கொரோனா வைரஸ் காலத்தில், மக்கள் சிரமப்படக் கூடாது என்கிற நோக்கில், மத்திய அரசு, வங்கி தொடர்பாக சில சலுகைகளை அறிவித்தது நினைவிருக்கிறதா?
ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance) வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எல்லாம் சொல்லி இருந்தார்கள்.
அப்படி அதிக முறை ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுப்பது மற்றும் குறைந்தபட்சம் பேலன்ஸ் வைத்துக் கொள்ளாததற்கு எந்த அபராதம் & கட்டணம் வசூலிக்கப்படாது எனச் சொல்லி இருந்தார்கள்.
அடுத்த மாதம் முதல் அமல்
இப்படி மத்திய அரசு கட்டணங்களை வசூலிக்காது எனச் சொன்னது ஜூன் 30, 2020 வரை தான். மேற்கொண்டு எந்த புதிய அறிவிப்புகளும் வந்ததாகத் தெரியவில்லை. எனவே அடுத்த மாதம் 01 ஜூலை 2021 முதல் மீண்டும் பழைய விதிமுறைகள் எல்லாம் மீண்டும் அமலுக்கு வரப் போகிறது தெரியுமா..?
மினிமம் பேலன்ஸ் ஜாக்கிரதை
ஒவ்வொரு வங்கியும், தங்களுக்கு ஏற்றாற் போல, மினிமம் பேலன்ஸை நிர்ணயித்து இருக்கிறார். ஒரு மாதத்தில் அந்த குறிப்பிட்ட தொகை மினிமம் பேலன்ஸாக கணக்கில் இல்லை என்றால், அபராதம் அல்லது கட்டணத்தை ஜூலை மாதத்துக்கு வசூலிப்பார்கள். எனவே மினிமம் பேலன்ஸை மனதில் வைத்துக் கொண்டு வங்கிக் கணக்கில் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள்.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்
கடந்த மார்ச் 2020-ல், எஸ்பிஐ வாடிக்கையாளர்களிடம் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்கவில்லை என்றால் எந்த விதமமான கட்டணமோ அல்லது அபராதத் தொகையோ வசூலிக்கப்படாது எனச் சொன்னது நினைவு கூறத்தக்கது. எனவே எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மினிமம் பேலன்ஸ் குறித்து அச்சப்படத் தேவை இல்லை.
ATM கட்டணங்கள்
அதே போல, பொதுவாக, எந்த வங்கியில் இருந்து ஏடிஎம் கார்ட் வாங்கி இருக்கிறோமோ, அந்த வங்கியின் ஏடிஎம்-ல் 5 முறை வரை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். 3 முறை மற்ற வங்கி ஏடிஎம் இயந்திரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும்.
எஸ்பிஐ ஏடிஎம் கட்டணம்
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள், எஸ்பிஐ டெபிட் கார்ட் மூலம், எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் மாதம் 5 முறை பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற வங்கி ஏடிஎம்களில் மாதம் 3 முறை பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு மேல், எந்த வங்கி ஏடிஎம் இயந்திரத்தை, அதே மாதத்தில் பயன்படுத்தினாலும், ஒவ்வொரு முறை பயன்படுத்துவதற்கும், 8 - 20 ரூபாய் வரை, நாம் பயன்படுத்திய காரணங்களைப் பொருத்து கட்டணம் வசூலிப்பார்கள்.