இன்றெல்லாம் பல்வேறு முதலீட்டு திட்டங்கள் வந்துவிட்டது. பங்குச்சந்தை முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் என எண்ணற்ற திட்டங்கள் இருந்தாலும் மக்கள் தங்களுடைய முதல் பாதுகாப்பாக இருக்கும் திட்டங்களைத் தான் முதலில் கருத்தில் கொள்கின்றனர். எனவே ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்காகவே இந்திய அரசு பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. பாதுகாப்பான திட்டம் என்று சொன்னவுடன் பலருக்கும் பிக்சட் டெபாசிட் திட்டம் நினைவிற்கு வரும். ஆனால் பிக்சட் டெபாசிட் திட்டங்களை விட அதிக வட்டியில் சில திட்டங்கள் இருக்கிறது. இந்த திட்டங்களுக்கு 7.5% முதல் 8.2 சதவீதம் வரை வட்டியும் வழங்கப்படுகிறது.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS): இந்தத் திட்டம் குறிப்பாக மூத்த குடிமக்களுக்காகவே வழங்கப்படும் திட்டமாகும். இதற்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இதில் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். நீங்கள் விருப்பப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து கொள்ளலாம்.
யாரெல்லாம் இணையலாம்?: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள் இணையலாம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY): சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் பெண் குழந்தைகளுக்காகவே உருவாக்கப்பட்ட பிரத்தியேக திட்டம். இதில் முதலீடு செய்பவர்களுக்கு அதிகபட்ச வட்டியான 8.2 சதவீதம் கிடைக்கும். இதனை செல்வமகள் சேமிப்பு திட்டம் என்றும் கூறுவர்.
தங்கள் வீட்டு செல்ல குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக சேமிக்க விரும்பும் பெற்றோர்களுக்கு இது மிகவும் பயனுள்ள திட்டம் என்றே சொல்லலாம். நீங்கள் இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சமாக 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகள். ஆனால் முதல் 15 ஆண்டுகள் மட்டுமே பணம் செலுத்தினால் போதுமானது. SSY திட்டத்தின் சிறப்பம்சம் என்ன தெரியுமா? இதில் கிடைக்கும் வருமானம் மற்றும் முதிர்வு தொகை இரண்டிற்கும் முழு வரி விலக்கு பெறலாம். முதல் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே பணம் செலுத்துவீர்கள். அதன் பிறகு மீதம் இருக்கும் 6 ஆண்டுகளுக்கு வட்டி மட்டும் குவிந்து கொண்டே இருக்கும். இதுவும் இத்திட்டத்தின் முக்கிய நன்மைகளுள் ஒன்று.
நேஷனல் சேவிங்ஸ் சர்டிபிகேட் (NSC): தேசிய சேமிப்பு பத்திரத் திட்டம் என்று சொல்லப்படும் இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற திட்டங்களும் இதுவும் ஒன்று. இத்திட்டத்தின் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள். குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு ஏதுமில்லை. எனவே நீங்கள் எவ்வளவு முதலீடு செய்கிறீர்களோ அதற்கு ஏற்றார் போல் வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தின் முக்கிய நன்மை என்னவென்றால் எப்படி வீட்டு பத்திரத்தை வங்கியில் அடமானம் வைக்கிறீர்களோ? அதே போல இதையும் தேவைப்பட்டால் அடமானம் வைத்து கடன் பெறலாம்.
கிசான் விகாஸ் பத்ரா (KVP): இந்தத் திட்டம் அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்படும் திட்டமாகும். தங்களுடைய முதலீட்டை இரட்டிப்பாக்க என்னும் முதலீட்டாளர்களுக்கு KVP திட்டம் ஏற்றது. ஏனெனில் நீங்கள் போடும் முதலீடு பெரும் 115 மாதங்களில் இரட்டிப்பாகும். அதாவது 9 ஆண்டுகள் 5 மாதங்களில் அப்படியே இரட்டிப்பாக பெற்றுக் கொள்ளலாம். உதாரணமாக ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தால், அதற்கு வட்டியாக ரூ.5 லட்சம் கிடைக்கும். 9 ஆண்டுகள் 15 மாதங்கள் கழித்து ரூ. 10 லட்சமாக பெற்றுக்கொள்ளலாம். கேவிபி திட்டத்திற்கு தற்போது 7.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. குறைந்த பட்சமாக 1000 ரூபாய் கூட முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு இதற்கு இல்லை. உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறதோ அதை முதலீடு செய்யலாம். ஆனால் தற்போது பண மோசடியை தடுப்பதற்காக ரூ. 50,000-த்திற்கும் மேற்பட்ட முதலீடுகளுக்கு பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட முதலீடு செய்யும் போது பே ஸ்லிப், பேங்க் ஸ்டேட்மெண்ட் மற்றும் ஐடிஆர் ஆவணங்கள் போன்றவையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஆர்பிஐ வழங்கும் ஃப்ளோட்டிங் ரேட் சேவிங்ஸ் பாண்ட்: ஆர்பிஐ மூலம் வழங்கப்படும் இந்தத் திட்டத்திற்கு தற்போது 8.05% வரை வட்டி வழங்கப்படுகிறது: இந்தப் பத்திரம் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவால் வழங்கப்படும் பத்திரமாகும். மத்திய அரசு ஆதரவு பெற்ற சிறு சேமிப்பு திட்டங்களில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறை ரெப்போ வட்டி விகிதத்தில் எப்படி மாற்றம் ஏற்படுகிறதோ? அப்போதெல்லாம் இந்த பத்திரங்களுக்கான வட்டி விகிதத்திலும் மாற்றம் ஏற்படும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 7 ஆண்டுகள். மற்ற திட்டங்களைப் போல முதலீட்டாளர்கள் முன்கூட்டியே இதன் மூலம் பணத்தை திரும்பப் பெற இயலாது. இதற்கு உச்சபட்ச முதலீட்டு வரம்பு எதுவும் இல்லை. இந்தியாவில் வசிக்கும் தனி நபர்கள் முதலீடு செய்யலாம். பத்திரங்களை ஒவ்வொரு வங்கியின் அப்ளிகேஷன் அல்லது இணையதளம் மூலமாக வாங்கலாம் அல்லது ஆர்பிஐ இணையதளம் மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications