அஞ்சலக திட்டங்களில் மிக பிரபலமான திட்டங்களில் தேசிய சேமிப்பு பத்திரமும் ஒன்று. இந்தியாவினை பொறுத்த வரையில் என்ன தான் பல ஆயிரம் முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், இன்றும் மக்கள் மத்தியில் அஞ்சலக திட்டங்களுக்கு என்றுமே ஒரு தனி இடம் உண்டு.
இதில் முழுக்க சந்தை அபாயம் இல்லாத பாதுகாப்பான திட்டங்களாக உள்ளது. இதில் மிகப்பெரியவில் வருமானம் இல்லாவிட்டாலும், நிரந்தர வருமானம் தரக்கூடிய திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
நாம் இன்று பார்க்கவிருப்பது 5 வருடங்களில் எப்படி 4 லட்சம் ரூபாயினை அடைய முடியும். இது எப்படி சாத்தியம்? 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அதெப்படி 14 லட்சம் ரூபாயாக பெருகும்? இதில் யாரெல்லாம் இணையலாம்? வரி சலுகை இருக்கா? வேறு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.
வருமானத்துடன் வரிச்சலுகையும் உண்டு
அஞ்சலகத்தின் தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தினை அஞ்சலத்தில் பெற்றுக் கொள்ளலாம். இன்றும் நிலையான வருமானம் தரக்கூடிய அசத்தலான திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது 5 வருட திட்டமாகும். முழுக்க சந்தை அபாயம் இல்லாத ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது. நிலையான வருமானம் தரக்கூடிய திட்டம் என்றாலும் இந்த திட்டத்தில் வருமான வரி சட்டம் பிரிவு 80சியின் கீழ் வரி சலுகை அளிக்கப்படுகின்றது.
வயது வரம்பு என்ன?
இந்த திட்டத்தில் இணைய 18 வயது குறைந்தபட்ச வயதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் பெயரில் வாங்க நினைத்தால் பெற்றோர்கள் பாதுகாப்பாக இருந்து வாங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரிலேயே வாங்கிக் கொள்ளலாம். இந்த பத்திரத்தினை மூன்று பேர் வரையில் இணைந்து ஜாயிண்ட் அக்கவுண்ட் மூலம் பெற முடியும். மைனர்கள் அல்லது மன நலம் சரியில்லாதவர் பெயரில் பாதுகாவலரின் துணையுடன் வங்கிக் கொள்ளலாம்.
குறைந்தபட்ச முதலீடு
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ.1000 ரூபாயாகும். இதில் அதிகபட்ச வரம்பு என்பது இல்லை. அதனை 100ன் மடங்கில் வாங்கிக் கொள்ளலாம். இந்த கணக்கில் கீழ் எத்தனை கணக்குகளை வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம்.
வட்டி விகிதம்
தேசிய சேமிப்பு பத்திரத்திற்கு தற்போதைய நிலவரப்படி வட்டி விகிதம் 6.8% ஆகும். உதாரணத்திற்கு 1,000 ரூபாய்க்கு இந்த பத்திரத்தில் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு 1,389 ரூபாயாக உள்ளது. இதி வட்டி விகிதம் வருடத்திற்கு ஒரு முறை கணக்கிடப்பட்டாலும், பலன் முதிர்வு காலத்திலேயே கிடைக்கும்.
வரி சலுகை உண்டு
உங்கள் முதலீட்டிற்கு வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையில் வரிச் சலுகை உண்டு. எனினும் முதிர்வின் போது கிடைக்கும் வருமானம் வரிக்கு உட்பட்டதாகும். இதில் டிடிஎஸ் பிடித்தம் இல்லை.
முன் கூட்டியே திரும்ப பெறுதல்
இந்த திட்டத்தில் தனி நபர்கள் முன் கூட்டியே திரும்ப பெற முடியாது. இதே ஜாய்ண்ட் ஆக்கவுண்டாக வைத்திருப்பவர்கள் அல்லது விண்ணப்பதாரர்கள் இறந்து விட்டால், அல்லது நீதிமன்ற உத்தரவின் பேரில் இடையில் முடித்துக் கொள்ளலாம். இதனை ஓராண்டுக்குள் எடுத்தால் முகமதிப்பு மட்டுமே செலுத்தப்படும். இதே ஒரு வருடத்திற்கு பிறகு மூன்று ஆண்டுகளுக்குள் முடித்துக் கொண்டால், சேமிப்பு கணக்கிற்கு வழங்கப்படும் வட்டி மட்டுமே வழங்கப்படும். இதே முன்று வருடத்திற்கு பிறகு தள்ளுபடி மதிப்பில் விற்பனை செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications