உலகம் கடந்த 100 ஆண்டுகளில் கண்டிராத ஒரு மிகப்பெரிய சுகாதாரம் மற்றும் உடல்நல பாதிப்புகளைக் கொரோனா என்னும் கொடிய வைரஸ் மூலம் உலகம் முழுவதும் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டது.
மக்களைத் தொட்டுப் பேசுவதில் துவங்கி, ஒரு உணவகத்தில் அமர்ந்து சாப்பிடுவது எவ்வளவு முக்கியம் என்பதையும், இதேவேளையில் எவ்வளவு ஆபத்து என்பதையும் இந்த 2020 மக்கள் அனைவருக்கும் உணர்த்தியுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தனிநபர் பாதுகாப்பு, நிதியியல் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்துள்ளோம். இந்நிலையில் 2020 மூலம் அனைத்துத் தரப்பு மக்களும் கட்டாயம் உணரவேண்டிய சில முக்கியமான விஷயங்களைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
இன்சூரன்ஸ் கவர்
2020ல் கொரோனா மட்டும் அல்லாமல் வெள்ளம், புயல் என இயற்கை சீற்றங்கள் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டு உள்ளது. இந்த நிலையில் உங்களுக்கும், உங்களை நம்பியிருக்கும் குடும்பத்திற்கும் போதுமான காப்பீடு வைத்திருக்க வேண்டியது கட்டாயம்.
ஹெல்த் இன்சூரன்ஸ்
இதில் மிகவும் முக்கியமானது ஹெல்த் இன்சூரன்ஸ். இந்த வருடம் கொரோனா பாதிப்பால் பல லட்சம் பேர் தங்களது அடிப்படை நிதியியல் ஆதாரமாக இருக்கும் வேலைவாய்ப்பை இழந்து தவித்தனர். இத்தகைய மோசமான நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் குடும்பத்தின் நிலையை விவரிக்க முடியாது. எனவே கட்டாயம் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் கட்டாயம் தேவை.
வாகன காப்பீட்டு
பொதுவாக நம்முடைய வாகனங்களுக்கு வாங்கப்படும் காப்பீட்டில் புயல், மழை மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தால் ஏற்படும் வாகன பாதிப்புகள் அடங்காது. ஆகவே 3ஆம் தரப்பு காப்பீடு எடுக்க வேண்டியது கட்டாயம். குறிப்பாக மழை, வெள்ளம் மற்றும் புயலால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களில் இருப்பவர்களுக்கு இந்த 3ஆம் தரப்பு வாகன காப்பீடு அவசியம்.
இதேபோல் வீடு, வர்த்தகம் ஆகியவற்றுக்கும் இயற்கை சீற்றம் மற்றும் தீயால் ஏற்படும் பாதிப்புகளுக்குக் காப்பீடு உள்ளது.
அவசர நிதி
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த போது தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் அனைவரும் எதிர்கொண்ட பிரச்சனை அதிகளவிலான சிகிச்சை கட்டணம். இத்தகைய சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் செய்தது தங்களது பியூச்சர் சேமிப்பு, முதலீடு ஆகியவற்றை உடைத்துச் சிகிச்சை பெற்றனர். இதனால் இழப்பின் அளவு மிகவும் அதிகம்.
எனவே 2020ல் அவசரக் காலத் தேவைக்குப் பணத்தை எப்போதும் சேமித்து வைத்திருப்பது மிகவும் அவசியமாக உள்ளது.
வேலைவாய்ப்பு
இதேபோல் 2020ல் பல காரணங்களுக்காக மக்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் குடும்பச் செலவுகளை நிர்வாகம் செய்யப் போதுமான நிதியைச் சேமித்து வைத்திருப்பது கட்டாயம்.
பழக்கம்
இந்தக் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட நிதி நெருக்கடி மூலம் அவசர தேவைக்கான நிதியை எப்போதும் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்பதை உணர்ந்துள்ளோம். ஆனால் இந்த அவசர கால நிதியை ஓரே இரவில் சேர்க்க வேண்டும் என நீங்கள் நினைப்பது தவறு. ஒவ்வொரு மாதமும் சிறிது, சிறிதாகச் சேமித்தாலே போதுமானது. இது கண்டிப்பாக வாழ்க்கையில் பல முக்கியமானக் கட்டத்தில் பயன்படும்.
கடன்
கொரோனா பாதிப்புக் காலத்தில் கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்கள் நம்மில் பலர் இருப்போம். ஒருபக்கம் கொரோனாவால் வருமானம் குறைந்திருக்கும் நிலையில் கடன் சுமை மக்களின் வாழ்வை மிகவும் மோசமானதாக்கும்.
எனவே முடிந்த வரையில் பர்சனல் லோன், கிரெடிட் கார்டு போன்ற கடுமையான நிதிச் சுமைகளைக் குறைத்துவிடுங்கள்.
முதலீடு
எப்போதும் முதலீடு செய்யும் போது பல பிரிவுகளில் முதலீடு செய்யுங்கள். உதாரணமாக உங்களது முதலீடு அனைத்தும் பங்குச்சந்தையில் இருந்திருந்தால் கொரோனா காலத்தில் அதிகளவிலான வீழ்ச்சியை அடைந்தது பங்குச்சந்தையே .ஆனால் அதே சமயம் தங்கம் விலை உயர்ந்தது
எனவே எப்போதும் உங்கள் முதலீட்டை பல்வேறு பிரிவுகளில் முதலீடு செய்யுங்கள்.