ஒரு காலத்தில் கிரெடிட் கார்டு பெற யோசித்தவர்களும் இப்போது தயக்கமின்றி பயன்படுத்தி வருகின்றனர். கிரெடிட் கார்டுக்கு வழங்கப்படும் ரிவார்டு பாயிண்டுகளுக்காகவே சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகளை வைத்திருக்கின்றனர். கிரெடிட் கார்டு கடன்களுக்கு பிற கடன்களைக் காட்டிலும் 2 மடங்கு அதிக வட்டி வசூலிக்கப்படுகிறது. ஒரு சில வங்கிகள் 32 முதல் 45 சதவீதம் வரை வருடாந்திர வட்டி வசூலிக்கின்றன.
ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்டை வைத்து செலவு செய்தால் முழு நிலுவைத் தொகையையும் செலுத்த வேண்டும். மறு மாதத்திற்கு மாதத் தவணையை கொண்டு செல்வது உங்களை தீராத கடன் வலையில் தள்ளிவிடும்.
கிரெடிட் கார்டு பயனர்கள் மினிமம் டியூ என்று சொல்லப்படுகிற குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்தினால் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வீணாக வங்கிக்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதனால் கடன் சுமை அதிகரிப்பதோடு அதை முழுமையாக அடைப்பதே சிரமமாக மாறிவிடும்.

லெண்டிங் ட்ரீ என்ற நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வில் அமெரிக்காவைச் சேர்ந்த பலர் குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்தி வருவதாக கண்டறிந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஜென் Z தலைமுறையினர் இடையே இந்த பழக்கம் இன்னும் அதிகமாகவே இருப்பதாகத் தெரியவந்துள்ளது. சுமார் 58% ஜென் Z தலைமுறையினர் வருடத்திற்கு 20 சதவீத வட்டி விகிதத்தில் குறைந்த பட்ச தொகையை மட்டும் செலுத்தி வருகின்றனர். இதை தோராயமாக மதிப்பிடும்போது கடனை அடைக்க சுமார் 27 ஆண்டுகள் எடுக்கும்.
அமெரிக்கா மட்டுமின்றி இந்தியாவிலும் தற்போது கிரெடிட் கார்டு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே நீங்களும் இது போன்ற கடனில் சிக்க கூடாது என்றால் ஒரு சில விஷயங்களைக் கண்டிப்பாக பின்பற்றியாக வேண்டும்.
மினிமம் டியூவை தாண்டி கூடுதலாக பணம் செலுத்துங்கள்: ஒவ்வொரு மாதமும் மினிமம் டியூ என்று சொல்லப்படுகிற குறைந்தபட்ச நிலுவை தொகையை மட்டும் செலுத்தாமல் கூடுதல் தொகையை வரவு வையுங்கள். இதனால் வட்டி குறைந்து கடன் சீக்கிரம் அடையும்.
நிலுவைத் தொகையை EMI-யாக மாற்றிக் கொள்ளுங்கள்: கிரெடிட் கார்டு கடனின் நிலுவைத் தொகையை மாதத்தவனையாக மாற்ற உங்கள் வங்கியை அணுகலாம் அல்லது தனிநபர் கடன் பெற்று நிலுவை தொகையை முழுமையாக செலுத்தி விடலாம். ஏனெனில் கிரெடிட் கார்டு கடன்களை விட பர்சனல் லோன்களுக்கு வட்டி குறைவு.
ரிமைண்டர் ஆப்ஷன்: தவணை தேதி மறக்காமல் இருக்க ரிமைண்டர் ஆப்ஷனை பயன்படுத்தலாம் அல்லது உங்கள் பேமெண்ட்டை தானியங்கி முறையில் செலுத்தலாம். இதனால் தேதி தவறி பணம் செலுத்தும்போது விதிக்கப்படும் அபராதத்தை தவிர்க்க முடியும். ஏற்கனவே இதற்கு வட்டி அதிகம். இதைவிட அபராதமும் சேர்த்து செலுத்தினால் உங்களுக்கு தான் நஷ்டம் ஏற்படும்.
ஸ்நோபால் மெத்தட்: கிரெடிட் கார்ட் கடன்களோடு கூடுதலாக உங்களுக்கு சின்ன சின்ன கடன்கள் இருந்தால் அதை முடிக்க முயற்சி செய்யுங்கள். இதனால் பெரிய அளவிலான கடன்களை அடைக்க ஒரு வித நம்பிக்கை கிடைக்கும்.
பட்ஜெட் போடுங்கள்: ஒவ்வொரு மாதமும் பட்ஜெட் போட்டு செலவு செய்வதால் வீண் செலவு செய்வதைத் தவிர்க்க முடியும். எது அத்தியாவசிய தேவை, எதெல்லாம் தேவையில்லாத செலவு என்ற எல்லாவற்றையும் பட்டியலிட்டு செலவு செய்யுங்கள்.
பணப் பரிவர்த்தனைக்கு மாறுங்கள்: கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றை பயன்படுத்துவதற்கு பதிலாக கையில் பணமாக வைத்து செலவு செய்ய முயற்சி செய்யுங்கள். இதனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் பணத்தை எடுக்கும்போது அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்தி நிதி ஒழுக்கத்துடன் வாழ முடியும்.


Click it and Unblock the Notifications
