இந்தியாவிலேயே அதிக வங்கிக் கிளை, வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், அதிகம் கடன் கொடுத்திருக்கும் வங்கி, அதிகம் டெபாசிட்டை வாங்கி வைத்திருக்கும் வங்கி எல்லாமே எஸ்பிஐ என்கிற ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தான்.
இந்திய அரசோ அல்லது மத்திய ரிசர்வ் வங்கியோ, வங்கிகள் தொடர்பாக ஒரு விஷயத்தை அறிவித்தால், பெரும்பாலும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எவ்வளவு சீக்கிரம் அதை நடைமுறைக்குக் கொண்டு வர முடியுமோ அவ்வளவு விரைவாக நடைமுறைக்குக் கொண்டு வந்துவிடும். உதாரணமாக மார்ச் 2020-ல்அறிவித்த இ எம் ஐ மாரிடோரியத்தைச் சொல்லலாம்.
இந்த முறை எஸ்பிஐ, தன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல விஷயத்தைச் சொல்லி இருக்கிறது.
SBI ட்விட் விவரம்
இனி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில், சேமிப்புக் கணக்கு (Savings Bank Account) வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், வங்கிப் பரிவர்த்தனைகள் தொடர்பாக, எஸ்பிஐ வங்கியில் இருந்து வரும் எஸ் எம் எஸ்-களுக்கு, எஸ் எம் எஸ் கட்டணத்தை செலுத்தத் தேவை இல்லை எனச் சொல்லி இருக்கிறது எஸ்பிஐயின் அதிகார பூர்வ ட்விட்டர் பக்கம்.
மினிமம் பேலன்ஸ்
அதே ட்விட்டில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கிக் கணக்கில், மாதாந்திர சாரசரி இருப்புத் தொகையை (monthly average balance) பராமரிக்கவில்லை என்றால், அதற்கு ஒரு கட்டணத்தை செலுத்த வேண்டி இருந்தது. இனி அதையும் சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள் செலுத்தத் தேவை இல்லை எனச் சொல்லி இருக்கிறது எஸ்பிஐ.
44 கோடி கணக்குகள்
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் சுமாராக 44 கோடிக்கும் மேற்பட்ட சேமிப்பு வங்கிக் கணக்குகள் இருக்கிறதாம். எஸ் எம் எஸ் & மாதாந்திர சராசரி இருப்புத் தொகை பராமரிக்காததற்கான கட்டணங்களை செலுத்தத் தேவை இல்லை என்கிற செய்தி, 44 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் ஒரு விஷயமாம்.
சேமிப்புக் கணக்கு வட்டி
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, தன்னுடைய சேமிப்புக் கணக்குகளில் செய்யப்படும் டெபாசிட் பணத்துக்கு, கடந்த 31 மே 2020 முதல் 2.70 சதவிகிதம் வட்டி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். 1 லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிப்புக் கணக்கில் பேலன்ஸ் வைத்திருப்பவர்களுக்கும் இதே 2.7 % வட்டி தான் கொடுக்கிறார்களாம்.