சென்னை: சிறிதளவு முதலீடு செய்து நிலையான வருமானத்தை பெறுவதற்கு விரும்பும் முதலீட்டாளர்கள், சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது. தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களில் எதில் வேண்டுமானாலும் நீங்கள் முதலீடு செய்யலாம். முதலீடு செய்து நிலையான வருமானத்தைப் பெற விரும்பும் முதலீட்டாளர்களுக்கான சிறு சேமிப்புத் திட்டங்கள் சிலவற்றை விவரிக்கிறது இந்தப் பதிவு.
அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு (Post Office Savings Account): ரூ.500 செலுத்தி இந்த கணக்கைத் தொடங்கலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. ஆண்டின் இறுதியில் கணக்கு இருப்பு ரூ.500-க்கு குறைவாக இருந்தால், கணக்கு பராமரிப்பு கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும். கணக்கு இருப்பு 'பூஜ்ஜியம்' ஆகும்போது கணக்கு தானாக மூடப்படும். இந்த கணக்கில் முதலீடு செய்வது மூலம் வருடா வருடம் 4 சதவீதம் வருமானம் கிடைக்கும்.

5 ஆண்டு தொடர் வைப்புத் திட்டம் (RD): குறைந்தபட்சம் ரூ 100 முதலீடு செய்து இந்தக் கணக்கை ஆரம்பிக்கலாம் . இதிலும் அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. RD கணக்கில் வரும் வட்டி வருமானம் ஆண்டுக்கு 6.7 சதவீதம் ஆகும் .
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: குறைந்தபட்சம் ரூ 1,000 முதலீடு செய்து இந்தக் கணக்கைத் திறக்கலாம், ஆனால் ரூ.30 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்ய முடியாது. இந்தத் திட்டத்தில் கிடைக்கும் வட்டியானது 8.2 சதவீதம் ஆகும் .
பொது வருங்கால வைப்பு நிதி (PPF): ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். PPF திட்டத்தில் ஆண்டுக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
கிசான் விகாஸ் பத்ரா: குறைந்தபட்சம் ரூ 1,000 முதலீடு செய்து இந்தக் கணக்கைத் திறக்கலாம். இதற்கு அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. இந்தத் திட்டத்தில் கிடைக்கும் வட்டியானது ஆண்டுக்கு 7.5 சதவீதம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY): குறைந்தபட்சம் ரூ. 250 முதலீடு செய்து இந்தக் கணக்கைத் திறக்கலாம், ஆனால் ஒரு நிதியாண்டில் ரூ. 1.5 லட்சத்துக்கு மிகாமல் மொத்தமாகவோ அல்லது பல தவணைகளாகவோ முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் வழங்கப்படும் வட்டி ஆண்டுக்கு 8.2 சதவீதம்.
இந்தத் திட்டங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வட்டி விகிதங்களை அரசு மாற்றியமைக்கும். எனவே தற்போதுள்ள வட்டி விகிதங்களை தெரிந்து கொள்வதற்கு அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகவும்.


Click it and Unblock the Notifications