சமீபத்திய நாட்களாக மிக பரப்பரப்பாக பேசப்பட்டு வரும் விஷயங்களில் எஸ்பிஐ அதன் ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருப்பவர்களிடம், கடந்த ஐந்து ஆண்டுகளில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து இருப்பதாக ஐஐடி தனது ஆய்வில் தெரியவந்தது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறையை சேர்ந்த முன்னணி வங்கியான எஸ்பிஐ, நாடு முழுக்க 44 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளார்களை கொண்டுள்ளது. இந்த வங்கியில் அரசு ஊழியர்கள், கேஸ் மானியம், அரசு சலுகை பெறும் திட்டங்கள் என பலவற்றிற்கும் மக்கள் பயன்படுத்துவது இந்த திட்டத்தினை தான்.
ஆக இப்படி பல கோடி மக்கள் பயன்படுத்தும் வங்கியில், கட்டணம் வசூலித்திருப்பதாக வெளியான தகவலையடுத்து இது மிக பரப்பரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் இந்த கணக்கினை பயன்படுத்துபவர்களில் அதிகம் பேர் பொருளாதாரத்தில் பின்னடைவில் இருக்கும் ஏழை எளிய மக்கள் தான்.
ரிசர்வ் வங்கி அனுமதி
எஸ்பிஐ வங்கியின் Basic Savings Bank Deposit கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க தேவை இல்லை. இந்த கணக்கு வைத்திருப்போர் 4 முறைக்கு மேல் பணப் பரிவர்த்தனையில் ஈடுபடும்போது கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இது குறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிசர்வ் வங்கி வழங்கிய அனுமதியின் படி, Basic Savings Bank Deposit கணக்குகளில் 4 பரிவர்த்தனைகளுக்கு மேல், வங்கிகள் நியாயமான கூடுதல் தொகை வசூலிக்கலாம் என்று தெரிவித்தது.
வாடிக்கையாளர்களுக்கு முன்னறிவிப்பு
இதன்படி,15 ஜூன் 2016ம் ஆண்டு முதல் Basic Savings Bank Deposit கணக்குகளுக்கு 4 பரிவர்த்தனைகளுக்கு மேல் பணம் வசூலிக்க தொடங்கியதாகவும் கூறியுள்ளது. மேலும் இதற்கான முன்னறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் எஸ்பிஐ வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டணம்
2020 ஆகஸ்ட் மாதம் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட உத்தரவில், 2020 ஜனவரி 1ம் தேதி முதல் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வசூலிக்கப்பட்ட பணத்தை வாடிக்கையாளர்களிடம் திருப்பிச் செலுத்த வேண்டுமென, மத்திய வரிகள் வாரியம் வங்கிகளுக்கு அறிவுறுத்தியது. மேலும் அதன் பிறகு பணம் வசூலிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
இது தான் நடந்தது?
CBDT அறுவுறுத்தலின் படி, அதன் பின்னர் பணத்தை திருப்பிச் செலுத்திவிட்டதாகவும், மாதம் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் மட்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. அதன் பிறகு டிஜிட்டல் சேவைகளுக்கும் இந்த கணக்கிற்கு கட்டணம் வசூலிப்பதை வங்கிகள் நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மினிமம் பேலன்ஸ் தேவையில்லை
உண்மையில் இந்த ஜீரோ பேலன்ஸ் கணக்கில் என்ன தான் நடக்கிறது? இந்த கணக்கிற்கான விதிமுறைகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம். எஸ்பிஐ-யில் இந்த கணக்கில் மினிமம் பேலன்ஸ் என்பது தேவையில்லை. கட்டணமில்லாமல் ஏடிஎம் கார்டு பெற்றுக் கொள்ளலாம். டெபாசிட் மற்றும் வித்டிராவல் கட்டணங்கள் இல்லை. அதோடு கணக்கு செயல்படாமல் இருந்தாலும் எந்த கட்டணமும் விதிக்கப்படுவதில்லை.
ஏடிஎம்மில் பணம் எடுத்தல்
எஸ்பிஐ-யின் ஜீரோ பேலன்ஸ் கணக்கில் அதிகபட்சமாக 4 முறை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். இது வங்கி - வங்கி, வங்கி - மற்ற வங்கி என எதில் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். வழக்கமான சேமிப்பு கணக்குகளுக்கு போலவே, ஜீரோ பேலன்ஸ் கணக்கிற்கும் 1 லட்சம் ரூபாய் வரையில், ஒரு வருடத்திற்கு வட்டி விகிதம் 2.70% வழங்கப்படுகிறது.