இன்று நள்ளிரவு முதல் வங்கிகளில் பெரிய அளவில் பணம் அனுப்ப பயன்படுத்தப்படும், RTGS சேவையானது 24 மணி நேரமும் செயல்படும் என்று சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
வங்கிகளில் தற்போது ஆர்டிஜிஎஸ் சேவையானது வங்கியின் வேலை நாட்களில் மட்டுமே செய்யப்படுகிறது.
மேலும் இந்த சேவையானது வங்கி வேலை நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
RTGS சேவை சலுகை
பொதுவிடுமுறை மற்றும் வங்கி விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில், வங்கிகளில் RTGS சேவையானது கிடையாது. ஆனால் அடுத்து இன்று நள்ளிரவு முதல் இந்த சேவையானது 24x7x365 மணி நேரமும் கிடைக்கும் என்றும் ரிசர்வ் வங்கி சமீபத்தில் தான் அறிவித்தது. இது உண்மையில் வரவேற்கதக்க ஒரு நல்ல விஷயம் தான்.
நெஃப்ட் சலுகை
கடந்த ஆண்டு டிசம்பர் 16, 2019 முதல் நெஃப்ட் சேவையினை, 24 மணி நேர சேவையாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதேபோல தற்போது ஆர்டிஜிஎஸ் சேவையினை 24 மணி நேரமாக அதிகரித்துள்ளது. இந்த சேவையினை சில நாடுகள் மட்டுமே வழங்கி வரும் நிலையில், தற்போது அந்த பட்டியலில் இந்தியாவும் இணைய உள்ளது.
மிகப்பெரிய தொகை பரிமாற்றம்
அதெல்லாம் சரி, ஆர்டிஜிஎஸ் (RTGS) சேவை என்றால் என்ன? மிகப்பெரிய ஒரு தொகையினை, ஒரு வங்கியின் கிளையில் இருந்து, அதே வங்கியின் மற்றொரு கிளைக்கும், மற்ற வங்கிகளுக்கும் பணம் அனுப்ப பயன்படும் ஒரு வங்கி சேவை தான் இந்த ஆர்டிஜிஎஸ். இதன் மூலம் மிகப்பெரிய தொகையையும் வாடிக்கையாளர்கள் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.
ஆர்டிஜிஎஸ் சேவையில் என்ன சிறப்பு?
உதாரணத்திற்கு NEFT சேவையில் ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரையில் பணம் அனுப்ப முடியும். ஆனால் அதற்கு மேல் அனுப்ப வேண்டும் எனில் ஆர்டிஜிஎஸ் சேவையினை பயன்படுத்தி தான் அனுப்ப முடியும். இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில் தாமதம் இல்லாமல் உடனடியாக பணத்தினை பெற்றுக் கொள்ள முடியும் என்பது தான்.