசியமாகிறது. சிறப்பான மருத்துவ தேவைகளுக்கு இந்த விதி பொருந்தாது.
எதில் முதலீடு
மேற்கண்ட இந்த திட்டத்தில் 30 வருடங்களுக்கு மாதம் 10,000 ரூபாய் முதலீடு செய்து, மாதத்திற்கு 45,587 ரூபாய் பென்சன் கிடைக்கும். இதில் வருடாந்திர திட்டத்தில்91,17,302 ரூபாயும், இதே மொத்தமாக எடுத்துக் கொள்ளும் தொகையானது 1,36,75,952 ரூபாயும் இருக்கும்.
எப்படி சாத்தியம்
இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பெறும் தொகையை SWP (systematic Withdrawal Plan) திட்டத்தில் முதலீடு செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த திட்டத்தில் குறைந்தபட்ய்சம் 8% வருடாந்திர வருமானம் கிடைக்கலாம். ஆக என்பிஎஸ் வாடிக்கையாளர்கள் முதிர்வு தொகையை 25 ஆண்டுகளுக்கு SWPல் முதலீடு செய்யலாம். அப்படி செய்யும்பட்சத்தில் 1.36 கோடி ரூபாயினை முதலீடு செய்யும்போது, அதன் மூலம் மாதம் 1.03 லட்சம் ரூபாய் வருமான கிடைக்கும். மேற்கண்ட ஓய்வூதியத்தோடு சேர்த்து 1.03 + 46,000 ரூபாய் சேர்த்து சுமார் 1.50 லட்சம் ரூபாய் வருமானமாக கிடைக்கும்.