இன்று நாட்டில் பல பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளும் மூத்த குடிமக்களுக்கான பல சிறப்பு வைப்ப நிதி வைத்துள்ளன.
அவற்றில் மூத்த குடிமக்களின் நலன் கருதி வட்டி விகிதத்தில் சலுகை, கட்டணங்கள் குறைவு என பற்பல சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன.
அதே போல மூத்த குடி மக்களும் தங்கள் வாழ்வாதரத்திற்கு அடிப்படையாக இருக்கும் தொகையை, ஒரு முதலீடாக செய்கின்றனர். ஆக அதனை பாதுகாப்பான ஒரு முதலீடாக செய்ய நினைக்கின்றனர். அந்த வகையில் மூத்த குடி மக்கள் மத்தியில் மிக பிரபலமாக இருப்பது வங்கி வைப்பு நிதிகள் தான்.
வைப்பு நிதி ஏன்?
ஏனெனில் இன்றைய நெருக்கடியான காலக்கட்டத்திலும் கூட சந்தைக்கு ஏற்றத்தினால் பாதிக்கப்படாமல் உள்ளது. குறைவான வட்டியானலும் நிரந்தர வருமானமாக உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்புக்கு எந்த பங்கமும் இல்லாமல் உள்ளது. அதிலும் சில வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு சிறப்பான திட்டங்களை வழங்கி வருவது, இன்னும் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
சிறப்பு வைப்பு நிதி திட்டங்கள்
அதிலும் கடந்த ஆண்டு கொரோனாவின் முதலாம் அலைக்கு மத்தியில் எஸ்பிஐ, ஹெச். டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உள்ளிட்ட வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு சில சலுகைகளை வாரி வழங்கின. இது கடந்த மே 2020ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சிறப்பு வைப்பு நிதி திட்டங்கள் ஜூன் 30ல் முடிவடையவுள்ளன.
என்னென்ன சலுகைகள்
மூத்த குடி மக்களுக்கான இந்த சிறப்பு வைப்பு நிதி திட்டத்தில், மற்றவர்களுக்கு வழங்கப்படும் வட்டி சலுகையுடன் சேர்த்து, கூடுதலாக 0.50% சலுகையாக அளிக்கப்படுகிறது. தற்போது மிகப்பெரிய கடன் வழங்கனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, முன்னணி தனியார் வங்கியான ஹெச். டி எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உள்ளிட்டவடை இந்த சிறப்பு எஃப்டி திட்டங்களை வழங்குகின்றன. இந்த திட்டங்கள் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கும்.
சலுகை நீட்டிப்பு
முன்னதாக 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மார்ச் 31, 2021 வரையில் இந்த சலுகையினை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் கொரோனாவின் இரண்டாம் அலைக்கு மத்தியில் ஜூன் 30 வரையில் இந்த சலுகையானது கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வீகேர் டெபாசிட் திட்டம்
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இருப்பினும், இந்தத் திட்டம் என்ஆர்ஐ மூத்த குடிமக்களுக்குப் பொருந்தாது. இத்திட்டத்தில் அதிகபட்சம் ரூ.2 கோடி வரையில் டெபாசிட் செய்யலாம். இத்திட்டத்துக்கான முதிர்வு காலம் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 10 ஆண்டுகள் ஆகும். மற்ற சேமிப்புத் திட்டங்களை விட இத்திட்டத்தின் கீழ் 0.8% அதிகமான வட்டி கிடைக்கும்.
ஹெச்.டி.எஃப்.சி பேங்க் சீனியர் சிட்டிசன் கேர் எஃப்டி
HDFC வங்கியில் மூத்த குடிமக்களுக்கான இந்த வைப்புகளில் 75 பிபிஎஸ் அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. இதில் என் ஐ ஆர்களுக்கு இந்த சலுகை கிடையாது. 60 வயதிற்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் இந்த சலுகையை பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் 5 கோடி ரூபாய் வரையில் டெபாசிட் செய்து கொள்ளலாம். இங்கும் 5 - 10 வருடம் வரையில் செய்து கொள்ளலாம்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் கோல்டன் இயர்ஸ்
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் கோல்டன் இயர்ஸ் வைப்பு நிதி திட்டத்தில், மற்றவர்களை காட்டிலும் கூடுதலாக 0.30% அதிகமாக வட்டி கிடைக்கும். இதில் 5 ஆண்டுக்கு மேலாக உங்கள் டெபாசிட் இருந்தால் மட்டுமே இந்த சலுகைகள் பொருந்தும். இது 2 கோடி ரூபாய்க்குள்ளான டெபாசிட்டுகளுக்கு பொருந்தும்.