சவரன் கோல்டு பாண்ட் (SGB) வைத்திருப்பவர்களுக்கு ரிசர்வ் வங்கி இன்று ஒரு முக்கிய வாய்ப்பை வழங்குகிறது. பழைய கோல்டு பாண்டுகளில் முதலீடு செய்தவர்கள், முதிர்வு காலத்திற்கு முன்பே அதிலிருந்து வெளியேற விரும்பினால் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். பொதுவாக இந்த பாண்டுகளின் முதிர்வு காலம் 8 ஆண்டுகள் என்றாலும், 5 ஆண்டுகள் லாக்-இன் காலம் முடிந்த பிறகு முதலீட்டாளர்கள் வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள். இதன் மூலம் முழு முதிர்வு காலத்திற்கு முன்பே உங்கள் முதலீட்டைப் பணமாக்கிக் கொள்ள முடியும்.
இந்த மாதம் வட்டி வழங்கப்பட வேண்டிய குறிப்பிட்ட சீரிஸ் பாண்டுகளுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு பொருந்தும். இதைப் பயன்படுத்த விரும்பும் முதலீட்டாளர்கள், கடைசி தேதிக்கு முன்னதாகவே வங்கி அல்லது தபால் நிலையங்களில் இதற்கான படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். வட்டி வழங்கப்படும் தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே இந்த விண்டோ திறக்கப்படும். உங்கள் வசம் உள்ள பாண்ட் எந்த சீரிஸைச் சேர்ந்தது மற்றும் அது இன்று வெளியேறுவதற்குத் தகுதியானது தானா என்பதை உங்கள் முதலீட்டுச் சான்றிதழை (Holding Certificate) வைத்துச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

சவரன் கோல்டு பாண்ட்: முன்கூட்டியே வெளியேறும்போது விலை எப்படி கணக்கிடப்படுகிறது?
இந்தத் திட்டத்தில் வெளியேறும் விலை, இந்தியா புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் லிமிடெட் (IBJA) நிர்ணயிக்கும் விலையின் அடிப்படையில் அமையும். நீங்கள் வெளியேறும் தேதிக்கு முந்தைய மூன்று வேலை நாட்களின் தங்கத்தின் சராசரி விலையை ரிசர்வ் வங்கி கணக்கில் எடுத்துக் கொள்ளும். இந்தத் தொகை, உங்கள் டிபாசிட்டரி கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள வங்கிச் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
முன்கூட்டியே வெளியேறும்போது கவனிக்க வேண்டிய வரி விதிமுறைகள்
தங்கப் பத்திரத் திட்டத்தில் ஆரம்பத்திலேயே முதலீடு செய்தவர்களுக்கு வரிச் சலுகைகள் மிக முக்கியமானது. இந்த விண்டோ மூலம் நீங்கள் வெளியேறினால், மூலதன ஆதாய வரி (Capital Gains Tax) செலுத்த வேண்டியதில்லை. ஆனால், இந்தச் சலுகை இரண்டாம் நிலை சந்தையில் (Secondary Market) பாண்டுகளை வாங்கியவர்களுக்குப் பொருந்தாது. தற்போது பாண்டுகளில் இருந்து வெளியேறுபவர்கள், அந்தத் தொகையை கோல்டு இடிஎஃப் (Gold ETF) அல்லது ஃபிக்சட் டெபாசிட்களில் மறுமுதலீடு செய்து லாபம் ஈட்டலாம்.
பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்கும் முன், உங்கள் நாமினேஷன் விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். விவரங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால், பணம் வந்து சேருவதில் தாமதம் ஏற்படலாம். வட்டி வழங்கப்படும் தேதியிலிருந்து ஒரு வாரத்திற்குள் உங்கள் பணம் கைக்கு வந்துவிடும். தங்கத்தின் விலை உச்சத்தில் இருக்கும் இந்தச் சூழலில், பணத்தேவை இருப்பவர்களுக்கு இந்த வாய்ப்பு ஒரு வரப்பிரசாதமாகும்.


Click it and Unblock the Notifications