நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், நிலையான வருமானம் தரும் முதலீட்டு திட்டங்கள் பற்றிய ஆர்வம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இளம் வயதிலேயே சேமிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எனும்போது, இன்னும் அதிகளவில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக பெண் குழந்தைகள் எனும்போதும் இன்னும் கூடுதலாக சேமிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
பெண் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அஞ்சலக திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்.
நிரந்தர வருமானம் தரும் திட்டம்
இது மற்ற முதலீட்டு திட்டங்களுடன் ஒப்பிடும்போது மிக நம்பிக்கையான திட்டமாக பார்க்கப்படுகிறது. நிரந்தர வருமானம் தரக்கூடிய, சந்தை அபாயம் இல்லாத ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது.
இந்த சுகன்யா சம்ரிதி திட்டத்தில் 10 வயதிற்கும் குறைவான குழந்தைகள், பாதுகாவலர் மற்றும் பெற்றோரின் துணையுடன் இணைந்து கொள்ளலாம். இதனை வங்கிகள் அல்லது அஞ்சலகங்கள் மூலம் இணைந்து கொள்ளலாம்.
குறைந்தபட்ச முதலீடு
ஒரு பெண் குழந்தையின் பெயரில் ஒரே ஒரு கணக்கு மட்டும் தொடங்கிக் கொள்ளலாம். ஒரு குடும்பத்தில் இரு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே தொடங்கிக் கொள்ள முடியும்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதலீடு செய்ய முடியும். அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம். இதில் 15 ஆண்டுகளுக்கு நீங்கள் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
முதிர்வு காலம்
இந்த கணக்கின் முதிர்வு காலம் 21 வருடங்கள் ஆகும். எனினும் 18 வயதிற்கு மேல் திருமணம் ஆனாலும் அந்த கணக்கு தானாகவே மூடப்படும். இதன் வட்டி விகிதம் தற்போதைய நிலவரப்படி 7.6% ஆகும்.
இந்த திட்டத்தில் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் வரிச்சலுகை உண்டு.
இடையில் பணம் எடுக்கலாமா?
பெண் குழந்தைகளுக்கான இந்த திட்டத்தில், அந்த பெண் 10 வகுப்பு முடிக்கும்போது கல்வி செலவினங்களுக்காக, நிலுவையில் 50% தொகையினை பெற்றுக் கொள்ளலாம்.
அதேபோல இந்த சேமிப்பு திட்டத்திற்கான முதலீட்டு தொகையினை ஒரே தவணையாகவோ அல்லது காலாண்டுக்கு ஒரு முறையோ? உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செலுத்திக் கொள்ளலாம்.
இடையில் முடித்துக் கொள்ளலாமா?
இந்த கணக்கினை தொடங்கப்பட்ட 5 ஆண்டுகள் கழித்து முடித்துக் கொள்ளலாம். எனினும் அக்கவுண்ட் ஹோல்டர் ஆபத்தான நோய் அல்லது பாதுகாவலர் இறந்து விட்டால் இந்த கணக்கினை இடையில் முடித்துக் கொள்ளலாம். !
இதற்கான பார்ம், பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்துக் கொடுக்க வேண்டியிருக்கும்.