குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டியது அவசியமான ஒன்று. அதிலும் பெண் குழந்தைகள் எனும்போது கட்டாயம் சேமிக்க வேண்டிய தேவை உள்ளது.
இன்றும் பல குடும்பங்களில் பெண் குழந்தைகள் பிறந்துள்ளது என்றாலே அந்த குடும்பத்தினர், தங்க நகைகள், ஆபரணங்கள், பிக்சட் டெபாசிட் என வாங்கி வைப்பார்கள். எனினும் இதில் போதிய வருமானம் கிடைக்கிறதா? என்றால் நிச்சயம் இல்லை.
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அப்படி இல்லை. பல்வேறு வகையான முதலீட்டு திட்டங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு என சில அஞ்சலக திட்டங்கள் உள்ளன. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு என பிரத்யேகமான ஒரு திட்டம் மட்டும் தான் உள்ளது. அது சுகன்யா சம்ரிதி திட்டமாகும்.
வரிச்சலுகை
இந்த திட்டத்தில் 80 சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய்க்கு வரிச்சலுகை கிடைக்கிறது. ஆக இது சிறந்த முதலீட்டு திட்டமாக மட்டும் அல்ல, வரிச்சலுகை பெற நினைப்போருக்கும் சிறந்த திட்டமாக பார்க்கப்படுகிறது. அதோடு இந்த திட்டத்தின் படி வட்டி விகிதம் 7.6% ஆகும்.
பணவீக்கத்திற்கு மேலாக வட்டி
தற்போது வழங்கப்பட்டு வரும் இந்த வட்டி விகிதமானது பணவீக்கத்திற்கு மேலாக வழங்கப்பட்டு வருகின்றது. இதில் பங்கு சந்தை அபாயம் இல்லை என்பதால், முதலீட்டுக்கு பங்கமில்லாமல், கணிசமான லாபத்தினை கொடுக்கிறது. இது பெண் குழந்தைகளின் வருங்காலத்திற்கு உதவியாக இருக்கும். ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். ஒரு குடும்பத்தில் இரு பெண் குழந்தைக்கு மட்டுமே இந்த கணக்கினை தொடங்க முடியும்.
முதிர்வு காலம் எப்படி?
இதில் குறைந்தபட்சம் 250 ரூபாயும், அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாயும் டெபாசிட் செய்து கொள்ளலாம். இந்த கணக்கினை பெண் குழந்தையின் 10 வயது வரையில் தொடங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் அல்லது 18 வயதுக்கு மேல் எப்போது திருமணம் ஆகிறதோ அப்போது முதிர்வடைகிறது. இதனை இடையில் பெண் குழந்தையின் உயர் கல்விக்காக பகுதி தொகையினை எடுத்துக் கொள்ள முடியும்.
ரூ.64 லட்சம் எப்படி?
மாதம் 12,500 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம், 21 வருடங்களுக்கு பிறகு , இடையில் எந்த தொகையும் இடையில் எடுக்கவில்லை எனில், 64 லட்சம் ரூபாய் பெற்றுக் கொள்ள முடியும். இந்த திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டி இருக்கும்.
முன் கூட்டியே திட்டமிடுங்கள்
இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்தில் இரு பெண் குழந்தைகளுக்கு கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் எந்தளவுக்கு முன் கூட்டியே தொடங்குகிறீர்களோ அந்தளவுக்கு பலன் உண்டு. உதாரணத்திற்கு உங்கள் பெண்ணுக்கு 10 வயதில் தான் முதலீடு செய்ய தொடங்குகிறீர்கள் என்றால் 11 வருடங்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும். இதே முன் கூட்டியே திட்டமிட்டால் அதிகம் முதலீடு செய்ய முடியும்.