அடுத்து வரும் டிசம்பர் மாதம் முதல் வங்கிகளில் பெரிய அளவில் பணம் அனுப்ப பயன்படுத்தப்படும், RTGS சேவையானது 24 மணி நேரமும் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தற்போது வங்கிகளில் ஆர்டிஜிஎஸ் நடைமுறையானது வங்கியின் வேலை நாட்களில் மட்டுமே செய்யப்படுகிறது. அதோடு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. வார விடு முறை மற்றும் பண்டிகை நாட்களில் இந்த சேவையானது கிடையாது. ஆனால் வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த சேவையானது 24*7*365 மணி நேரமும் கிடைக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் 16, 2019 முதல் நெஃப்ட் சேவையினை, 24 மணி நேர சேவையாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. ஆக இந்த முறை ஆர்டிஜிஎஸ் சேவையினை 24 மணி நேரமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த சேவையினை சில நாடுகள் மட்டுமே வழங்கி வரும் நிலையில், தற்போது அந்த பட்டியலில் இந்தியாவும் விரைவில் இணைய உள்ளது.
அதெல்லாம் சரி முதலில் ஆர் டி ஜி எஸ் சேவை என்றால் என்ன? மிகப்பெரிய ஒரு தொகையினை, ஒரு வங்கியின் கிளையில் இருந்து, அதே வங்கியின் மற்றொரு கிளைக்கும், மற்ற வங்கிகளுக்கும் பணம் அனுப்ப பயன்படும் ஒரு வங்கி சேவையாகும்.
உதாரணத்திற்கு NEFT சேவையில் ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரையில் தான் பணம் அனுப்ப முடியும். அதற்கு மேல் அனுப்ப வேண்டும் எனில் ஆர் டி ஜி எஸ் சேவையினை தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில் தாமதம் இல்லாமல் உடனடியாக பணத்தினை பெற்றுக் கொள்ள முடியும்.
இதில் கவனிக்க தக்க நல்ல விஷயம் என்னவெனில் ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில், நெஃப்ட் உள்ளிட்ட இணைய பரிவர்த்தணைகளுக்கு கட்டணங்களை ரத்து செய்தது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கிக் கூட்டத்தில் இது குறித்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸ் அறிவித்தார். அதோடு வங்கிகளுக்கான ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை. அது தொடர்ந்து 4% ஆக தொடரும் என்றும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.