பெண் குழந்தையை பெற்ற பெற்றோர்கள் அவர்களுடைய எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே சேமிக்க தொடங்கிவிடுகின்றனர். அரசு இதற்காக பல சேமிப்பு திட்டங்களை வழங்கினாலும்,பெண் குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக கொண்டுவரப்பட்ட செல்வமகள் சேமிப்பு திட்டம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த திட்டத்தின் கீழ் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கணக்கு தொடங்கி முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் மூலம் வெறும் ரூ.5000 முதலீடு செய்தாலே ரூ.9 லட்சம் வரை வருமானம் பார்க்க முடியும்.
கூட்டு வட்டி தரும் திட்டங்களில் அதிகபட்ச வட்டி வழங்கும் ஒரு திட்டம் என்றால் அது செல்வமகள் சேமிப்பு திட்டம் தான். தற்போது இந்த திட்டத்திற்கு 8.2 சதவீத வட்டி விகிதத்தை அரசு நிர்ணயித்திருக்கிறது. இந்த வட்டி விகிதமும் ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை மாற்றம் செய்யப்படும்.

இதை சுகன்யா சம்ரித்தி யோஜனா என்றும் அழைப்பார்கள். பெண் குழந்தை பிறந்து அந்த குழந்தைக்கு 10 வயது பூர்த்தியாவதற்குள் இந்தியாவில் உள்ள எந்த ஒரு போஸ்ட் ஆபீஸ் கிளையில் வேண்டுமானாலும் கணக்கு தொடங்கலாம். முழுக்க முழுக்க மத்திய அரசு திட்டம் என்பதால் உங்களுடைய பணத்திற்கு பாதுகாப்பான வருமானம் கிடைக்கும்.
ரிஸ்க் எடுத்து முதலீடு செய்ய விரும்பாத பெற்றோர்கள் இன்றளவும் இந்தத் திட்டத்தை தேர்வு செய்கின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீட்டுத் தொகையை ஒவ்வொரு மாதமும் கணக்கிட்டு அந்த நிதியாண்டின் இறுதியில் வட்டி தொகை வழங்கப்படும்.
வட்டி எப்படி கணக்கிடப்படுகிறது?: ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குப் பிறகு அந்த மாதத்தின் 30 அல்லது 31-ம் தேதிக்குள் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறதோ? அந்த தொகையை பொருத்தே வட்டி கணக்கிடப்படும். நீங்கள் உங்கள் கணக்கை வேறு ஒரு வங்கிக்கோ அல்லது அஞ்சல் அலுவலகத்திற்கோ மாற்றினாலும் சரியாக ஒரு நிதியாண்டின் இறுதியில் வட்டி கணக்கிற்கு வந்து விடும்.
மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம்?: செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் ஒரு நிதியாண்டுக்கு குறைந்தபட்சமாக 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
ரூ.5,000 முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று பார்ப்போம். 5000 ரூபாயை சேமித்து முதலீடு செய்தால் லட்சங்களில் வருமானம் பார்க்கலாம். தினசரி 166 ரூபாய் சேமித்தாலே மாதம் ரூ.5,000 வரும். அப்படியானால் ஆண்டுக்கு ரூ.60,000.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகள். ஆனால் 15 ஆண்டுகளுக்கு மட்டும் முதலீடு செய்தால் போதும். தொடர்ந்து 15 ஆண்டுகள் வரை முதலீடு செய்தால் ரூ.9 லட்சத்தை முதலீடு செய்திருப்பீர்கள். அதன் பிறகு 6 ஆண்டுகளுக்கு எந்த ஒரு முதலீடும் செய்யப்படாமலேயே வட்டி தொடர்ந்து கிடைக்கும்.
ஒருவர் 2026 ஆம் ஆண்டில் முதலீடு செய்ய தொடங்குகிறார் என்றால்.. 2047 ஆம் ஆண்டில் வருமானத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ரூ.9 லட்சத்தை தொடர்ந்து 15 ஆண்டுகள் முதலீடு செய்யும் பட்சத்தில் அதற்கு வட்டி வருமானமாக 19,72,848 ரூபாய் கிடைக்கும். இதனால் முதிர்வு காலத்தில் வட்டி மற்றும் அசல் ஆகிய இரண்டையும் சேர்த்து 28,72,848 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
