இன்றைய காலகட்டத்தில் பலரின் கனவு என்பதே சொந்த வீடு தான். அந்த கனவை நனவாக்க இது சரியான நேரம் எனலாம். ஏனெனில் வங்கிகள் வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தினை தொடர்ச்சியாக குறைத்து வருகின்றன.
ஆக இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் உங்கள் கனவை நனவாக்க இது சரியான நேரம் தான். கையில் பணம் வைத்துக் கொண்டு தான் இந்த வீட்டுக் கனவு நிறைவேற வேண்டுமெனில், அது மிக கஷ்டம். ஏன் அது பலருக்கு நிறைவேறா கனவாகவே இருந்துவிடும். அதுவும் இந்த காலகட்டத்தில் பலருக்கும் இது ஒரு சவாலான விஷயமே.
ஏனெனில் வீடு கட்ட வேண்டும் என்றாலே, அங்கு முதல் தடையாக நிற்பது நிதி பிரச்சனை தான். அந்த நிதி பிரச்சனையை தீர்க்க ஒரு வழி வீட்டுக் கடன். அந்த கடனும் குறைந்த வட்டியில், பல்வேறு சலுகைகளுடன் கிடைக்கிறது எனில், இது சரியான வாய்ப்பு தானே
எந்தெந்த வங்கிகள்
அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ மற்றும் கோடக் மகேந்திரா வங்கி, ஹெச்டிஎஃப்சி-யில் எவ்வளவு வட்டி விகிதம்? எவ்வளவு குறைத்துள்ளன. இது தவிர இன்னும் சில சலுகைகளையும் கொடுத்து வருகின்றன. அது என்னென்ன சலுகைகள், எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? எதில் குறைவான வட்டி, வாருங்கள் பார்க்கலாம்.
எஸ்பிஐ-யில் வட்டி குறைப்பு
இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தற்போது வட்டி விகிதத்தில் 70 அடிப்படை புள்ளிகள் வரை சலுகை அளிக்கிறது. வட்டி விகிதம் 6.70%ல் இருந்து ஆரம்பமாகிறது. வட்டி குறைப்பு மட்டுமல்ல, செயல்பாட்டுக் கட்டணம் 100 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வட்டி சலுகையானது அவரவர் சிபில்ஸ்கோரினை பொறுத்து இருக்கும் என்று அறிவித்துள்ளது.
எஸ்பிஐயில் என்ன சலுகை
நல்ல கிரெடிட் ஸ்கோர் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 75 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக்கடனுக்கு 6.70% வட்டியும், இதே 75 லட்சம் ரூபாய்க்கு மேலாக வீட்டு கடனுக்கு 6.75 சதவீத வட்டியும் விதிக்கப்படுகிறது. அதோடு
வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ-யின் யோனோ ஆப் மூலமாக விண்ணப்பித்தால், கூடுதலாக 5 அடிப்படை புள்ளிகளை வட்டியில் சலுகையாக பெற முடியும். இதோடு பெண்களுக்கு இன்னும் கூடுதலாக 5 அடிப்படை புள்ளிகளை வட்டி சலுகையாக பெற முடியும்.
கோடக் மகேந்திரா வங்கியில் என்ன விகிதம்
கோடக் மகேந்திரா வங்கி சில தினங்களுக்கு முன்பு 10 அடிப்படை புள்ளிகள் வட்டியை குறைத்துள்ளன. இந்த சலுகை அடிப்படையில் மார்ச் 31 வரையில் 6.65 சதவீத அடிப்படையில் வாடிக்கையாளர்கள் வீட்டுக்கடனை பெற முடியும். எஸ்பிஐ-யை ஒப்பிடும்போது இவ்வங்கியில் வட்டி குறைவு என்றாலும், இது எவ்வளவு தொகைக்கு பொருந்தும், என்ன அடிப்படையில் இது தீர்மானிக்கப்படுகிறது என்பது வங்கிக்கு சென்று தெரிந்து கொண்டு பின்னர் அப்ளை செய்யலாம்
கோடக் மகேந்திரா வங்கியில் என்ன சலுகை
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னனெனில் இது வீட்டுக்கடனாக இருந்தாலும் சரி, அல்லது பேலன்ஸ் டிரான்ஸ்பர் என்றாலும் இது பொருந்தும் என்று இவ்வங்கி அறிவித்துள்ளது. அது மட்டும் அல்ல, எஸ்பிஐ வங்கியினை போலவே 100 சதவீதம் பிராசசிங் கட்டணமும் இல்லை என அறிவித்துள்ளது.
ஹெச்டிஎஃப்சியில் என்ன விகிதம்
ஹெச்டிஎஃப்சி ஹவுஸிங் லோன் நிறுவனமானது கடந்த புதன்கிழமையன்று 5 அடிப்படை புள்ளிகள் வட்டியை குறைத்துள்ளது. ஆக மார்ச் 31 வரை வாடிக்கையாளர்கள் 6.75 சதவீத வட்டியில் இருந்து வீட்டுக்கடனாக பெற்றுக் கொள்ளலாம். இவ்வங்கியிலும் கோடக் மகேந்திராவினைப் போல, வீட்டுக்கடனாக இருந்தாலும் அல்லது பேலன்ஸ் டிரான்ஸ்பர் என்றாலும் இது பொருந்தும் என்று இவ்வங்கி அறிவித்துள்ளது.