எல்லோருக்கும் பணக்காரன் ஆக வேண்டும் என்கிற ஆசை இருக்கத் தான் செய்யும். ஆனால் பலரும் அதற்கான முயற்சிகளை முறையாக திட்டமிட்டு எடுப்பதில்லை. ஒரு சிலர் பணக்காரன் ஆக முயற்சிகளை எடுத்தாலும், அதற்குத் தகுந்த பலன் கிடைப்பதில்லை.
அது போல, நல்ல வருமானம் கொடுப்பது போல ஆசைகாட்டி, முதலீட்டாளர்களுக்கு அல்வா கொடுத்துக் கொண்டு இருக்கிறது ருச்சி சோயா என்கிற பங்கு. வெகு சில அதிர்ஷ்டசாலிகள் இந்த பங்கு வழியாக லாபம் பார்த்து இருந்தால், அதுவே மிகப் பெரிய விஷயம் போலத் தெரிகிறது. சரி பங்கு விலை போக்கைப் பார்ப்போம்.
கடந்த ஜனவரி 2020 மாதத்தில் தான் ருச்சி சோயா பங்கு மீண்டும் வர்த்தகமாகத் தொடங்கியது. 27-01-2020 அன்று ஒரு சில நிமிடங்கள் தான் வர்த்தகமானது ருச்சி சோயா பங்கு. அப்போது, ஒரு பங்கு விலை சுமாராக 16 ரூபாய் தான். அப்போதே 16 ரூபாய்க்கு முதலீடு செய்து, 19-05-20 அன்று 736 ரூபாயைத் தொட்ட போது விற்று இருந்தால் 4,471 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம். ஆனால் அப்படி விற்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பது தான் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்.
27-01-2020 அன்று பங்குகளை வாங்கிய பின், நீங்களே நினைத்தாலும், 18-05-2020 அன்று வரை ருச்சி சோயா பங்குகளை விற்று இருக்க முடியாது. அந்த அளவுக்குத் தொடர்ந்து அப்பர் சர்க்யூட்டில் சிக்கிக் கொண்டது ருச்சி சோயா.
அதன் பிறகு, 19-05-2020 அன்று தான் ருச்சி சோயாவின் டெக்னிக்கல் சார்ட்டில், வர்த்தக நடந்ததற்கு அறிகுறியாக 61,600 வால்யூம்களைக் காட்டுகிறது. ஆக 19-05-2020 அன்று உங்கள் அதிர்ஷ்டமும், நேரமும் கை கூடி வந்திருந்தால், நீங்கள் சுமாராக 666 ரூபாயில் இருந்து 736 ரூபாய்க்குள் உங்கள் பங்குகளை விற்று வெளியேறி இருக்கலாம்.
அதன் பிறகு தொடர்ந்து சில நாட்கள் லோயர் சர்க்யூட்டில் வர்த்தகமானது.
கடந்த மே 28 & 29 தேதிகளில் கூட, ருச்சி சோயா பங்கு, மிகச் சில நிமிடங்கள் தான் வர்த்தகமாயின. அதன் பிறகு மீண்டும் அப்பர் சர்க்யூட்டைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
ஆக பங்கை வாங்கியவர்களுக்கு, சந்தை மதிப்பளவில் உயர்ந்து இருக்கும். ஆனால் அதை விற்று பணமாக மாற்றிக் கொள்ள முடியாமல் இருப்பதால் முதலீட்டாளர்களுக்கு பயன் இல்லாமல் போகிறது.
சுருக்கமாக 16 ரூபாய்க்கு விற்கத் தொடங்கிய பங்குகள், 736 ரூபாய் வரை விலை அதிகரித்தது. ஆனால் முதலீடு செய்தவர்களால் பங்குகளை விற்க முடியவில்லை.
அதன் பின் மீண்டும் விலை சரியத் தொடங்கி தற்போது 568 ரூபாயைத் தொட்டு லோயர் சர்க்யூட்டில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இப்போதும் எளிதில் ருச்சி சோயா பங்குகளை விற்க முடியவில்லை.
இந்த பங்கில், புதிதாக யாராலும் வழக்கம் போல முதலீடு செய்ய முடியவில்லை. ஏற்கனவே, இந்த பங்கில் முதலீடு செய்து இருந்தவர்களாலும் எளிதில் பங்குகளை விற்று வெளியேற முடியவில்லை. இது சுகமா அல்லது வேதனையா, என்றே தெரியவில்லை.