முன்பெல்லாம் சொந்த வீடு கட்டுவதற்கு பூர்வீக சொத்துக்கள் இருக்கிறதா? அல்லது பணம் இருக்கிறதா? என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. திரும்பும் திசையெல்லாம் வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு லோன் வழங்குகின்றன. இப்படி கிடைக்கும் லோன்களை பலர் அவசர அவசரமாக வாங்கி விடுகின்றனர். அதன் பிறகு ஈஎம்ஐ செலுத்துவதை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர்.
இந்தப் பிரச்சனையை வங்கிகளும் சாதகமாகவே பயன்படுத்துகின்றன. ஒரு சில நிதி நிறுவனங்கள் 25 முதல் 30 ஆண்டுகள் வரையிலான கடன் காலத்தை வழங்குகின்றன. இது போன்ற நீண்ட கால கடன்களுக்கு குறைந்த ஈஎம்ஐ செலுத்தினால் போதுமானது. கடன்காலம் என்பது நீங்கள் வாங்கிய லோனுக்கு வங்கிகள் தரும் அவகாசம். வங்கிகள் எத்தனை ஆண்டுகள் தருகிறதோ அத்தனை ஆண்டுகளுக்கும் மாதா மாதம் ஈஎம்ஐ செலுத்த வேண்டும்.
நீண்ட கால கடன்களுக்கு ஈஎம்ஐ தொகை குறைவாக இருக்கும். அதுவே குறைந்த காலக் கடன்களுக்கு நீங்கள் அதிக ஈஎம்ஐ செலுத்த வேண்டி வரும். வங்கிகள் லோன் பிராசஸை எல்லாம் முடித்துவிட்டு அக்ரீமெண்டில் எவ்வளவு ஈஎம்ஐ செலுத்த வேண்டும் என்பதை குறிப்பிட்டிருக்கும். இதை பார்ப்பதற்கு நிம்மதியாக இருக்கும். நாம் வாங்கிய கடனுக்கு இவ்வளவுதானா ஈஎம்ஐ? என்று ஆரம்பத்தில் தோன்றும். ஆனால் இதில் சில மர்மமும் ஒளிந்திருக்கிறது.

இன்றைய இளைய தலைமுறையினர் சீக்கிரமாக வீடு வாங்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். அதற்காக வங்கிகளை நாடுகின்றனர். குறிப்பாக 25 முதல் 40 வயதுக்குட்பட்ட மாதச் சம்பளக்காரர்கள் வங்கிகளிடம் ஸ்டெப் அப் ஈஎம்ஐ முறையை கேட்கின்றனர்.
ஸ்டெப் அப் ஈஎம்ஐ என்றால் ஒன்றும் இல்லை.. வழக்கமான இஎம்ஐ முறையில் ஒரே தொகையை செலுத்தி வரவேண்டும். இது கடன்காலம் முழுவதும் மாறவே மாறாது. ஆனால் ஸ்டெப் அப் ஈஎம்ஐ என்பது கடன் வாங்கிய போது ஈஎம்ஐ தொகை குறைவாக இருக்கும். காலம் செல்லச் செல்ல நீங்கள் அதிக ஈஎம்ஐ செலுத்த வேண்டிவரும்.
நகரங்களில் வீடு வாங்குவது என்பது இன்றளவும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. அப்படி இருக்கையில் பிற்காலத்தில் அதிக ஈஎம்ஐ செலுத்தினாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் தான் பலர் லோன் பெறுகின்றனர். அதுவும் இன்றைய சூழலில் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமல் மாதாந்திர கைக்காசு குறையாமல் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களே அதிகம். இப்போது ஈஎம்ஐ அதிகம் செலுத்தினால் கையில் உள்ள பணம் குறைந்து விடும். எனவே எதிர்காலத்தில் சம்பளம் அதிகரிக்கும் போது சேர்த்து கட்டிக் கொள்ளலாம் என்ற எண்ணமே இதற்குக் காரணம்.
ஆனால் இது உங்களை மிகப்பெரிய கடன் சுமையில் தள்ளிவிடும். இதை ஒரு எளிய உதாரணத்தோடு பார்ப்போம். நீங்கள் லோன் பெறுகிறீர்கள் இதே ஸ்டெப் முறையை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்காக உங்கள் கடன் காலத்தை 20 ஆண்டிலிருந்து 30 ஆண்டாக மாற்றுகிறீர்கள். முதலில் ஈஎம்ஐ தொகை 10 முதல் 12 சதவீதம் வரை குறைவாக தான் தோன்றும். ஆனால் வட்டியை சிந்தித்துப் பார்த்தீர்களானால் கணக்கு புரிய வரும். காலம் செல்ல செல்ல நீங்கள் வாங்கிய கடனுக்கு 60 சதவீதத்திற்கும் மேல் வட்டி செலுத்தி இருப்பீர்கள்.
ஆரம்பத்தில் கடன் தொகை குறைவாக இருக்கிறது என்று நிம்மதி பெருமூச்சு விட்டாலும் ஒவ்வொரு மூன்று முதல் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை ஈஎம்ஐ தொகை உயரக்கூடும். இது போன்ற சூழலில் உங்களுக்கு சம்பளம் உயரவில்லை என்றால் பிரச்சனைதான். அதுவும் வேலை வாய்ப்பு சந்தை படுமோசமடைவதை பார்த்து வருகிறோம். இதற்கு இடையில் வேலை மாற்றம், வேலை இழப்பு, எதிர்பாராத மருத்துவ செலவுகள், எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்காமல் போவது போன்ற சவால்கள் ஏற்பட்டால் நிலைமை என்னும் மோசமாகிவிடும்.
ஸ்டெப் அப் ஈஎம்ஐ யாருக்கு ஏற்றது?: ஒரு வேலையில் இருக்கிறீர்கள்.. அது நிலையான பணி, அடுத்தடுத்து கண்டிப்பாக பணி உயர்வு கிடைக்கும் என்றால் நீங்கள் தாராளமாக இந்த ஸ்டேப் அப் ஈஎம்ஐ திட்டத்தை பயன்படுத்தலாம். அதோடு அவசரத்திற்கு கையில் பணம் இருக்கிறது. இனி நான் எதற்காகவும் பிற கடன்களை வாங்க மாட்டேன் என்பவர்களும் ஸ்டெப் அப் ஈஎம்ஐ திட்டத்தை பயன்படுத்தலாம்.
அடுத்து வரும் 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் உங்களுக்கு பெரிய தொகை கைக்கு வரவிருக்கிறது. அதை வைத்து உடனே உங்கள் கடன் தொகையை செலுத்திவிடுவீர்கள் என்றாலும் இந்த ஸ்டெப் அப் ஈஎம்ஐ திட்டம் உதவிகரமானதாக இருக்கும். எனவே வங்கிகள் வழங்கும் திட்டங்களை எல்லாம் பார்த்துவிட்டு எந்த திட்டமிடலும் இல்லாமல் லோனில் இறங்கிவிட்டால் கடும் நிதி நெருக்கடியில் சிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களுடைய தற்போதைய நிதி நிலை எப்படி இருக்கிறது? எதிர்காலத்தில் உங்களால் கடன் சுமையை தாங்க முடியுமா? என்பதை எல்லாம் சரியாக யோசித்து திட்டமிடுவது நல்லது!


Click it and Unblock the Notifications