இந்தியாவில் பல சேமிப்பு திட்டங்கள் உள்ளது என்பதும் அவ்வப்போது புதுப்புது சேமிப்பு திட்டங்கள் அறிமுகமாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
ஆனால் இதுவரை உள்ள சேமிப்பு திட்டங்களில் பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமான செல்வமகள் சேமிப்பு திட்டம் தான் அதிக வட்டி தரும் முதலீடாக கருதப்படுகிறது.
இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளுக்காக சேமித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தற்போது பார்ப்போம்.
செல்வமகள் சேமிப்பு திட்டம்
சுகன்யா சம்ரிதி யோஜனா என்று கூறப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. பெண் குழந்தைகளின் எதிர்கால கல்வி, திருமணம் உள்ளிட்ட தேவைகளுக்காக இந்த சேமிப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக வட்டி
இந்த திட்டத்தில் மற்ற முதலீடுகளில் கிடைப்பதைவிட அதிக வட்டி மற்றும் பாதுகாப்பு இருப்பதால் பெரும்பாலானோர் இந்த திட்டத்தில் இணைய ஒரு காரணமாக உள்ளது. இந்தத் திட்டத்தில் இணைய இந்திய மக்கள் ஆர்வத்துடன் இருக்கும் நிலையில் இந்த திட்டத்தில் அதிக கணக்குகள் தொடங்கி தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இதுவரை 26.03 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளது.
2 கணக்குகள்
இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் இரண்டு பெண் குழந்தைகள் பெயரிலும் தனித்தனியாக கணக்கு தொடங்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிக வட்டி காரணமாக கணக்கை முடிக்கும் போது மூன்று மடங்கு தொகை வரும் என்பதால் இந்த திட்டத்தில் சேர்ந்து பெண் குழந்தைகளின் பெற்றோர் பயன் பெற்று வருகின்றனர்.
எவ்வளவு முதலீடு செய்யலாம்?
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு சேரும் போது பெண் குழந்தைகளின் பெயர், பிறப்பு சான்றிதழ் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். குறைந்தபட்சம் 250 ரூபாய் அதிகபட்சம் ஒன்றரை லட்சம் வரை ஒவ்வொரு நிதி ஆண்டிலும் இந்த திட்டத்தின்படி முதலீடு செய்யலாம்.
வட்டி எத்தனை சதவீதம்?
இந்த திட்டம் தொடங்கப்பட்டபோது 9.1 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது என்பதும் இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது வட்டியை குறைத்ததன் காரணமாக தற்போது 7.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்தியாவில் இருக்கும் சேமிப்புத் திட்டங்களில் மிக அதிக வட்டி கிடைக்கும் திட்டம் இன்றைய நிலையில் இதுதான் என்பதால் பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
திருமணம் அல்லது உயர்கல்வி
இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் தங்களுடைய பெண் குழந்தைகள் 18 வயது முடிந்த உடன் திருமணம் அல்லது உயர் கல்விக்காக பணத்தை எடுத்துக்கொள்ளலாம். திருமணம் என்றால் முழு தொகையையும் எடுத்துக் கொள்ளலாம் என்பதும், உயர்கல்விக்காக என்றால் 50 சதவீதம் வரை பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எதிர்பாராத நிகழ்வு
ஒருவேளை பெண் குழந்தை எதிர்பாராத விதமாக இறக்க நேரிட்டால் உடனடியாக இந்த கணக்கு திட்டம் முடிக்கப்பட்டு அதில் உள்ள பணத்தை பெற்றோர்கள் எடுத்துக் கொள்ளலாம். அதேபோல் பெற்றோர் இறந்து விட்டால் குழந்தையால் ஒவ்வொரு மாதமும் பணத்தை கட்ட முடியாது என்பதால் கணக்கு மூடப்பட்டு அந்த பணம் அந்த குழந்தையிடம் அல்லது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். பெற்றோர் இறந்த பிறகும் அந்த குழந்தையின் பாதுகாவலர்கள் அல்லது குடும்பத்தினர் தொடர்ந்து கட்ட விரும்பினால் முதிர்வடையும் போது குழந்தையிடம் முழு தொகையும் ஒப்படைக்கப்படும்.
வருமான வரிச்சலுகை
இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை மற்றும் இதில் கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்பது கூடுதல் சலுகையாக பார்க்கப்படுகிறது. எனவே மற்ற சேமிப்பு திட்டங்களை விட செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மிகப்பெரிய அளவில் சலுகைகள் மற்றும் ஆதாயங்கள் இருப்பதால் ஒவ்வொரு பெண் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களும் தபால் நிலையங்களில் இந்த திட்டத்தில் ஆர்வத்துடன் சேர்ந்து வருகின்றனர்.