நவீனமயமாகி வரும் இன்றைய காலகட்டத்தில் வீடு தேடி வரும் மளிகை, காய்கறிகள், உணவு என வீட்டு வாசற்படியிலேயே அனைத்து சேவைகளும் கிடைத்து வருகின்றன. சில வங்கிகளும் தங்களது சேவைகளை வீடு தேடி வந்து செய்து கொடுக்கின்றன. அந்த வகையில் நாட்டின் முன்னணி வங்கியான எஸ்பிஐ, தனது வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளை வீட்டு வாசலுக்கே வந்து வழங்கி வருகின்றது.
அதெல்லாம் சரி என்னென்ன சேவைகள் இப்படி வழங்கப்படுகின்றன. இதற்கு கட்டணம் உண்டா? எவ்வளவு கட்டணம்? மற்ற முக்கிய விவரங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
உண்மையில் இது போன்ற சேவைகளால், இனி மக்கள் வங்கிகளை நோக்கி செல்வதை தவிர்க்க முடியும். எளிதாக வங்கி சேவைகளை பெற முடியும். எளிதில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
சேவையை பெற பதிவு செய்ய வேண்டும்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் இந்த சேவையினை பெற https://bank.sbi/dsb என்ற இணையத்தின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது 1800 1037 188 அல்லது 1800 1213 721 என்ற டோல் ப்ரீ எண்ணிற்கு கால் செய்தும் பதிவு செய்து கொள்ளலாம். உங்களது அழைப்பு சரிபார்க்கப்பட்டு பின்னர், உங்களது கோரிக்கைக்கு ஏற்ப வங்கி சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
என்னென்ன சேவைகள் பெற முடியும்?
பணம் பெற்றுக் கொள்ளுதல், கேஸ் டெலிவரி, காசோலை பெற்றுக் கொள்ளுதல், காசோலை விண்ணப்பித்தல், பார்ம் 15H, டெலிவரி டிராப்ட்ஸ், டெர்ம் டெபாசிட் டெலிவரி, லைஃப் சர்டிபிகேட், கேஓய்சி ஆவணங்கள் பெற்று கொள்ளுதல் உள்ளிட்ட பல சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
எத்தனை மணி நேரம்?
இந்த சேவைகளை 1800111103 என்ற இலவச அழைப்பு மூலம் கால் செய்து, காலை 9 மணி முதல் 4 மணி வரை இந்த சேவையை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக நீங்கள் உங்களது வங்கிக் கணக்கு உள்ள கிளையில் பதிவு செய்த பிறகு பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு வீடு தேடி வரும் சேவைகளுக்கு கணிசமான கட்டணமும் உண்டு.
நிதி சேவைகளுக்கு எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ இந்த வீடு தேடி வரும் சேவைகளில் பணம் டெபாசிட் செய்வதற்கு 75 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணம் உண்டு.
கேஸ் பேமென்ட்/பணம் எடுப்பதற்கு 75 ரூபாய் +ஜிஎஸ்டி கட்டணம் உண்டு
காசோலையை பெற்றுக் கொள்ள - 75 ரூபாய்+ஜிஎஸ்டி
காசோலை புத்தகத்திற்கு விண்ணபிக்கும் கோரிக்கைக்கான ஆவணத்தினை பெற - 75 ரூபாய் +ஜிஎஸ்டி
நிதி அல்லாத சேவைகளை பெற எவ்வளவு கட்டணம்?
டெர்ம் டெபாசிட் ஆலோசனை & சேமிப்பு கணக்கிற்கான ஸ்டேட்மெண்ட் (இலவசம்)
நடப்பு கணப்பு ஸ்டேட்மெண்ட் (Duplicate) - 100 ரூபாய் + ஜிஎஸ்டி
பணம் எடுத்தாலும் சரி, போட்டாலும் சரி அதிகபட்சம் 20,000 ரூபாய் மட்டும் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.
வங்கிக் கிளையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சேவை பொருந்தும். அதோடு வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணும் கட்டாயம் இருக்க வேண்டும்.
இவர்களுக்கு இந்த சேவை கிடையாது?
ஜாயிண்ட் அக்கவுண்ட் ஹோல்டர்களுக்கு இந்த வீடு தேடி வரும் சேவை என்பது கிடையாது.
அதே போல் மைனர் அக்கவுண்ட் ஹோல்டர்களுக்கு இந்த சேவை கிடையாது.
காசோலை மூலம் பணம் எடுக்க அனுமதிக்கப்படும். பாஸ் புத்தகம் மூலம், திரும்ப பெறும் படிவத்தினை பயன்படுத்தியும் பணம் எடுக்க அனுமதிக்கப்படும்.
வேறு எந்தெந்த வங்கிகள்?
எஸ்பிஐ தவிர, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, இந்தஸிந்த் வங்கி மற்றும் கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட சில வங்கிகளும் இந்த வங்கி சேவையை வழங்கி வருகின்றன.
உண்மையில் இது மிக மிக நல்ல விஷயம் தான். இனி வங்கிகளைத் தேடி நாம் அலைய வேண்டியதில்லையே.