இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான கனவு என்றால், அது மிகப்பெரிய பணக்காரராக வேண்டும் என்பது. ஆனால் அதற்கான முயற்சி என்ன நாம் செய்தோம் என்பது தான் கேள்வியே.
ஏனெனில் இது பலருக்கும் சாத்தியமற்றதாக தோன்றலாம். ஆனால் சரியான திட்டங்களில் முதலீடு செய்தால் அது உங்களுக்கு நல்ல பலனையே கொடுக்கும்.
இந்தியாவில் பல ஆயிரம் முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், அரசின் முதலீட்டு திட்டங்கள் என்றாலே அதற்கு தனி இடம் உண்டு. ஏனெனில் பாதுகாப்பு உண்டு. கணிசமான வருவாய் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக முதலீட்டுக்கு எந்த பங்கமும் இல்லை. அப்படியிருக்கையில் இதில் ஆச்சரியம் ஏதும் இல்லை எனலாம். அந்த வகையில் நீங்கள் கோடீஸ்வரர் ஆக பயன்படும் ஒரு முதலீட்டு திட்டத்தினைப் பற்றித் தான் நாம் இன்று பார்க்கவிருக்கிறோம்.
குழப்பமே
பலருக்கும் நிறைய சேமிக்க வேண்டும், முதலீடு செய்ய வேண்டும்? நாம் கஷ்டப்பட்டாலும், குழந்தைகளின் வருங்காலமாவது நன்றாக இருக்க வேண்டும். அந்த வகையில் எந்த பிரச்சனையும் இருக்க கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக லாபம் ஓரளவு அதிகம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால் எதில் சேமிக்கலாம், எது பாதுகாப்பானது? எது லாபகரமானது? என்பதில் தான் குழப்பமே. இது தான் பலருக்கும் பிரச்சனையே.
பிபிஎஃப் (PPF)
ஆக அந்த வகையில் எளிதில் நீங்கள் எதிர்பார்க்கும் தொகையை பெற, அரசின் சிறு சேமிப்பு திட்டமான பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்யலாம் என்கின்றனர்கள் நிபுணர்கள். இந்த திட்டம் 15 ஆண்டுகால திட்டம். ஆக இந்த திட்டத்தில் 15 வருடம் கழித்து எனக்கு 1 கோடி ரூபாய் வேண்டும். அதற்காக எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் வாருங்கள் பார்க்கலாம்.
அரசின் பொது வருங்கால வைப்பு நிதி
இன்றையகால கட்டத்தில் பாதுகாப்பாக முதலீடு செய்ய நினைப்போருக்கு, அரசின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது ஒரு வரப்பிரசாதம் தான். ஏனெனில் முதலீட்டிற்கு பங்கம் இல்லாத ஒரு சிறந்த முதலீடு. இந்த திட்டமானது 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது.
15 வருடம் கழித்து எவ்வளவு கிடைக்கும்?
இந்த திட்டத்தில், 15 வருடம் கழித்து 1 கோடி ரூபாய் வேண்டும். அதற்காக எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? தற்போதைய நிலவரப்படி, இந்த திட்டத்தில் வட்டி விகிதம் 7.1% ஆகும். இந்த திட்டத்திற்கு வரி சலுகையும் உண்டு. இந்த திட்டத்தில் முதிர்வுக்கு பின்னரும் 5 வருட தொகுப்புகளாக மீண்டும் தொடரலாம் என்பதால், இன்னும் கூடுதல் நன்மையாக பார்க்கப்படுகிறது.
எவ்வளவு முதலீடு?
பிபிஎஃப் திட்டத்தில் (பைசாபஜார் கால்குலேட்டர் அடிப்படையில் எடுக்கப்பட்டது) மாதம் 9,000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இதன் மூலம் நீங்கள் வருடத்திற்கு 1,08,000 ரூபாய் முதலீடு செய்வீர்கள். இதனை 30 வருட காலத்திற்கு முதலீடு செய்யும்போது 1,11,24,655 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும்.
மொத்தம் எவ்வளவு?
ஆக 7.1% வட்டி விகிதத்துடன் கணக்கீடு செய்யும்போது 1 வருட முடிவில், உங்களது பிபிஎஃப் கணக்கில் 1,15,668 ரூபாயாக இருக்கும். இதே இண்டாவது ஆண்டின் முடிவில் உங்களது கணக்கில் 2,39,548 ரூபாயாக இருக்கும். ஆக மொத்தத்தில் 30 ஆண்டுகள் இந்த திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அப்படி செய்யும் பட்சத்தில் 32,40,000 ரூபாய் முதலீடு செய்திரூப்பீர்கள். வட்டியுடன் சேர்த்து 11,124,655 ரூபாயாக உங்களது தொகை இருக்கும்.
குறைந்தபட்ச பங்களிப்பு?
அரசின் இந்த பிபிஎஃப் கணக்கில் வருடத்திற்கு குறைந்தபட்சம், 500 ரூபாய் முதல் செலுத்திக் கொள்ளலாம், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம். ஒரு ஆண்டில் அதிகபட்சம் 12 பங்களிப்புகள் இருக்கலாம். அதாவது 12 தவணைகளாக உங்களது தொகையை செலுத்திக் கொள்ளலாம்.
எப்படி தொடங்குவது?
அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை அஞ்சலகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகள் மூலமும் தொடங்கிக் கொள்ளலாம். ஒரு வேளை துரதிஷ்டவசமாக பிபிஎஃப் அக்கவுண்ட் ஹோல்டர் இறந்து விட்டால், அவரது மனைவியோ அல்லது சட்டபூர்வமாக யார் வாரிசுதாரரோ அவர்கள் க்ளைம் செய்து கொள்ளலாம்.
இடையில் எடுக்கலாமா?
உங்களது கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 7வது நிதியாண்டில் உங்களது பிபிஎஃப் கணக்கில் இருந்து ஓரளவு தொகையினை பெறலாம். சில வங்கிகள் 5 ஆண்டுகளுக்கு பிறகும் பணம் எடுக்க அனுமதிக்கின்றன. சில 7 ஆண்டுகளுக்கு பின்னரே அனுமதிக்கின்றன. அவ்வாறு எடுக்கப்படும் தொகையானது ஒரு நிதியாண்டில் ஒரு முறை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது. அதுவும் நடப்பு ஆண்டின் முந்தைய ஆண்டின் நிலுவையில் 50% மட்டும் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.