மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்கென கொண்டு வரப்பட்ட அசத்தலான திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்.
பெண் குழந்தைகளுக்கான இந்த திட்டமானது அவர்களின் பிறப்பு முதல் கொண்டு 10 வயது வரை முதலீடு செய்து கொள்ளும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது.
10 வயதிற்குள் உள்ள பெண் குழந்தைகள் என்பதால் பெற்றோர் அல்லது காப்பாளரின் உதவியுடன் இந்த கணக்கினை தொடங்க முடியும். இது பெண் குழந்தைகளின் எதிர்காலத்தினை காக்கும் விதமாக தொடங்கப்பட்ட ஒரு நல்ல திட்டம்.
வட்டி விகிதம் எவ்வளவு?
மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 வருடங்கள் அல்லது அந்த பெண் 18 வயதிற்கு மேல் திருமணம் ஆனாலும் அந்த கணக்கு தானாகவே மூடப்படும். இதற்கான வட்டி விகிதம் தற்போதைய நிலவரப்படி 7.6% ஆகும். இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் காலண்டுக்கு ஒரு முறை அரசால் மாற்றம் செய்யப்படும். இதில் பங்கு சந்தை அபாயம் இல்லை என்பதால், முதலீட்டுக்கு பங்கமில்லாமல், கணிசமான லாபத்தினை கொடுக்கிறது. இது பெண் குழந்தைகளின் வருங்காலத்திற்கு உதவியாக இருக்கும்.
வயது வரம்பு
அரசின் இந்த சேமிப்பு திட்டமானது பெண் குழந்தைகளுக்கானது. ஆக இந்த திட்டத்தில் பெண் குழந்தைகள் மட்டுமே இணைய முடியும். அதுவும் 10 வயதிற்குள் இருக்கும் குழந்தைகள் மட்டுமே இணைய முடியும். ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். ஒரு குடும்பத்தில் இரு பெண் குழந்தைக்கு மட்டுமே இந்த கணக்கினை தொடங்க முடியும்.
குறைந்தபட்சம் முதலீடு
பெண் குழந்தைகளுக்கான இந்த சேமிப்பு திட்டமானது பிறந்த உடனே கூட ஆரம்பித்துக் கொள்ளலாம் என்பதால், ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் வருடத்திற்கு 1.50 லட்சம் ரூபாய் வரையில் செலுத்திக் கொள்ளலாம். நீங்கள் இந்த கணக்கினை தொடங்கியதில் இருந்து குறைந்தது 15 வருடத்திற்கு செலுத்த வேண்டியிருக்கும்.
எப்படி தொடங்குவது?
அஞ்சலகமும், வங்கிகளிலும் இந்த சுகன்யா சம்ரிதி திட்டத்தினை வழங்குகின்றன. ஆக இந்தியாவில் உள்ள அஞ்சலகங்களில் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இந்த கணக்கினை தொடங்க முடியும். அப்படி இல்லையேல் பொதுத்துறை அல்லது தனியார் துறை வங்கிகள் மூலம் தொடங்கி கொள்ளலாம்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
குழந்தையின் பிறந்த தேதி, பிறப்பு சான்றிதழ் விவரங்கள், பெற்றோரின் அடையாள ஆவணங்கள், பான் எண் என பல விவரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.
இதனை கொடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு, அதனை சம்பந்தபட்ட அஞ்சல் அலுவலகத்திலோ அல்லது வங்கிகளிலோ கொடுத்து, அதனுடன் சரியான ஆவணங்களையும் இணைத்து இந்த கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம்.
இங்கு அடையாள அட்டையாக பெற்றோரின் ஆதார் அல்லது ஓட்டுனர் உரிமம், அடையாள ஆவணமாக பான் அட்டையும் கொடுத்துக் கொள்ளலாம்.
எப்படி பேலன்ஸை தெரிந்து கொள்வது?
உங்களது SSY கணக்கு எந்த வங்கிக் கிளையில் நிர்வகிக்கப்படுகிறதோ அந்த வங்கியின், நெட் பேங்கிங் மூலமாக எளிதாக நிலுவையை தெரிந்து கொள்ளலாம். அதற்காக உங்களது இணைய வங்கியிலேயே ஆப்சன் உண்டு. அப்படி இல்லாவிட்டால் பாஸ்புக் மூலமாகவும், நீங்கள் அவ்வப்போது கிளைக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
இதே அஞ்சல் அலுவலகத்தில் நீங்கள் கணக்கினை தொடங்கியிருந்தால், நேரடியாக அலுவலகத்திற்கு சென்று மட்டுமே பேலன்ஸினை தெரிந்து கொள்ள முடியும்.
வரி சலுகை உண்டா?
சுகன்யா சமிர்தி யோஜனா திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும் எந்தவொரு தொகையும் 80 சி பிரிவின் கீழ், அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் முதிர்வு மற்றும் வட்டித் தொகைக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.
முன் கூட்டியே பணம் பெறலாமா?
பெண் குழந்தையானது 18 வயதை அடைந்த பிறகே திரும்ப பெற முடியும். ஆனால் அதுவும் நிலுவையில் 50% தொகையினை குழந்தையின் கல்விச் செலவினங்களுக்காக பெற்றுக் கொள்ள முடியும்.
ஒரு வேளை உங்களது சுகன்யா சம்ரிதி கணக்கினை இடையில் தொடராவிட்டால், 15 வருடங்கள் கழித்து வட்டியுடன் திரும்ப பெற முடியும்.
மீண்டும் தொடங்க முடியுமா?
ஒரு வேளை உங்களது சுகன்யா சம்ரிதி கணக்கினை இடையில் தொடராவிட்டால், அதனை நிச்சயம் மீண்டும் தொடங்கிக் கொள்ள முடியும். அதற்கு குறிப்பிட்ட தொகை அபாரதம் விதிக்கப்படும். இந்த அபராதத்தினை செலுத்தி விட்டு மீண்டும் கணக்கினை தொடரலாம்.
ஆக குறிப்பிட்ட காலம் செலுத்திவிட்டு, தவிர்க்க முடியாத காரணங்களால் இடையில் முதலீட்டினை தொடர முடியாமல், பின்னர் தொடரலாம் என நினைப்பவர்களுக்கு இது மிக உபயோகமாக இருக்கும்.
எந்த பகுதிக்கும் மாற்றிக் கொள்ளலாம்
உங்களது எஸ்.எஸ்.ஓய் கணக்கிணை ஒரு கிளையில் இருந்து இன்னொரு கிளைக்கு மாற்றிக் கொள்ள முடியும். அதுவும் இந்தியாவின் வேறு எந்தவொரு பகுதிக்கும் மாற்றிக் கொள்ள முடியும். இதற்காக நீங்கள் டிரான்ஸ்பர் விணப்பத்தினை பூர்த்தி செய்து, உங்களது கணக்கு நிர்வகிக்கப்படும் சம்பந்தபட்ட கிளையில் கொடுத்தால் போதுமானது.
முதிர்வு காலத்திற்கு முன்பே முடித்துக் கொள்ளலாமா?
எதிர்பாராத விதமாக ஏற்படும் முக்கிய காரணங்களுக்கான உங்கள் கணக்கினை முதிர்வு காலத்திற்கு முன்பே மூடிக் கொள்ளலாம். அதாவது தீவிர நோய், அல்லது முதன்மை கணக்கு வைத்திருப்பவர் ஒரு வேலை எதிர்பாராத விதமாக இறந்து விட்டால், கணக்கினை முடித்துக் கொள்ளலாம். குழந்தையின் பெண் குழந்தையின் மேற்படிப்பு செலவுக்கு பணம் தேவையென்றால், 18 வயது நிரம்பியவுடன் 50% சேமிப்பு நிதியை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
கடன் வாங்க முடியுமா?
சில திட்டங்களில் முதலீட்டிற்கான ஆதாரத்தினை காட்டி கடன் வாங்க முடியும். ஆனால் பெண் குழந்தைகளுக்கான திட்டத்தில் அப்படி கடன் வாங்க முடியாது. அதுவும் ஒரு வகையில் நல்ல விஷயம் தான். அஞ்சலக திட்டங்களில் அதிக வட்டி கொடுக்கும் இந்த திட்டம் அனைவரும் யோசிக்க வேண்டிய திட்டம் தான்.