வங்கியில் வருடம் வெறும் 12 ரூபாய் கட்டினால் இறப்பின் போது இரண்டு இலட்சம் ரூபாய் வரை க்ளைம் பெறும் அரசின் இன்சூரன்ஸ் பற்றி தெரியுமா உங்களுக்கு? வாருங்கள் அதனை பற்றித் தான் பார்க்க போகிறோம்.
பொதுவாக இன்சூரன்ஸ் என்றாலே, நான் நல்லாத்தானே இருக்கிறேன். எனக்கு எதுக்கு இன்சூரன்ஸ் என்று கேட்பவர்கள் தான் இங்கு அதிகம்.
அதோடு இன்சூரன்ஸ் என்றாலே, பல ஆயிரம் செலுத்த வேண்டியிருக்கும். இருக்கும் செலவில் அதற்கு எதற்கு செலவு என்று நினைப்பவர்களும் உண்டு. அதிலும் கீழ்தட்டு மக்களில் பலர் இதனை கருத்தில் கொள்வதே இல்லை.
ஆனால் அப்படியானவர்களுக்கு தான், அரசு ஒரு சூப்பர் திட்டத்தினை கொண்டு வந்துள்ளது.
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம்
சரி அரசின் இந்த இன்சூரன்ஸ் திட்டம் பற்றி விரிவாக பார்க்கலாம் வாருங்கள். பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா எனப்படும் காப்பீடு திட்டமானது, பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்துடன் இணைந்து 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். அதெல்லாம் சரி எப்படி இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்? யார் யார் விண்ணப்பிக்கலாம்.
இன்சூரன்ஸ் க்ளைம் எவ்வளவு?
அரசின் இந்த இன்சூரன்ஸ் திட்டம் மத்திய அரசால் வழங்கப்படும் ஒரு குறுகிய கால காப்பீட்டு திட்டமாகும். இது விபத்து காரணமாக இறப்போ அல்லது உடல் ஊனமோ ஏற்பட்டால் வழங்கப்படும் ஒரு காப்பீடாகும். இந்த இன்சூரன்ஸ் திட்டத்தின் படி, தனி நபர் இறப்பிற்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடும், இதே நிரந்தர ஊனத்திற்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடும், இதுவே உடல் ஊனத்திற்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படுகின்றது.
எவ்வளவு பிரீமியம்?
இந்த திட்டத்தில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவெனில் இன்சூரன்ஸ் பிரீமியம் தான். ஏனெனில் வருடத்திற்கு வெறும் 12 ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதுமானது. அதாவது மாதத்திற்கு வெறும் 1 ரூபாய் நீங்கள் செலவளித்தாலே போதுமானது.
வங்கிக் கணக்கு மிக அவசியம்
ஆனால் இந்த சூப்பரான இன்சூரன்ஸ் திட்டத்தில் நீங்கள் இணைய வேண்டும் எனில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கண்டிப்பாக வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும். அதோடு இந்தத் இன்சூரன்ஸ் திட்டத்தில் பங்கேற்க 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும். நீங்கள் இதற்கு தகுதியானவர் எனில், வங்கிகளை அணுகி அதற்கான விண்ணப்பத்தினை கொடுக்கலாம்.
எப்போது பிரீமியம் செலுத்த வேண்டும்?
இந்த காப்பீட்டுத் திட்டத்தின் பங்கேற்பவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 12 ரூபாய் மட்டும் பிரீமியம் செலுத்தினால் போதும். இந்த தொகையானது ஜூன் 1ம் தேதி முதல் மே 31ம் தேதிக்குள் உங்கள் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். முதல் ஆண்டில் பிரீமியம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கான இன்சூரன்ஸ் திட்டம், அடுத்த வருடத்தில் முதல் பருவத்திலிருந்து தொடங்கும்.
பிரீமியம் - ஆட்டோமேட்டிக் டெபிட்
இந்த திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் பெற வங்கியில் விண்ணப்பங்கள் சமர்பிக்கும் போதே, இன்சூரன்ஸ் திட்டத்திற்கான பிரீமியத்தை வங்கியே தானாக எடுத்துக்கொள்ளும் ஆட்டோமேட்டிக் டெபிட் முறையை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது ரூ 12 ஆனது மே 31 ம் தேதிக்கு முன்னர் உங்கள் வங்கி கணக்கிலிருந்து தானாகவே இன்சூரன்ஸ் திட்டத்திற்கு செலுத்தப்படும்.
தொகை இல்லையெனில் பாலிசி முடிவடைந்து விடும்
ஒரு வேளை உங்களுடைய கணக்கு கூட்டு வங்கிக் கணக்கில் (Joint Account) எனில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவருக்காகவும் 12 ரூபாய் எடுத்துக் கொள்ளப்படும். உங்கள் வங்கிக் கணக்கில் போதுமான நிலுவைத் தொகையை வைத்திருக்கவில்லை எனில், உங்கள் திட்டம் ரத்து செய்யப்படும். இது தவிர வங்கி கணக்கு மூடப்பட்டால் பாலிசி முடிவடையும். பிரிமீயம் டெபாசிட் செய்யப்படாவிட்டால் பாலிசியை புதுபிக்க முடியாது.
எந்தெந்த வங்கிகள் இணையலாம்?
இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் எந்தெந்த வங்கிகளில் இணைய முடியும். அலகாபாத் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, பாரதிய மஹிளா வங்கி, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, தேனா வங்கி, ஃபெடரல் வங்கி, ஹெச் டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிபிஐ வங்கி, இந்தஸிந்த் வங்கி, கேரளா கிராமின் வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் & சிந்த் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, சிண்டிகேட் வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, விஜயா வங்கி.
மற்ற விவரங்களுக்கு
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY)-க்கான படிவம் வெவ்வேறு இந்திய மொழிகளிலும் கிடைக்கிறது. இவற்றில் ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, பங்களா, கன்னடம், ஒடியா, மராத்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகியவை அடங்கும். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா தொடர்பான கூடுதல் தகவலுக்கு https://jansuraksha.gov.in/Forms-PMSBY.aspx என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.