இந்திய பங்கு சந்தையில் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் பலத்த சரிவினைக் கண்டு, பின்னர் தொடர்ந்து உச்சம் காணத் தொடங்கியது. இந்த காலகட்டத்தில் சென்செக்ஸ், நிஃப்டி கூட புதிய உச்சத்தினை தொட்டன.
எனினும் கடந்த சில வாரங்களாகவே பெரியளவில் மாற்றமின்றி ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன. இந்நிலையில் மகாநகர் கேஸ் விலையானது தற்போது 52 வார குறைந்தபட்ச விலையில் உள்ளது.
இது தற்போது 918 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. இதன் 52 வார உச்சம் 1,284 ரூபாயாகும். இந்த நிலையில் இந்த பங்கினை வாங்கி வைக்கலாமா நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
தற்போதைய நிலவரம்
மகாநகர் கேஸ் பங்கின் விலையானது என்.எஸ்.இ-யில் கடந்த அமர்வில் 0.15% அதிகரித்து, 915.35 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார குறைந்தபட்ச விலை 887.10 ரூபாயாகும். இதே 52 வார உச்ச விலை 1284.40 ரூபாயாகவும் உள்ளது.
இதே போல பிஎஸ்இ-ல் 0.24% அதிகரித்து, 916.20 ரூபாயாக கடந்த அமர்வில் முடிவடைந்துள்ளது. இதன் 52 வார குறைந்தபட்ச விலை 887.60 ரூபாயாகும். இதே 52 வார உச்ச விலை 1284.45 ரூபாயாகவும் உள்ளது.
இந்த விலையில் வாங்கலாமா?
தற்போதைய நிலவரப்படி, இந்த பங்கின் விலையானது சரிவில் காணப்படும் நிலையில் வாங்கலாமா? ஏன் இந்த பங்கினை வாங்கலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன, வாருங்கள் பார்க்கலாம். தற்போது குழாய் மூலம் அனுப்பப்படும் இயற்கை எரிவாயு கலாச்சாரம் வளர்ச்சி கண்டு வருகின்றது. இது எதிர்காலத்தில் இன்னும் வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
CNG பயன்பாடு அதிகரிப்பு
மேலும் CNG மூலம் இயக்கப்படும் பஸ்கள் போன்ற வாகனங்களின் எண்ணிக்கை கூட எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கலாம்.
பிரபு தாஸ் லில்லாதேர் அறிக்கையின் படி செப்டம்பர் காலாண்டில் 2,500 - க்கும் மேற்பட்ட வணிக வாகனங்கள் CNG-க்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் மகாநகர் கேஸ் இந்த வளர்ச்சியினை ஊக்குவிக்கும் திட்டங்களை வழங்க திட்டமிடுள்ளது.
ஏன் வாங்க வேண்டும்?
பொருளாதாரம் வளர்ச்சி குறித்தான காரணிகள் தற்போது படிப்படியாக தொடங்கப்பட்டு வருகின்றன. தற்போது மத்திய, மாநில அரசுகளும் பெட்ரோல் டீசலுக்கு மாற்றினை எதிர்பார்த்துக் கொண்டுள்ளன. இதன் காரணமாக அரசினால் புதிய CNG பேருந்துகள் இயக்கப்படலாம். இது தவிர வணிகம் போன்ற மற்ற வாகன துறைகளிலும் இது விரிவாக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் அரசின உந்துதல் மூலம் இதன் தேவை எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை அதிகரிக்கலாம்
ஆக இதன் வளர்ச்சி விகிதம் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு காலாண்டுகளில் இந்த பங்கின் இபிஎஸ் (EPS) விகிதம் 20.66 ரூபாய் மற்றும் 20.88 ரூபாயாக உள்ளது. இது கேஸ் விலை அதிகரிப்பினால் ஏற்றம் கண்டுள்ளது. இந்த நிறுவனம மோனோபோலியாக இந்த துறையில் வளர்ச்சி கண்டு வரும் நிலையில் எதிர்காலத்திலும் நல்ல ஏற்றம் காணலாம் என பங்கு சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.