சொந்த வீட்டின் அருமை வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு தான் தெரியும். அதிலும் இன்றைய காலகட்டத்தில் வாடகை வீட்டுக்கு கொடுக்கு வாடகை இருந்தாலே, மாத இஎம்ஐ செலுத்தி விட்டு போய்விடலாம். அந்தளவுக்கு வாடகை அதிகம்.
அதிலும் சென்னை போன்ற மாநகரங்களில் வாடகை அதிகமாக இருந்தாலும் பல கண்டிசன்கள் வேறு. இப்படி பல இன்னல்களுக்கும் மத்தியில் பல நடுத்தர மக்களின் கனவே சொந்த வீடு என்பது தான்.
தற்போது கொரோனாவுக்கு பிறகு ரியல் எஸ்டேட் துறையும் சரிந்துள்ள நிலையில், அவர்களும் வீடுகளை விற்க பல சலுகைகளை வழங்கி வருகின்றனர். அதோடு வங்கிகளிலும் வட்டி விகிதம் என்பது குறைவாகவே இருந்து வருகின்றது. இந்த நிலையில் இது தான் வீடு வாங்க, கட்ட சரியான நேரம் தான் என நிபுணர்கள் கூறி வந்தனர்.
வட்டி விகிதம் அதிகரிப்பு
இதற்கிடையில் தற்போது பொருளாதார வளர்ச்சி மீண்டு வர ஆரம்பித்துள்ள நிலையில், மீண்டும் வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறையை சேர்ந்த கடன் வழங்குனரான எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. .
வட்டி விகிதம் எவ்வளவு?
தற்போது வட்டி விகிதமானது 6.95% ஆக அதிகரித்துள்ளது. இந்த வட்டி விகிதமானது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மார்ச் 31 வரையில் 6.70% ஆக இருந்த வட்டி விகிதமானது, ஏப்ரல் 1-க்கு பிறகு 6.95% ஆக அதிகரித்துள்ளது. எஸ்பிஐ தற்போது வீட்டுக் கடன் விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையில், இது மற்ற வங்கிகளையும் அதிகரிக்க தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயலாக்க கட்டணமும் அதிகரிப்பு
எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தினை மட்டும் அல்ல, செயல்பாட்டுக் கட்டணத்தையும் அதிகரித்துள்ளது. இது கடன் தொகையில் 0.40%+ ஜிஎஸ்டியும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த கட்டணம் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரையில் இருக்கும் என்றும், இதனுடன் ஜிஎஸ்டியும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் 31 வரையில் இவ்வங்கி செயல்பாட்டுக் கட்டணத்தினை 100 சதவீதம் வரை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முந்தைய சலுகைகள்?
எஸ்பிஐ-யில் சமீபத்திய விழாக்கால சலுகையின் படி, நல்ல கிரெடிட் ஸ்கோர் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 75 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக்கடனுக்கு 6.70% வட்டியும், இதே 75 லட்சம் ரூபாய்க்கு மேலாக வீட்டு கடனுக்கு 6.75 சதவீத வட்டியும் வசூலிக்கப்பட்டு வந்தது. அதோடு 100% செயல்பாட்டுக் கட்டணமும் தள்ளுபடி செய்யப்பட்டது. இது தவிர பெண்களுக்கு கூடுதலாக 5 அடிப்படை புள்ளிகளை வட்டி சலுகையாக கொடுத்து வந்தது.
இனி இஎம்ஐ அதிகரிக்கும்
இந்த நிலையில் இனி வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதம் அதிகரிக்கலாம். இதனால் மாத மாதம் செலுத்தும் இஎம்ஐ விகிதமும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடுத்தர மக்களுக்கு பலருக்கும் தங்கள் சொந்த வீடு கனவை நனவாக்குவதில் மேலும் பிரச்சனையை கொடுக்கலாம். எப்படி இருப்பினும் மற்ற தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது, எஸ்பிஐயில் வட்டி விகிதம் குறைவு தான் என்பது நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.