கொரோனா வைரஸ் ஊமைக் குத்தாக எல்லா நாட்டு பொருளாதாரத்தையும் அடி வெளுத்துக் கொண்டு இருக்கிறது.இதனால் பல நாடுகள் லாக் டவுனை கடுமையாக பின்பற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
அதோடு, தங்கள் மக்களின் பொருளாதார வாழ்கையைக் காப்பாற்ற கோடி கணக்கில் பணத்தை கொட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
இதன் ஒரு பகுதியாகத் தான், மத்திய நிதி அமைச்சகம், கடந்த ஏப்ரல் 08, 2020, புதன்கிழமை அன்று, ஒரு நல்ல செய்தியை வெளியிட்டது. அதாவது 5 லட்சம் ரூபாய்க்குள் வருமான வரித் துறையில், ரீஃபண்ட் பாக்கி இருப்பவர்களுக்கு எல்லாம், உடனடியாக, ரீஃபண்ட் கொடுக்க முடிவு செய்து இருப்பதாகச் சொன்னார்கள்.
யாருக்கு பொருந்தும்
யார் எல்லாம் வருமான வரித் துறையினருக்கு கூடுதலாக வரி செலுத்தி அல்லது கூடுதலாக வரி பிடித்தம் செய்யப்பட்டு, ரீஃபண்டுக்கு விண்ணப்பித்து இருக்கிறார்களோ, அவர்களுக்கு எல்லாம் நிதி அமைச்சகத்தின் அனுமதி வழியாக விரைவில் ரீஃபண்ட் கொடுக்கப்படலாம். இது தனி நபர்கள், வியாபாரிகள் மற்றும் வியாபார நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஆனால் ரீஃபண்ட் தொகை 5 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
உதாரணம்
எடுத்துக்காட்டாக, செல்வி என்பவருக்கு வயது 55, இவர் ஆண்டுக்கு 2,50,000 ரூபாயை ஃபிக்ஸட் டெபாசிட்டில் இருந்து வட்டியாகப் பெறுகிறார். வேறு வருமானம் இல்லை. இவர் எந்த வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் வைத்திருக்கிறாரோ, அந்த வங்கியிடம் படிவம் 15-ஜியை (Form 15G) சமர்பிக்க வில்லை.
வருமான வரிப் படிவத்தில் ரீஃபண்ட்
எனவே இவருக்கு வரும் வட்டி வருமானத்தில் இருந்து, வங்கியே டிடிஎஸ் ஆக சுமார் 10 சதவிகிதத்தை பிடித்தம் செய்து, வருமான வரித் துறையிடம் செலுத்தி இருப்பார்கள். இதை கவனத்தில் கொண்டு, செல்வி, தன் வருமான வரிப் படிவத்தில் தனக்கு ரூ.2.5 லட்சம் ரூபாய் மட்டுமே வருமானம் என முறையாக குறிப்பிட்டு ரீஃபண்ட்-க்கு விண்ணப்பித்து இருந்தால், இந்த நிதி அமைச்சக உத்தரவால், செல்விக்கு உடனடியாக ரீஃபண்ட் கொடுக்கப்படும்.
எதார்த்த பிரச்சனை
அதே போல, சில கம்பெனிகளில், ஊழியர்களிடம் இருந்து பிடிக்க வேண்டிய வரியை கணக்கிடும் போது, வீட்டு வாடகைக்கு போதுமான ஆதாரங்கள் இல்லாததால், ஊழியர்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை டிடிஎஸ் வரியாக பிடித்தம் செய்து கட்டிவிடுவார்கள். இந்த கூடுதல் வரியை ஊழியர் முறையாக வருமான வரிப் படிவம் செலுத்தி ரீஃபண்ட் கேட்டு இருந்தால், இந்த ஊழியர் கூட நிதி அமைச்சக உத்தரவால் விரைவில் ரீஃபண்ட் பெறுவார்.
நிறுவனங்கள்
கூடுதலாக டிடிஎஸ் வசூலிக்கப்பட்டு இருப்பது, அட்வான்ஸ் வரிகளில் கூடுதலாக செலுத்தி இருப்பது என எந்த வழியிலாவது, வருமான வரித் துறைக்கு கூடுதலாக வரி செலுத்திவிட்டு, ரீஃபண்ட் கேட்டு விண்ணப்பித்து இருந்தால் அவர்களுக்கு எல்லாம், இந்த நிதி அமைச்சக உத்தரவின் படி, வருமான வரித் துறையே விரைவில் ரீஃபண்ட் வழங்கும்.
நிதி அமைச்சகம் முடிவு
இப்போது, மத்திய நிதி அமைச்சகமே 5 லட்சம் ரூபாய்க்குள் ரீஃபண்ட் கொடுக்க வேண்டியவர்களுக்கு, உடனடியாக ரீஃபண்ட் கொடுக்க முடிவு செய்து இருக்கிறது. இந்த முடிவால் சுமார் 14 லட்சம் வரிதாரர்களுக்கான ரீஃபண்ட் பணம், கூடிய விரைவில் அவர்களுக்குச் சென்று சேருமாம்.
பொருளாதாரத்தில் என்ன மாற்றம்
இப்படி கொடுக்க வேண்டிய ரீஃபண்ட் தொகைகளை உடனடியாகக் கொடுத்தால், இந்த கொரோனா வைரஸால் ஏற்பட்டு இருக்கும் நிலையற்ற தன்மையை, ரீஃபண்ட் பெறுபவர்கள் ஓரளவுக்காவது சமாளித்துக் கொள்ளலாம். எனவே மத்திய நிதி அமைச்சகம், வருமான வரி ரீஃபண்ட் கொடுக்க முடிவு செய்தது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் தான்.