மும்பை : கொரோனாவா? பொருளாதாரம் வீழ்ச்சியா? வேலையிழப்பா? என்று இதெல்லாம் ஒரு புறம் மக்களை வாட்டி வதைத்தாலும், சிலர் இதற்கெல்லாம் கவலைப்படுவதில்லை.
ஏனெனில் அவர்கள் தங்கள் வரும் காலத்திற்காக வங்கிகள் வைப்பு நிதியினை போட்டு வைத்துள்ளனர். அதனால் வரும் வட்டி வருவாயின் மூலம் காலம் தள்ளுகின்றனர்.
இப்படி வட்டியை நம்பி மட்டுமே வாழ்பவர்களுக்கு இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக எஸ்பிஐ வட்டியை குறைத்துள்ளது.
வட்டி குறைப்பு
இன்றைய காலத்தில் பெரும்பாலான மூத்த குடிமக்கள் தங்கள் வாழ்வதாரமாக கொண்டுள்ளது வங்கி வைப்பு நிதியையே. அதில் வரும் வட்டி வருவாயே பலருக்கு அடிப்படை ஆதாரமாக உள்ளது. இந்த நிலையில் எஸ்பிஐ கடன்களுக்கான வட்டியை இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக குறைத்துள்ளது. இந்த நிலையில் அதனை ஈடுகட்டும் விதமாக வங்கியில் வைப்பு நிதி வைத்திருக்கும் இருப்பு தொகைக்கு கொடுக்கும் வட்டி விகிதத்தையும் குறைத்துள்ளது.
யாருக்கு பாதிப்பு?
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வங்கியில் சேமிப்பு கணக்கில் ஒர் லட்சம் ரூபாய் வரை வைத்திருக்கும் டெபாசிட் தொகைக்கு, வட்டி விகிதத்தை 3%ல் இருந்து 2.75% ஆக குறைத்துள்ளது. இந்த புதிய விகிதமானது ஏப்ரல் 15ல் இருந்து அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது சுமார் இவ்வங்கியில் 44.51 கோடி பேரினை பாதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ரெபோ விகிதம் குறைப்பு
கொரோனாவின் தாக்கம் உலகம் முழுக்க பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் கொரோனாவின் தாக்கத்தினை எதிர்கொள்ள ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, கடந்த வாரம் தான் வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தினை, அதாவது ரெபோ விகிதத்தினை 75 அடிப்படை புள்ளிகள் குறைத்தது.
மீண்டும் வட்டி குறைப்பு
இதனையடுத்து நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கடனுக்கான வட்டி விகிதத்தினை 75 அடிப்படை புள்ளிகளை குறைத்தது. இந்த நிலையில் கடன்களுக்கான வட்டி விகிதம் அப்போது குறைக்கப்பட்டது. அப்போதும் வைப்பு நிதிக்கும் வட்டி குறைக்கப்பட்டது. இந்த நிலையில் செவ்வாய்கிழமையன்று மீண்டும் எம்சிஎல்ஆர் விகிதத்தினை 35 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா.
வட்டி விகிதம் குறையும்
இவ்வாறு வட்டிக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதால் கடன்களுக்கான இஎம்ஐ விகிதம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது எஸ்பிஐ வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக வட்டி குறைப்பினால் வீட்டுக் கடன், வாகன கடன், தனி நபர் கடன் என அனைத்துக்கு வட்டி விகிதம் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வங்கி வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் கடந்த மார்சிலேயே வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கான புதிய வட்டி விகிதம்
7 முதல் 45 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு- 3.50%
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு- 4.5%
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில்- 5%
211 நாட்கள் முதல் 1 வருடத்துக்கும் குறைவான வைப்புத் தொகைக்கு- 5%
1 வருடம் முதல் 2 வருடத்துக்குள் - 5.7%
2 வருடம் முதல் 3 வருடத்துக்குள்- 5.7%
3 வருடம் முதல் 5 வருடத்துக்குள்- 5.7%
5 வருடம் முதல் 10 வருடம் வரையில்- 5.7%
மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம்
7 முதல் 45 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு- 4%
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு- 5%
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில்- 5.50%
211 நாட்கள் முதல் 1 வருடத்துக்கும் குறைவான வைப்புத் தொகைக்கு- 5.50%
1 வருடம் முதல் 2 வருடத்துக்குள் - 6.20%
2 வருடம் முதல் 3 வருடத்துக்குள்- 6.20%
3 வருடம் முதல் 5 வருடத்துக்குள்- 6.20%
5 வருடம் முதல் 10 வருடம் வரையில்- 6.20%