இந்தியாவின் முன்னணி கடன் வழங்குனரான பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் தற்போது ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட் (RTXC) சேவையினை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் மிக எளிதில் கடன் பெறலாம் என அறிவித்துள்ளது.
அது சரி யாரெல்லாம் இந்த கடனை பெறலாம்? வேறு கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வட்டி விகிதம் என்ன? மற்ற முக்கிய விஷயங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம். எஸ்பிஐ வங்கி தொடர்ந்து தனது வாடிக்கையாளார்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை ஆன்லைன் மூலமாகவே வழங்கி வருகின்றது. குறிப்பாக எஸ்பிஐ-ன் யோனோ செயலி மூலம் பல்வேறு சேவைகளையும் வழங்கி வருகின்றது. இது வாடிக்கையாளர்களுக்கு மிக எளிதில் சேவைகளை பெற வழிவகுக்கிறது.
ஆன்லைன் மூலம் கடன்
இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமே கடனுக்காக வங்கி கிளைக்கு சென்று அலைய வேண்டியதில்லை. ஆன்லைன் மூலமாக பெற்றுக் கொள்ள முடியும். அதோடு பேப்பர் லெஸ் கடன் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த திட்டத்தின் மூலம் பிசிகலாக எந்த ஆவணமும் இன்றி இந்த கடனை பெற முடியும்.
யாரெல்லாம் வாங்கிக் கொள்ளலாம்?
இந்த கடனை மத்திய அரசு, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த பணியாளர்கள், இந்த சிறப்பு சலுகை மூலம் கடன் பெறலாம். அதோடு எஸ்பிஐ வங்கியில் உள்ள சம்பள கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த கடனை பெற முடியும். அவர்களுக்கு அதிகபட்சமாக 35 லட்சம் ரூபாய் வரையில் கடன் கிடைக்கும்.
செயல்பாட்டுக் கட்டணம் ரத்து?
இந்த கடனுக்கான அனைத்து செயல்பாடுகளும் ஆன்லைனிலேயே செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அதோடு இந்த வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த கடனுக்கான செயல்பாட்டுக் கட்டணம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பயனுள்ள வசதிகள்
நாட்டின் மத்திய அரசு டிஜிட்டல் வசதியினை ஒவ்வொரு துறையிலும் உட்புகுத்தி வரும் நிலையில், எஸ்பிஐ இந்த காகிதமில்லா கடன் வசதி, உண்மை வாடிக்கையாளர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications