நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் வட்டி விகிதத்தில், 30 அடிப்படை புள்ளிகளை வரை சலுகையை அறிவித்துள்ளது.
இந்த வட்டி குறைப்பானது வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோர் அடிப்படையிலும், கடன் தொகை அடிப்படையிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு மெட்ரோ நகரங்களில் கிடைக்கும் இந்த சலுகையானது, 5 கோடி ரூபாய் வரையில் பெறும் வீட்டுக்கடனுக்கும் பொருந்தும் என்றும் இவ்வங்கி வெளியிட்டுள்ளது.
வீட்டுக் கடனுக்கான வட்டி தள்ளுபடி
இதுகுறித்து எஸ்பிஐ வங்கி தரப்பில் வெளியான அறிக்கையில், வீட்டுக்கடனை ஊக்குவிக்கும் வகையில், இந்த வட்டி சலுகைகளை அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேற்கூறியது வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோரின் அடிப்படையிலும், அவரவர் வாங்கும் வீட்டுக்கடன் அடிப்படையிலும் இந்த சலுகை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘எங்கெங்கு சலுகை?
எஸ்பிஐ-யின் இந்த சலுகையானது முக்கிய 8 நகரங்களில் மட்டுமே கிடைக்கும் எனவும் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் அது எந்தெந்த நகரங்கள் என விரிவாகக் கொடுக்கப்படவில்லை. ஆக இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் வாடிக்கையாளர்கள், அருகில் உள்ள வங்கியினை நாடி விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
பெண்களுக்கு என்ன சலுகை?
வீட்டுக்கடனுக்கான விண்ணப்பிக்கும் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக வட்டி விகிதத்தில் கூடுதலாக 0.05% தள்ளுபடி கிடைக்கும். எஸ்பிஐ தற்போது 30 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு வட்டி விகிதம் 6.80 சதவீதம் வட்டியினை வழங்குகிறது. இதே 30 லட்சம் ரூபாய்க்கு மேல் வீட்டுக்கடனிற்கு 6.95% ஆக வட்டி விகிதம் இருக்கும். எனினும் வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோரினை பொறுத்து இந்த வட்டி விகிதம் இருக்கும்.
செயலாக்க கட்டணம் தள்ளுபடி
எஸ்பிஐ தனது செயலாக்க கட்டணத்தில் 100 சதவீதத்தினை தள்ளுபடியை வழங்குகின்றது. இதே பேலன்ஸ் பரிமாற்றத்திற்கு 0.05% தள்ளுபடியும், இதே டிஜிட்டல் தளங்கள் வாயிலாக விண்ணப்பம் செய்பவர்களுக்கு 0.05% தள்ளுபடியும் வழங்கும் எனவும் அறிவித்துள்ளது. அதோடு இந்த சலுகைகள் மார்ச் 21 வரை கிடைக்கும் எனவும் எஸ்பிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து சலுகை
எஸ்பிஐ-யின் நிர்வாக அதிகாரி சி.எஸ்.ஷெட்டி இது குறித்து கூறுகையில், எஸ்பிஐயின் மலிவான வீட்டுக் கடன் மூலம், வீடு வாங்குபவர்கள் தங்கள் கனவை நனவாக்க முடியும். தற்போது தேவை அதிகரித்து வருகிறது. இதனால் எஸ்பிஐ தொடர்ந்து தனது சலுகைகளை வழங்கி வருகின்றது. இது வாடிக்கையாளர்களுக்கு இப்படியொரு சலுகையை கொடுப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றும் ஷெட்டி கூறியுள்ளார்.