நம் நாட்டில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அரசாங்கமே செயல்படுத்தி வரும் மிக சிறந்த ஒரு சிறு சேமிப்பு திட்டம் 'சுகன்யா சம்ரித்தி யோஜனா' (SSY). இதனை நாம் தமிழ்நாட்டில் செல்வமகள் சேமிப்பு திட்டம் என அழைக்கிறோம். இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இந்த திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யும் பெற்றோர், தங்களுக்கு தெரியாமலேயே செய்யும் சிறு தவறுகள், முதிர்வு காலத்தில் பெரிய ரிட்டர்ன்ஸ் வராமல் தடுத்துவிடுகின்றன. எனவே செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யும் அனைத்து பெற்றோரும் பின்வரக் கூடிய 5 தவறுகளை சரி செய்தால் உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலம் இன்னும் பிரகாசமானதாக மாறும்.

முதலில் செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்து தெரிந்து கொள்ளலாம். 10 வயது உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் தங்களுடைய மகள்களின் பெயரில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாதித் தொகையை திரும்ப பெறலாம், அந்த குழந்தைக்கு 21 ஆண்டுகள் நிறைவடைந்த உடன் முழு தொகையும் திரும்பப் பெறலாம். படிப்பு முதல் திருமணம் வரையிலான செலவுகளை சமாளிக்கும் விதமாக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
குறைந்தபட்சம் 250 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை ஓர் நிதியாண்டில் நாம் முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீடுகளை குறிப்பிட்டு பெற்றோர் வருமான வரி விலக்கும் பெற முடியும். ஒரு குழந்தை பிறந்த உடனேயே மாதந்தோறும் முதலீடு செய்ய தொடங்கலாம். செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் நமது முதலீட்டுக்கு 8.2 % வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பெற்றோர் சில திருத்தங்களை செய்தால் போதும் அதிக ரிட்டர்ன்ஸ் எதிர்பார்க்கலாம்.
முதலீடு தேதி: இது பலரும் அறியாத ஒரு மறைமுகமான டிரிக். செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டியானது, ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்கும் அந்த மாதத்தின் கடைசி நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில் கணக்கில் இருக்கும் மிகக்குறைந்த இருப்பின் (Lowest Balance) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. எனவே, நீங்கள் ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்கு முன்பாக தொகையை செலுத்தினால் மட்டுமே அந்த மாதத்திற்கான வட்டி உங்களுக்கு கிடைக்கும். 5-ஆம் தேதிக்கு மேல் செலுத்தினால், அந்த மாதத்திற்கான வட்டியை நீங்கள் இழக்க நேரிடும். இது சிறிய தொகையாக தெரிந்தாலும், 15 ஆண்டுகள் முதலீடு மற்றும் 21 ஆண்டு கால அடிப்படையில் கூட்டு வட்டி பலனை பார்க்கும்போது, இது பல ஆயிரம் ரூபாய் இழப்பை ஏற்படுத்தும்.
தாமதமாக கணக்கை தொடங்குவது: பெண் குழந்தை பிறந்ததிலிருந்து 10 வயது வரை மட்டுமே கணக்கை தொடங்க முடியும். எனவே குழந்தை பிறந்த உடனே கணக்கை தொடங்கி முதலீடு செய்வது நல்லது. நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு ஆண்டும், அந்த முதலீட்டிற்கான கூட்டு வட்டி பலனை நீங்கள் இழக்கிறீர்கள். எனவே குழந்தை பிறந்தவுடனேயே கணக்கை தொடங்கி முதலீடு செய்வது முதிர்வு காலத்தில் அதிக லாபத்தை பெற்று தரும்.
முதலீட்டு வரம்பு: ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை மட்டுமே இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். பல பெற்றோர் இதைப் புரிந்துகொள்ளாமல், தவறுதலாக அதிக தொகையைச் செலுத்த முயற்சிப்பது அல்லது குறைந்தபட்ச தொகையை செலுத்த தவறி கணக்கை 'Default' நிலைக்குக் கொண்டு செல்வது போன்ற தவறுகளை செய்கின்றனர். அதாவது ஓர் நிதியாண்டு முழுவதும் பணமே போடாமல் விடுவதும் தவறு. எனவே குறைந்தபட்ச தொகையாவது முதலீடு செய்யுங்கள்.
முன்கூட்டியே பணம் எடுப்பது: குழந்தைக்கு குறிப்பிட்ட வயது வரம்பு எட்டுவதற்கு முன்பாகவே பணம் எடுப்பதை முடிந்த அளவுக்கு தவிர்ப்பது நல்லது. ஏனெனில் காம்பவுண்டிங் முறையில் பணம் வளர்வது தடைபட்டு முதிர்வு தொகை குறைந்துவிடும். எனவே இயன்ற வரை முதிர்வு காலம் வைத்திருந்தால் கூட்டு வட்டியின் மாயாஜாலம் உங்கள் பணத்தை பெருக்கி கொண்டே இருக்கும்.
தகவல்கள் அப்டேட் : செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் பெரும்பாலும் தபால் அலுவலகம் அல்லது வங்கிகளில் நிர்வகிக்கப்படுகின்றன. பல பெற்றோர்கள் தங்கள் முகவரி மாற்றம், தொடர்பு எண் மாற்றம் போன்றவற்றை முறையாக புதுப்பிப்பதில்லை. இது நீங்கள் திடீரென இந்த திட்டத்தில் இருந்து கல்வித் தேவைகளுக்காக பணம் எடுக்கும்போது பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


