டெல்லி: பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. இதில் மூத்த குடிமக்களுக்கு ஊக்குவிப்பினை அளிக்கும் விதமாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டது.
இதன்படி மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் சேமிப்பு வரம்பானது 15 லட்சம் ரூபாயில் இருந்து, இரு மடங்கு அதிகரிக்கப்பட்டு, 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
பொதுவாக பலருக்கும் இளமை காலத்தில் எப்படி கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. முதுமை காலத்தில் ஆவது எந்த பிரச்சனையும் இல்லாமல், நிம்மதியாக இருக்க வேண்டும் என்பது தான். அப்படி யாரையும் சாராமல், குடும்ப தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என நினைப்பர். இதற்கு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் பயனுள்ளதாக இருக்கும் எனலாம்.
நிபந்தனை?
இந்த சேமிப்பு திட்டத்தில் சேர ஒரு நபர் 55 வயது அல்லது 60 வயது, அதற்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்பு பணியாளர்களும் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய தகுதியானவர்கள் தான்.
இந்த ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரையில் இருக்கலாம். எனினும் பணியில் இருந்து ஓய்வுபெற்றபோது பெறப்பட்ட தொகைக்கு மேல் இருக்கக் கூடாது என்ற நிபந்தனை இருந்தது. இதன் காரணமாக 15 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய முடியாத நிலை தான் இருந்து வந்தது. ஆனால் பட்ஜெட்டில் இது 30 லட்சம் ரூபாயாக உயர்த்தபப்ட்டுள்ளது.
முதிர்வு காலம் எப்படி?
மூத்த குடிமக்கள் ஓய்வூதிய திட்டத்தின் முதிர்வுகாலம் 5 ஆண்டுகள் தான். இருப்பினும் இந்த திட்டத்தினை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். இந்த திட்டத்தில் முன் கூட்டியேவும் கணக்கினை முடித்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு தான் அனுமதிக்கப்படுகிறது. இதற்கு டெபாசிட் தொகையில் 1.5% அபராதம் உண்டு. இதே 2 வருடங்களுக்கு பிறகு முடித்தால் 1% டெபாசிட் தொகையில் இருந்து கழிக்கப்படும்.
வட்டி எவ்வளவு?
தற்போதைய நிலவரப்படி இந்த திட்டத்தில் வட்டி விகிதம் 8% ஆக உள்ளது. இது அரசின் கீழ் செயல்படுவதால் பாதுகாப்பானதாகவும் பார்க்கப்படுகிறது. இது நிரந்தர வருமானம் தரும் ஒரு திட்டமாகவும் உள்ளதால் இது பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது.
வரிசலுகை?
மூத்த குடி மக்களுக்கான திட்டம் என்பதால் இதில் வரி சலுகையும் உண்டு. இதில் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் வரை வரி விலக்கு கோரலாம். வருமான வரி விதிக்கப்பட்டாலும், 15h அல்லது 15g படிவத்தை வழங்கி சலுகையினை பெறலாம்.
எப்படி தொடங்குவது?
இந்த திட்டத்தை பல முன்னணி பொதுத்துறை மற்றும் சில தனியார் வங்கிகளிலும் வழங்கப்படுகிறது. அஞ்சலகத்திலும் தொடங்கிக் கொள்ளலாம். இதற்கன பார்மினை கொடுத்து தொடங்கிக் கொள்ளலாம். இதற்கு 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தேவை முகவரி மற்றும் அடையாள அட்டை தேவை. ஆதார், பான் உள்ளிட்டவை ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
கணக்கு தொடங்கும்போது உங்களது ஓரிஜினல் ஆவணங்களை காட்ட வேண்டியிருக்கும். ஆக கணக்கும் தொடங்கும்போது அனைத்து ஆவணங்களையும் எடுத்து செல்ல வேண்டியிருக்கும்.