இன்றெல்லாம் யாரேனும் ஒருவராவது கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்து பில் செலுத்துவதை பார்க்க முடிகிறது. அந்த அளவுக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர். சரியாகப் பயன்படுத்தினால் கிரெடிட் கார்டைப் போல நன்மை அளிக்கும் விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது. அதுவே கிரெடிட் கார்டைத் தேவையற்ற செலவுகளுக்கு பயன்படுத்தினால் தீராத கடன் சுமையில் சிக்க வேண்டி வரலாம். கிரெடிட் கார்டு பில் செலுத்தும் போது 2 விஷயங்களைக் கவனித்தாக வேண்டும். ஒன்று மினிமம் டியூ (Minimum Due) மற்றொன்று டோட்டல் டியூ (Total Due) இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

மினிமம் டியூ மற்றும் டோட்டல் டியூ என்றால் என்ன?: உங்கள் கிரெடிட் கார்டு பில்லில் 2 முக்கியமான விஷயங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
டோட்டல் டியூ: நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட மாதத்தில் பயன்படுத்திய முழுத் தொகை தான் இது. இதை முழுவதுமாக செலுத்தி விட்டால் வட்டி எதுவும் கிடையாது.
மினிமம் டியூ: ஆனால் மினிமம் டியூ என்பது நீங்கள் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி செலவு செய்த மொத்த தொகையில் வெறும் 5% மட்டுமே. இதை கட்டினால் அந்த மாதத்திற்கு தாமதக் கட்டணங்கள் எதுவும் வராது.
மினிமம் டியூவை மட்டும் செலுத்தினால் போதும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றலாம். ஆனால் இதன் பின்னால் தான் பெரிய மர்மம் மறைந்துள்ளது. நீங்கள் இந்த குறைந்தபட்ச தொகையான மினிமம் டியூ தொகையை மட்டும் செலுத்தும் போது மீதமுள்ள தொகைக்கு உடனடியாக வட்டி சேரத் தொடங்கும். பிறக் கடன்களைக் காட்டிலும் கிரெடிட் கார்டு கடன்களுக்கு வட்டி விகிதங்கள் அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே.
பெரும்பாலும் கிரெடிட் கார்டு கடன்களுக்கு 30 சதவீதம் முதல் 45 சதவீதம் வரையிலான வட்டி வசூலிக்கப்படுகிறது. இதை ஒரு உதாரணத்தோடு பார்ப்போம். உங்கள் மாதாந்திர பில் 10,000 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். அதில் 5 சதவீதம் எனில் 500 மட்டும் செலுத்துகிறீர்கள் என்றால் மீதமுள்ள 9500 ரூபாய்க்கும் வட்டி சேரத் தொடங்கிவிடும். இதனால் உங்களுடைய கடன் பெரிதாகுமே தவிர குறையாது.
இது போன்ற ட்ராப்களில் சிக்கி எழ முடியாமல் தவித்தவர்கள் பலர். நீங்கள் மினிமம் தொகையை மட்டும் கட்டிக் கொண்டே இருந்தால் அசல் தொகை குறையவே குறையாது. இதற்கு வட்டி மேல் வட்டியை வங்கிகள் வசூலிக்கும். அதோடு மறுமாதம் நீங்கள் செய்யும் புதிய செலவுகளுக்கும் சேர்த்து வட்டி கணக்கிடப்படும். இதனால் நீங்கள் கிரெடிட் கார்டு வாங்கிய போது இருந்த தொகையை விட பல மடங்கு சேர்த்து வட்டியாக செலுத்த வேண்டியிருக்கும்.
இப்படியே கடன் குறையாமல் இருந்து கொண்டே இருப்பது மன உளைச்சலை தருவதோடு நிதி சுதந்திரத்தையும் பாதிக்கும். சிலர் தாமதக் கட்டணங்களைத் தவிர்க்கும் பொருட்டு மினிமம் டியூ தொகையை மட்டும் செலுத்துவார்கள். இது ஒரு வழக்கமான பழக்கமாக மாறாமல் இருப்பது நல்லது. அப்படி மாறினால் நீண்ட காலத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் அபாயமும் அதிகரிக்கும்.
எனவே எப்போதும் முழுத் தொகையையும் செலுத்தி கடனிலிருந்து விடுபட முயற்சி செய்யுங்கள். அது சாத்தியமில்லை என்றால் குறைந்தபட்ச தொகைக்கு மேல் அதிகமாக பணம் செலுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
கிரெடிட் கார்டுகள் ஒரு கத்தியை போன்றது என்று தான் சொல்ல வேண்டும். அதை சரியாக பயன்படுத்தினால் நிதி நலன் மேம்படும். அதுவே கவனக்குறைவாக பயன்படுத்தினால் நம்மை கடன் வலையில் சிக்க வைத்து விடும். உங்கள் உழைப்பின் ஊதியம் வங்கிகளுக்கே செல்லும் வட்டியாக மாறுவதை விட உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு பயன்படும் வகையில் இருப்பது நல்லது. உண்மையான நிதி சுதந்திரம் சம்பாதிப்பதில் மட்டும் கிடையாது. நம்மிடம் இருக்கும் கிரெடிட் கார்டுகள் மற்றும் சேமிப்பு ஆகியவற்றை சரியாக கையாள்வதில் தான் இருக்கிறது.


Click it and Unblock the Notifications