நடப்பு நிதியாண்டிற்காக தங்க பத்திர விற்பனையானது தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்களை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
ஜூன் 20 அன்று தொடங்கிய இந்த விற்பனையானது, ஜூன் 24, 2022 அன்று முடிவடையவுள்ளது.
இதில் எவ்வளவு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வேறு சலுகைகள் ஏதும் இருக்கா? வாருங்கள் பார்க்கலாம்.
எப்போது முடிவு?
நடப்பு நிதியாண்டின் முதல் தங்க பத்திர விற்பனைக்கான சீரிஸ் ஆனது ஜூன் 20, 2022 அன்று தொடங்கியுள்ளது. இது ஜூன் 24 அன்று முடிவடையவுள்ளது. இன்னும் 5 நாட்கள் மட்டுமே இந்த பத்திரங்களை வாங்கிக் கொள்ளலாம். இந்த பத்திரங்களை ஆன்லைனில் வாங்குவதால் 50 ரூபாய் தள்ளுபடியினை பெற்றுக் கொள்ளலாம்.
விலை நிர்ணயம்?
இந்த தங்க பத்திர விற்பனையில் ஒரு கிராமுக்கு 5091 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆன்லைனில் வாங்குபவர்களுக்கு, 5041 ரூபாய்க்கும் கிடைக்கும். தற்போது கமாடிட்டி சந்தை விலையுடன் ஒப்பிடும்போது இது சற்று குறைவாகத் தான் உள்ளது. இன்று எம் சி எக்ஸ் சந்தையில் 10 கிராமுக்கு 50,866 ரூபாய் என்ற லெவலில் தங்கம் விலை காணப்படுகிறது.
எப்போது வெளியீடு?
ஜூன் 24 அன்று முடிவடையவுள்ள இந்த தங்க பத்திர விற்பனையானது, ஜுன் 28 அன்று வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் இரண்டாவது கட்ட வெளியீடானது ஆகஸ்ட் 22 - 26, 2022 அன்று வெளியிடப்படவுள்ளது.
கவர்ச்சிகரமான முதலீடு
ஆரம்பத்தில் தங்க பத்திர திட்டம் பிசிகல் தங்கத்தின் தேவையினை குறைக்கும் பொருட்டு கொண்டு வரப்பட்ட ஒரு திட்டமாகத் தான் இருந்தது. ஆனால் தொடங்கிய சிறிது காலத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பினை பெறவே, நல்ல முதலீட்டு ஆப்சனாகவும் பார்க்கப்படுகிறது. இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5% வட்டியும் வழங்கப்படுகின்றது.
முதிர்வு காலம்?
தங்க பத்திரத்தின் முதிர்வு காலம் 8 வருடங்கள் ஆகும். இந்த பத்திரங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், நீண்டகால மூலதன ஆதாய வரி விதிக்கப்படுவதில்லை. ஆனால் முன் கூட்டியே உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டிலும் கேபிட்டல் டேக்ஸ் உண்டு.
எவ்வளவு வாங்கலாம்?
ஒரு தனி நபர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இதே அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை வாங்கிக் கொள்ளலாம். ஆக இவ்வளவு தான் வாங்க முடியும் என்ற நிபந்தனைகள் ஏதும் இல்லை. உங்களின் வசதிகேற்ப வாங்கிக் கொள்ளலாம்.
எங்கெல்லாம் வாங்கலாம்?
இந்த தங்க பத்திரங்கள் என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இங்கு வாங்க டீமேட் கணக்கு தேவைப்படும். வங்கிகள், அஞ்சல் அலுவலகம், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மூலமும் வாங்கிக் கொள்ளலாம். அல்லது வங்கிகளின் டிஜிட்டல் தளத்திலும் மூலம் எளிதாக வாங்கிக் கொள்ளலாம். பல வங்கிகளும் இந்த சேவையினை வழங்கி வருகின்றன.
கடன் பெறலாம்
பிசிகல் தங்கத்தினை போன்றே இந்த தங்க பத்திரங்களையும் பிணையமாக வைத்து கடன் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த தங்க பத்திரங்களுக்கு பதிலாக தங்கமாக வாங்கிக் கொள்ள முடியாது. இந்த தங்க பத்திரம் பிசிகல் தங்கத்தினை குறைக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். மேலும் முதலீட்டு நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். ஆக இந்த திட்டத்தில் நாம் பிசிகல் கோல்டாக பெற முடியாது. பணமாக மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.