சேமிப்பு என்பது நம் வாழ்வில் அத்தியாவசியமான ஒன்று என்றாலும், அது மூத்த குடி மக்கள் வாழ்வில் அடிப்படை வாழ்வாதாரமாக பார்க்கப்படுகிறது.
இதனாலேயே மூத்த குடி மக்களுக்கான மிக மிக பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களை வங்கிகளும், அரசும் ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது எஸ்பிஐ வங்கியில், மூத்த குடி மக்களுக்கான சிறப்பு பிக்ஸட் டெபாசிட் திட்டம். இரண்டாவது அஞ்சலக திட்டமான மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம்.
எஸ்பிஐ-யின் வீகேர்
கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் அனைவருக்கும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வயதானவர்களுக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா புதிய சேமிப்புத் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தது. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, மூத்த குடிமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வீகேர் சீனியர் சிட்டிசன்ஸ் டெர்ம் டெபாசிட் ஸ்கீம் என்ற சிறப்பு நிலையான வைப்பு நிதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
யாரெல்லாம் இணையலாம்?
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இருப்பினும், இந்தத் திட்டம் என்ஆர்ஐ மூத்த குடிமக்களுக்குப் பொருந்தாது. இத்திட்டத்தில் அதிகபட்சம் ரூ.2 கோடி வரையில் டெபாசிட் செய்யலாம். இத்திட்டத்துக்கான முதிர்வு காலம் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 10 ஆண்டுகள் ஆகும்.
கூடுதல் வட்டி விகிதம்
மற்ற சேமிப்புத் திட்டங்களை விட இத்திட்டத்தின் கீழ் 0.8% அதிகமான வட்டி கிடைக்கும். உதாரணமாக, ஐந்தாண்டு வைப்பு நிதியில் எஸ்பிஐ தற்போது 5.00% வட்டி விகிதத்தை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது எனில். ஆனால் இந்த வீகேர் திட்டத்தின் கீழ் ஒரு மூத்த குடிமகன் செய்த வைப்பு நிதிக்கு 5.80% வட்டி கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தங்களது டெபாசிட் கால வரம்பு மாதாந்திர அளவிலா அல்லது காலாண்டு அளவிலா என்று தேர்ந்தெடுக்க வேண்டும்.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் (SCSS )
அஞ்சலகத்தில் உள்ள மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் (SCSS ) இது அரசின் திட்டம் என்பதால் மிக பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த சேமிப்பு திட்டமாகும். இந்த சேமிப்புத் திட்டத்தினை ஓய்வூதிய சலுகைகள் கிடைத்த ஒரு மாதத்திற்குள் கணக்கு திறக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை உண்டு.
யாரெல்லாம் இணையலாம்?
இந்த சேமிப்பு திட்டத்தில் சேர ஒரு நபர் 55 வயது அல்லது 60 வயது, அதற்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்பு பணியாளார்களும் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய தகுதியானவர்கள் தான். அரசின் இந்த சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரையில் இருக்கலாம். எனினும் பணியில் இருந்து ஓய்வுபெற்றபோது பெறப்பட்ட தொகைக்கு மேல் இருக்கக் கூடாது.
முதிர்வு காலம் எவ்வளவு?
இந்த சேமிப்பு திட்டத்திற்கு காலாண்டுக்கு ஒரு முறை அரசு வட்டியை மாற்றியமைக்கிறது. கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 7.40% ஆக இருந்தது. இந்த SCSS திட்டத்தின் முதிர்வுகாலம் 5 ஆண்டுகள் தான். இருப்பினும் இந்த திட்டத்தினை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். மூத்த குடி மக்களுக்கான இந்த சேமிப்பு திட்டத்தில் வரி சலுகைகளும் உண்டு. இது 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் வரை வரி விலக்கு கோரலாம்.
இரண்டு திட்டங்களுக்கும் என்ன வேறுபாடு?
மேற்கண்ட இரு திட்டங்களுமே மூத்த குடிமக்களுக்கான திட்டம் என்றாலும், வட்டி விகிதம் வேறுபடுகிறது. SCSS திட்டத்தில் முதிர்வுக்கு முன்னாள் வெளியேறினால், உங்கள் டெபாசிட் தொகையில் 1.5% தொகை அபராதமாக கொடுக்க வேண்டியிருக்கும். இதே 2 வருடம் முதல் 5 வருடத்திற்கு பணத்தினை எடுத்தால் 1% அபராதமாக கொடுக்க வேண்டியிருக்கும். எஸ்பிஐயிலும் மூத்த குடி மக்களுக்கு பணம் எடுக்க அனுமதி உண்டு. ஆனால் கூடுதல் வட்டி விகிதமும் கிடையாது. அதோடு அபராதம் 0.5% இருக்கலாம்.