கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் வட்டி விகிதமானது குறைந்து வருகின்றது. இதனால் பல முதலீடுகள் வங்கிகளில் இருந்து வெளியேறி வருகின்றன.
ஏனெனில் முன்னணி வங்கிகளான ஹெச்டிஎஃப்சி வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகள் கூட, வருடத்திற்கு அதிகபட்சமாக 5.5% வட்டியினைத் தான் வழங்குகின்றன.
ஆனால் இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் அரசின் சில முதலீட்டு திட்டங்கள் 7 - 8% வரை வட்டி விகிதத்தினை வழங்குகின்றன. அதனை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம் வாருங்கள்.
பொது வருங்கால வைப்பு வட்டி விகிதம்
முதலாவதாக நாம் பார்க்கவிருப்பது அரசின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் தான். இது ஒரு 15 வருட திட்டமாகும். இந்த திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு 7.1% வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது.
பொது வருங்கால வைப்பு - பாதுகாப்பான முதலீடு
அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை அஞ்சலகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகளும் தொடங்கிக் கொள்ள முடியும். இந்த திட்டத்தில் வட்டி விகிதம் அதிகளவில் இருந்தாலும், இதில் உள்ள ஒரு மைனஸ் பாயிண்ட் என்னவெனில் 15 வருட கால திட்டம் என்பது. எனினும் மற்ற முதலீட்டங்களோடு ஒப்பிடும்போது நல்ல வருமானம் தரக்கூடிய பாதுகாப்பான முதலீடாகும்.
சுகன்யா சம்ரிதி திட்டத்தில் வட்டி விகிதம்
அடுத்ததாக நாம் பார்க்க விருப்பது சுகன்யா சம்ரிதி திட்டம். இது மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்கென கொண்டு வரப்பட்ட அசத்தலான திட்டம். பெண் குழந்தைகளுக்கான இந்த திட்டமானது அவர்களின் பிறப்பு முதல் கொண்டு 10 வயது வரை முதலீடு செய்து கொள்ளும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 வயதிற்குள் உள்ள பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர் அல்லது காப்பாளரின் உதவியுடன் இந்த கணக்கினை தொடங்க முடியும்.
சுகன்யா சம்ரிதி திட்டம் - வட்டி விகிதம்
இதற்கான வட்டி விகிதம் ஏப்ரல் - ஜூன் 2020 நிலவரப்படி 7.6% ஆகும். இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் காலண்டுக்கு ஒரு முறை அரசால் மாற்றம் செய்யப்படும். இது முதலீட்டுக்கு பங்கமில்லாமல், கணிசமான லாபத்தினை கொடுப்பதால், பெண் குழந்தைகளின் வருங்காத்திற்கு உதவியாக இருக்கும்.
மூத்த குடி மக்களுக்கான சேமிப்பு திட்டம் (senior citizens savings scheme)
மூத்த குடிமக்களுக்கான இந்த சேமிப்பு திட்டத்தில் வட்டி விகிதம் 7.4% ஆக வழங்கப்படுகிறது. இதுவும் மற்ற சேமிப்பு திட்டங்களைப் போன்றே காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படுகின்றது. இது மூத்த குடி மக்களுக்கான ஒரு நல்ல திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. 55 வயதுடைய முதியவர் இந்த கணக்கினை தொடங்கலாம். அதிகபட்சமாக 60 வயது வரை இந்த கணக்கினை தொடங்கிக் கொள்ள முடியும்.
மூத்த குடி மக்களுக்கான திட்டம் – எவ்வளவு முதலீடு?
இந்த கணக்கினை ஒய்வூதிய பயன்களைப் பெற்ற ஒரு மாதத்திற்குள் திறக்க வேண்டும். இதில் முதலீடு செய்யப்படும் தொகையானது ஓய்வுபெற்ற நன்மைகளை தாண்டக்கூடாது. இதே போல விஆர்எஸ் பெறுபவர்களும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து கொள்ளலாம்.