பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் நடுத்தர மக்களுக்கு அதிகப் பலன் அளிக்கும் வகையில் 80சி பிரிவில் பெறும் வரி சலுகையை இரட்டிப்புச் செய்யப் பல அமைப்புகள் கோரிக்கை விடுத்த நிலையில் FICCI அமைப்பும் மத்திய நிதியமைச்சகத்திடமும், பட்ஜெட் குழுவிடமும் பரிந்துரை செய்துள்ளது.
80சி பிரிவு வரிச் சலுகை
தனிநபர் வருமான வரியில் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையிலான வரிச் சலுகை கிடைக்கும் நிலையில், 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் இதன் அளவீட்டை இரட்டிப்புச் செய்து 3,00,000 ரூபாய் வரையில் வரிச் சலுகை அளிக்க வேண்டும் என Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI) அமைப்புக் கோரிக்கை வைத்துள்ளது.
கோரிக்கைகள்
ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் அறிக்கை தயாராகும் முன்பு மத்திய நிதியமைச்சகத்திற்கும், பட்ஜெட் குழுவிற்கும் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைப்புகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் பல்வேறு கோரிக்கைகளையும், பரிந்துரையும் முன்வைக்கும். பொருளாதாரம் மற்றும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கோரிக்கைகளை ஆய்வு செய்த பின்பு ஏற்புடையதாக இருந்தால் கண்டிப்பாகப் பட்ஜெட் அறிக்கையில் இடம்பெறும்.
தனிநபர் வருமான வரி
அந்த வகையில் இந்த வருடம் பெரும்பாலான அமைப்புகள் தனிநபர் வருமான வரிப் பரிவில் அதிகச் சலுகை அளிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளது. இதனால் 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தனிநபர் வருமான வரிப் பிரிவில் அதிகச் சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2020 கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பால் அனைத்து தரப்பும் அதிகளவிலான பாதிப்பு அடைந்துள்ள நிலையில் மக்களுக்கு 80சி பிரிவில் அதிகச் சலுகை அளிப்பதன் மூலம் முதலீட்டுச் சந்தையில் அதிகளவிலான நிதி முதலீடுகள் குவியும், இதேவேளையில் அரசு அமைப்பின் நிதிநிலையும் மேம்படும். 80சி பிரிவில் தற்போது 1.50 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வரிச் சலுகை அளிக்கப்படும் நிலையில், இதன் அளவீட்டை 3,00,000 ரூபாய் வரையில் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
நிர்மலா சீதாராமன்
இந்தக் கோரிக்கையை மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் ஏற்றுப் பட்ஜெட் அறிவிப்பில் அறிவிப்பாரா..? என்பதைப் பிப்ரவரி 1ஆம் தேதி வரையில் காத்திருந்து தெரிந்துகொள்ள வேண்டும்.
அருண் ஜெட்லி அறிவிப்பு
2014 பட்ஜெட்டில் அருண் ஜெட்லி அவர்கள் நிதியமைச்சராக இருந்தபோது 80சி பிரிவில் கிடைக்கும் வரி சலுகையை 1 லட்சம் ரூபாயில் இருந்து 1.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்த உயர்வு மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது 3 லட்சமாக உயர்த்தப்பட்டால் மக்களுக்கு உண்மையில் இது ஜாக்பாட் தான்.